சுழியத்தில் இருந்து தொடங்கும் மனித வாழ்க்கை, எண்பதில் தொடங்கி அப்படியே பின்னோக்கி நகர்ந்தால் எப்படி இருக்கும் என்ற தேடலின் பதில்தான் THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON என்ற இந்த திரைப்படம்.
படம் ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் டெய்சி தனது மகள் கேத்தரினிடம் ஒரு டைரியைக் கொடுத்து படிக்குமாறு கேட்கிறாள். அது பெஞ்சமின் பட்டனின் டைரி. பெஞ்சமினின் பின்னணிக் குரலில் விரிகிறது கதை…
80 வயதுக்குரிய தோற்றத்துடன் பிறக்கும் ஆண் குழந்தை, அதன் தந்தையாலேயே ஒரு முதியோர் காப்பகத்தில் கைவிடப்படுகிறது. அங்கிருக்கும் ஒரு கறுப்பினப் பெண் அவனை எடுத்து வளர்க்கிறாள். அவள்தான் அவனுக்கு “பெஞ்சமின்” என்று பெயரிடுகிறாள். இளம் வயதாக இருந்தாலும் தோற்றத்தில் முதியவனாக இருக்கும் பெஞ்சமின் தனது இளமைக் காலத்தை அனுபவித்து வளர்கிறான். அங்கே அவனுக்கு டெய்சி என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. இருவருக்கும் ஏறக்குறைய சம வயதாக இருந்தாலும் தோற்றத்தில் வேறுபட்டு இருக்கின்றனர்.
சில காலத்துக்கு பிறகு பெஞ்சமின் வேலை செய்ய போகிறான். அவனுக்கு கப்பல் ஒன்றில் வேலை கிடைக்கிறது. கப்பல் தலைவனுடன் நெருக்கமாகி விடும் பெஞ்சமினை தன்னுடனேயே வரும்படி அழைக்கிறான் கப்பல் தலைவன். இதற்கிடையில் பெஞ்சமினுக்கு ஒரு பெரிய பணக்காரனின் நட்பும் கிடைக்கிறது. கப்பல் வேலைக்குப் போவதற்கு முன்னர் அவனிடம் வரும் டெய்சி, அவன் எந்த நாட்டில் கரையிறங்கினாலும் அங்கிருந்து தனக்கொரு போஸ்ட் கார்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறாள். அவர்களது உறவு போஸ்காட்டிலேயே வளரத் தொடங்குகிறது.
ஒரு தங்கும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் பெஞ்சமினுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அந்த உறவு சில நாட்களிலேயே அற்றுப் போகிறது. பெஞ்சமின் மீண்டும் கப்பல் வேலைக்கு செல்கிறான். போர் சமயம் என்பதால் பெஞ்சமின் வேலை செய்த கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பெஞ்சமின் மீண்டும் தான் வளர்ந்த முதியோர் காப்பகத்திற்கு வருகிறான். அங்கே மீண்டும் டெய்சியைப் பார்க்கிறான். நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ள டெய்சி அவன் வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் அவனை விரும்புவதாக சொல்கிறாள். அதனை மறுத்து விடும் பெஞ்சமின், அவள் வயதுக்கேற்ற ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறுகிறான். இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
பெஞ்சமினுடன் நெருக்கமாக இருந்த பணக்கார நண்பன் மீண்டும் பெஞ்சமினைத் தேடி வருகிறான். வயதாகி மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவன், நான்தான் உன்னுடைய தந்தை என்று பெஞ்சமினிடம் கூறுகிறான். அதோடு தன்னுடைய பட்டன் தொழிற்சாலை உட்பட அனைத்து சொத்துக்களையும் பெஞ்சமின் பெயருக்கே எழுதி வைத்து விட்டு இறந்து போகிறான்.
மீண்டும் டெய்சியை காண விரும்பும் பெஞ்சமின் அவளைத் தேடிப் போகிறான். அவளுக்கு காதலன் இருப்பதையும் அவள் உலகம் முழுவதும் உள்ள மேடையில் நடனமாடுவதை லட்சியமாக வைத்திருப்பதை அறிந்துக் கொள்ளும் பெஞ்சமின் அவளை மீண்டும் பிரிந்து வருகிறான்.
ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் டெய்சிக்கு காலில் பலத்த அடிபடுகிறது. காலில் அடிப்பட்ட காரணத்தால் டெய்சி நடனத்தை மறக்க வேண்டியதாகிறது. மீண்டும் தான் வளர்ந்த முதியோர் காப்பகத்திற்கு வரும் டெய்சி பெஞ்சமினைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறாள். வாழ்கையின் மத்திய வயதில் இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். டெய்சி சொந்தமாக ஒரு நடனப்பள்ளியை தொடங்கி நடத்துகிறாள். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
சில மாதங்களிலேயே எதிர்காலத்தில் டெய்சி எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினையை புரிந்துக் கொள்ளும் பெஞ்சமின், தன்னுடைய மகளின் ஒரு வயது பிறந்த நாள் முடிந்த மறுநாள் அதிகாலையில், அவர்களை விட்டு பிரிந்து செல்கிறான். மகளுக்கு பதின்ம வயது நடக்கும் போது திரும்பி வரும் பெஞ்சமின், டெய்சி இன்னொரு திருமணம் செய்திருப்பதை அறிந்துக் கொள்கிறான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பெஞ்சமினை சிறுவனாகப் பார்க்கிறாள் டெய்சி. அப்போது அவன் முதிய வயதில் வரும் ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மற்ந்து விட்டிருக்கிறான். டெய்சியும் அவனுடனேயே தங்கியிருந்து அவனை பார்த்துக் கொள்கிறாள். காலங்கள் செல்ல செல்ல வயது குறைந்து கொண்டே வரும் பெஞ்சமின் இறுதியாக ஒரு கைக்குழந்தையாகி டெய்சியின் அணைப்பிலேயே இறந்து போகிறான்.
படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. ஆனால் அவ்வளவு நேரமும் கடந்து போனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிப் போக முடிகிறது. இந்த நீண்ட படத்தில் வருகின்ற எந்த கதாபாத்திரமும் சோடையானதாக இல்லை.
பெஞ்சமினின் வாழ்க்கை பயணம் முழுவதும் நம்மையும் கூடவே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பெஞ்சமினாக நடித்திருக்கும் BRAD PITT . அற்புதமான நடிப்பு. சிறு வயது தோழியாக இருந்து, காதலியாகி பின்னர் மனைவியாகி இறுதியில் தாயாகும் பாத்திரத்தை நெஞ்சை உருக்கும் வகையில் செய்திருக்கிறார் KATE BLANCHETT . அதிலும் கைக்குழந்தையான பெஞ்சமின் அவர் மடியில் இறந்து போகும் இடத்தில் எழுகின்ற உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மொத்தத்தில் DAVID FINCHER இயக்கியிருக்கும் திரைக் காவியம்தான் THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON.