பரபரப்பாக பேசப்பட்ட உலுசிலாங்கூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 5 நாட்களாகி விட்டன. இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பி.கமலநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்மை விட 1,725 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பி.கமலநாதனின் இந்த வெற்றியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இது மஇகாவிற்கோ அல்லது பி.கமலநாதனுக்கோ கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக கொண்டாட முடியாது. அம்னோ, டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் தான்ஸ்ரீ முஹிடீன் யாசின் ஆகியோரின் பலத்தினால்தான் மீண்டும் அங்கே மஇகா தலைதூக்க முடிந்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
தேர்தலில் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, மலாய் மற்றும் இந்திய வாக்காளர்களின் ஓட்டுகள் கணிசமான அளவு தேசிய முன்னணி பக்கம் சாய்ந்திருக்கிறது. ஆனால் சீனர்களின் ஓட்டுகள் இன்னமும் மக்கள் கூட்டணி பக்கம்தான் இருக்கிறது. நாங்கள் இன்னமும் எதிர்காலத்தை பற்றிதான் யோசிக்கிறோம் என்று சீனர்கள் சூசகமாக தேசிய முன்னணிக்கு சொன்ன செய்தியாகத்தான் இதனை நாம் கருத முடியும். அடுத்த பொதுத் தேர்தலுக்குள்ளாக தன்னை ஒட்டுமொத்த மலேசியர்களை பிரதிநிதிக்கும் கூட்டணியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை சீனர்கள் இதன் வழி தேசிய முன்னணிக்கு உறுதிபட தெரிவித்துள்ளனர். 1 மலேசியா கொள்கை மீதான சீனர்களின் சந்தேகமும் இதன் வழி தெரிய வந்துள்ளது.
உட்கட்சி கலவரத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக மீண்டு வருவதாக கூறிக்கொள்ளும் எம்சிஏவுக்கு கிடைத்த அபாய அறிவிப்பாக இந்த வாக்களிப்பு இருந்தாலும்… ஒட்டுமொத்தமாக எம்சிஏவின் மீதே எல்லாப் பழியையும் தூக்கிப் போட்டுவிட முடியாது. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக ஆளும் அரசு சீன சமூகத்திற்கு செய்து வந்திருக்கின்ற அனைத்து சேவைகளையும் மீண்டும் மறுபரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும். தவிர பெர்காசாவிற்கும் எம்சிஏவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத மோதல் சுகமாக முறையில் தீர்க்கப்பட வேண்டும்.
மலாய் வாக்காளர்களை பொருத்தவரை இந்த தேர்தலில் அவர்கள் அம்னோ பக்கம் மீண்டும் சாய்ந்ததற்கு ஒரேயொரு முக்கியமான காரணம்தான் உண்டு, அது டத்தோஸ்ரீ நஜீப். உலுசிலாங்கூர் தொகுதியில் விரவிக் கிடக்கும் பெல்டா திட்டம் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இப்போது அவரது மகனே ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தந்தை மீதான தங்களது விசுவாசத்தை புலப்படுத்தும் வகையிலும் தந்தையின் திட்டத்தை தனயன் கைவிட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் தங்களது வாக்குகளை தே.முன்னணி பக்கம் திருப்பியிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட்டது மலாய்க்காரரா? சீனரா? இந்தியரா? என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. துன் ரசாக்கின் மகன் ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறார், அவர் நமக்கெதாவது புதிய திட்டங்களை வகுப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்கள் தே.முன்னணி பக்கம் வந்துள்ளார்கள். ஆக மலாய் சமூகத்தின் ஓட்டுக்கு முழு ஆதாரம் டத்தோஸ்ரீ நஜீப்தான்.
நமது இந்திய வாக்காளர்களை பொருத்தவரை, இந்த இடைத்தேர்தலில் தங்களுக்கு கிடைக்கவிருக்கின்ற லாபத்தை அடிப்படையாக கொண்டுதான் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதிகள் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இவர்களின் வாக்குகள் மீண்டும் மக்கள் கூட்டணி பக்கம் சாய்ந்துவிடும் வாய்ப்புகள் மிக-மிக அதிகம்.
பொதுவாக சீனர்களைப் போல இந்திய வாக்காளர்கள் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு செயல்படுவதில்லை. அப்போதைக்கு தங்களுக்கு கிடைக்கின்ற லாபம், வாக்குறுதிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் மட்டும்தான் தேர்தலின் போது அவர்களின் வாக்களிப்பை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் இந்த இடைத்தேர்தலின் போது மக்கள் கூட்டணியை விட தேசிய முன்னணியே நிறைய வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது, பல வகைகளில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாகவும் சொல்லியிருக்கிறது. இந்த வாக்குறுதி மற்றும் செயல் திட்டங்கள் இந்த இடைத் தேர்தலின் வெற்றிக்கு உதவினாலும்… அடுத்த பொதுத் தேர்தலின் போதுதான் இந்தியர்களின் உண்மையான நிலைப்பாடு தெரிய வரும். இழந்து விட்ட இந்திய வாக்குகளை மீட்டு விட்டோம் என்ற எண்ணத்தில் பழையபடியே கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்து விட்டால் அதற்கான பலனை நிச்சயம் பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
இந்த இடைத்தேர்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ள டத்தோ ஸைட், தேசிய முன்னணி ஓட்டுகளை வாங்கி விட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். தவிர தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பணம் கொடுத்த ஓட்டுகளை வாங்க வேண்டிய நிலையில் தேசிய முன்னணி இல்லை என கூறியுள்ளார். தோல்வியைத் தழுவியவர்கள் இதுபோல கூறுவது இயல்புதான் என்றாலும், டத்தோ ஸைட் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய ஒன்றாகும். மிகவும் வெளிப்படையான ஆட்சியைத் தருவதாக உறுதி கூறியுள்ள நமது பிரதமர் இது பற்றி பரிசீலிப்பார் என நம்புவோம்.
எது எப்படியோ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. பி.கமலநாதனும் இப்போது எம்.பியாகி விட்டார். அடுத்த அவர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது இங்கே முக்கியமான கேள்வி. உலுசிலாங்கூர் தொகுதி முடிவு இன்னொரு ஈஜோக் முடிவு போல ஆகிவிடாமல் இருப்பதற்கு எம்.பி கமலநாதன் கடுமையாக உழைக்க வேண்டும். அவரது சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் பொதுத்தேர்தலின் போது அவரது நிலையை காப்பாற்றப் போகின்றன. அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்…