உங்களில் மாணவப் பருவத்தைப் பற்றிய ஞாபகங்கள் இல்லாதவர்கள் யாராவது உண்டா? பட்டாம்பூச்சி போல் கவலையின்றி திரிந்த அந்த வசந்த காலங்கள், இனியொரு முறை வாழ்வில் வருமா என்று ஏங்காத இதயம் உண்டா? வாழ்க்கையின் ஏதாவதொரு நொடியில், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நிகழ்காலத்திலிருந்து நம்மை பிரித்தெடுக்கும் அந்த ஈர நினைவுகள் நெஞ்சில் சொட்டு சொட்டாக விழுந்து, இன்பம் நிரப்பி சுகமான சுமையை விட்டுச் செல்லும்.
சில படங்களுக்கு இதுபோன்ற உணர்வை தட்டி எழுப்பக்கூடிய ஆற்றல் உண்டு. உதாரணம் ஆட்டோகிராஃப். அந்தப் படம்,
ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் நடந்த சம்பவங்களில் ஒரு பகுதியை மட்டும் காட்டிய படம் என்பதால் பள்ளிப் பருவ நினைவுகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராமல் அப்படியே வேறொரு பருவத்துக்கு தாவி விடும்.
ஆனால் சமீபத்தில் நான் பார்த்த Tare Zameen Par என்ற இந்திப் படம் நிச்சயம் நமது ஆழ்மனதில் இருக்கின்ற பழைய ஞாபகத் தந்திகளை மீட்டிச் செல்லும். அதிலும் நம்முடைய ஆசிரியர்களுடனான நமது உறவு குறித்த நினைவுகளையும் கண்முன் நிறுத்தும் என்பது நிச்சயம்.
இஷான் என்ற எட்டு வயது மாணவனுக்கு படிப்பென்றாலே ஆகாது. பள்ளிக்கூடம் செல்வதையே வெறுக்கிறான். பாடத்தில் கவனம் செலுத்த முடியாததால் அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண்களே அவனுக்குக் கிடைக்கிறது. தூண்டுகோலாக இருந்து உதவி செய்ய வேண்டிய ஆசிரியர்களே அவனை உருப்படாத மாணவன் என்று சொல்கிறார்கள். சக மாணவர்கள் மத்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்தும் ஆசிரியர்களை அவன் வெறுக்கிறான். இதற்கிடையில் இஷானின் தனிப்பட்ட உலகமோ மிகவும் பரந்து விரிந்தது. விதவிதமான வர்ணங்கள் மற்றும் பிராணிகள் நிறைந்த குழந்தைப் பருவத்திற்கே உரிய மேஜிக் உலகம் அவனது. அதில்தான் அவன் நிறைவாய் வாழ்கிறான்.
பள்ளியில்தான் அவனுக்கு பிரச்னை என்றால் வீட்டிலும் அவனைப் புரிந்துக் கொள்ளும் மனிதர்கள் இல்லை. வேலை-வேலை என்று ஓடும் அப்பா.. வீட்டு வேலையில் இருந்து எல்லாவற்றையும் தனியொரு பெண்ணாக சமாளிக்கும் அம்மா… அதில் ஆறுதலாய் இருப்பது அண்ணன் மட்டுமே… அவனும் படிப்பு, விளையாட்டு என்று முதல்தர மாணவனாக இருக்கிறான். அதனால் இஷான் செய்யும் சின்ன-சின்ன குறும்புகள் கூட பெரிய பிரச்னையாகிறது, அல்லது பிரச்னையாக்கப்படுகிறது. ஒரு நாள் பள்ளி பள்ளிக்கு மட்டம் போடும் இஷான் தன் மனம் போன போக்கில் தெருவெல்லாம் அழைந்து திரிந்து விட்டு வீட்டிற்கு வருகிறான். இஷான் பள்ளிக்கு மட்டம் போட்டதைக் கண்டிக்கும் அவனது பெற்றோர்கள் அவனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்ப முடிவெடுக்கின்றனர். அங்கேயாவது அவன் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு நல்ல முறையில் படிப்பான் என்று நம்புகின்றனர்.
ஆனால், அங்கே சேர்க்கப்பட்டது முதல், நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுடன் கல்வியில் போட்டி போட வேண்டிய சூழலும், குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் தனிமையுணர்வும் அவனை பாதிக்கிறது. அதனால் மற்றவர்களிடம் அந்நியப்பட்டு வாழவே அவன் விரும்புகிறான். அவனது இந்த திடீர் மாற்றம் கல்வியில் மேலும் அவனை பின்தங்க வைக்கிறது. அங்கேயும் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இஷான் ஆளாகிறான்.
அப்போதுதான் ராம் ஷங்கர் நிகும்ஃப் என்ற இளம் ஆசிரியர் இஷான் படிக்கும் பள்ளிக்கு ஓவிய ஆசிரியராக வந்து சேர்க்கிறார். நட்பான, ஆதரவான இவரது அணுகுமுறை ஆசிரியர் என்ற பயத்தைப் போக்கி மாணவர்கள் மத்தியில் நல்ல நண்பர் என்ற உணர்வை உண்டாக்குகிறது. ஒருநாள் வகுப்பிற்கு பாடம் நடத்தும் இவர் எல்லா மாணவர்களையும் ஓவியம் வரையச் சொல்கிறார்.
ஆனால் இஷான் மட்டும் தனக்கு வழங்கப்பட்ட தாளில் எதையும் வரையாமல் அப்படியே காலியாக விட்டுச் செல்கிறான். இஷானின் நடவடிக்கையை கவனிக்கும் நிகும்ஃப், அவன் ஏதோ பிரச்னையில்
இருப்பதை உணர்கிறார்.
இஷானின் பழைய புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் நிகும்ஃப், அவன் Dyslexia எனப்படும் ‘புரிந்து படிக்கும் இயலாமை’யில் திண்டாடுவதை புரிந்துக் கொள்கிறார். அதே சமயத்தில் அவனுள் புதிந்து கிடக்கும் ஓவியத் திறமை கண்டும் திகைத்துப் போகிறார். அதனை உறுதி செய்துக் கொள்ள அவன் வீட்டிற்கும் போகிறார். இஷானது பெற்றோரிடம் அவன் திறமையான மாணவன்தான் என்றும் அவனை புரிந்துக் கொண்டு உதவி செய்தால் அவனும் மற்ற மாணவர்கள் போல் கல்வியில் பிரகாசிப்பான் என்றும் நிகும்ஃப் கூறுகிறார். மேலும் Dyslexia – ஆல் அவதியுறுவதால் அவன் திறமையான மாணவன் இல்லையென்று கருதிவிடக் கூடாது என்று சொல்கிறார்.
இஷானின் பெற்றோரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரிடம் பேசும் நிகும்ஃப், தனக்கு அவகாசமும் வாய்ப்பும் கொடுத்தால் இஷானை சிறந்த மாணவனாக்கி காட்டுகிறேன் என்று கூறுகிறார். நிகும்ஃப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் முதல்வர் அதற்கு சம்மதிக்கிறார்.
இஷானுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் நிகும்ஃப், அவனது பலவீனத்தைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் பாடம் நடத்தி அவனையும் சிறந்த மாணவர்கள் வரிசையில் இடம்பெற வைக்கிறார். அதே சமயத்தில் நிகும்ஃப் ஏற்பாட்டில் பள்ளியில் நடக்கும் ஓர் ஓவியப் போட்டியில் தனது ஆசிரியர் நிகும்ஃப்பையே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசை வெல்கிறான் இஷான் . இலைமறைவில் இருந்த ஒரு நட்சத்திரத்தின் திறமையை அப்போதுதான் அந்த பள்ளியே புரிந்துக் கொள்கிறது.
உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய மிக நுட்பமான கதையை இயக்கி அதில் நிகும்ஃப் பாத்திரம ஏற்று நடித்திருப்பவர் அமீர்கான். அவருடைய பாத்திரத்தை கன கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் அசர வைத்தது 8 வயது சிறுவன் இஷானாக நடித்திருக்கும் டர்ஷில் ஷஃபாரிதான்.
தன்னை எல்லாரும் திட்டுகின்ற ஆத்திரம், தனிமையின் தவிப்பு, அதனால் உருவாகும் வெறுப்பு, தன்னை புரிந்து கொண்ட மனிதனை சுற்றி வரும் குழந்தை மனம், பலபேர் முன்னிலைக்கு வரத் தயங்கும் தடுமாற்றம், நடிப்பில் அமீர்கானை சர்வ சாதாரணமான பின்னுக்குத் தள்ளியிருக்கிறான் டர்ஷில் ஷஃபாரி.
படத்தில் இறுதிக் காட்சியில் வருகின்ற ஓவியப் போட்டியில் ஒட்டுமொத்தப் பள்ளியும் ஓவியம் வரைவதில் மூழ்கிக் கிடக்க, தன்னுடைய மாணவனை காணவில்லையே என்று நிகும்ஃப் பரிதவிப்பதும்… அவன் வந்ததும் ஓடிச் சென்று அவனது கையில் ஒரு தாளை கொடுத்து ஓவியம் வரைய அனுப்புவதும் ஓர் ஆசிரியருக்கே உரித்தான குணங்கள்.
இறுதியில் தான் வரைந்ததை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு, தன் ஆசிரியர் என்ன வரைந்திருக்கிறார் என்று எட்டிப் பார்க்கும் இஷான் அவர் வரைந்த படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்குவது கவிதை… ஏனெனில் அவன் ஆசிரியர் வரைந்த ஓவியம் இதுதான்……
2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், உலகளாவிய ரீதியில் பலரது பாராட்டைப் பெற்றதோடு நல்ல வசூலையும் கண்டது. 2008 ஆம் ஆண்டுக்கான பிலிம்ஃபேர் விருதையும் இப்படம் வென்றுள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
***ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவை சொற்களுக்குள் அடக்கி விட முடியாது. அது எல்லையில்லாதது. படத்தைப் பார்த்து முடித்ததும் ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்த ஒவ்வொருவரும் நினைவில் வந்து போனார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் பற்றி இன்னொரு பத்தியில் சொல்கிறேன்…