மஇகா தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவிடப்போகும் இடைத் தேர்தல்?
நேற்று முன்தினம் வரை உலுசிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அலையடித்த நிலை ஓய்ந்து, இன்று மஇகா சார்பில் அந்தத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழும்பத் தொடங்கியிருக்கிறது. இதற்காக மஇகா சார்பில் 3 வேட்பாளர்கள் பெயரையும் பிரதமரிடம் நேற்று சமர்ப்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு.
உலுசிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜைனால் அபிடின் அண்மையில் மூளை புற்றுநோயால் காலமானார். அதன் தொடர்பில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 1990ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்த மஇகா துணைத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலு 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அடித்த அரசியல் சுனாமியில் இந்த தொகுதியை பி.கே.ஆர் கட்சி வேட்பாளர் டத்தோ ஜைனால் அபிடினிடம் பறிகொடுத்தார். வெறும் 198 வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் தோல்வியுற்றார் என்றாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற முறையில் டத்தோ ஜி.பழனிவேலுவின் செல்வாக்கு அங்கே சரிந்து வருகிறதோ என்ற ஐயப்பாட்டையும் அத்தோல்வி ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தற்போது நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் முதன்மைக் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கே அந்த தொகுதியை இம்முறை ஒதுக்க வேண்டுமென அம்னோ தலைவர்கள் சிலர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். தவிர, பெரும்பான்மையான உலுசிலாங்கூர் தொகுதி மக்களும் கூட மஇகா உறுப்பினரொருவர் அங்கே போட்டியிடுவதை விரும்பவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி கருத்துரைத்த மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அப்படியொரு நிலை அந்த தொகுதியில் இல்லையென மறுப்பு தெரிவித்தார். அது மட்டுமின்றி அந்த தொகுதியில் டத்தோ ஜி.பழனிவேலு போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் கூறினார். இதனால் மஇகாவிற்கு இன்னொரு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
உலுசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடப் போவது மஇகா வேட்பாளர்தான் என்று முடிவாக நேற்று முன்தினம் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், இதற்காக 3 மஇகா வேட்பாளர்களின் பெயர்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்பில் பிரதமரை நேற்று சந்தித்த டத்தோஸ்ரீ சாமிவேலு 3 வேட்பாளர்களின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பெயர்ப்பட்டியலில் டத்தோ ஜி.பழனிவேலுவின் பெயரும் இருக்கிறது.
மஇகா கட்சியில் வழக்கம் போலவே டத்தோ சுப்ராவிற்கு (முன்னாள் துணைத் தலைவர்) இந்த முறை வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. டத்தோ சுப்ரா சார்புடைய பத்திரிகை ஒன்று இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் பல இணையத்தள பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே போல பெரும்பான்மையான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 61 வயதாகிவிட்ட டத்தோ ஜி.பழனிவேலுவை விட இன்னும் இளமையான ஒருவரை மஇகா ஏன் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர். ஆனாலும் இறுதி முடிவென்பது பிரதமர் கையில் இருக்கிறது.
அந்த வகையில், தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் டத்தோ ஜி.பழனிவேலு அவர்களே முன்னணியில் இருக்கிறார் என்று செய்தி கசிந்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் டத்தோ ஜி.பழனிவேலு வெற்றி பெறும் பட்சத்தில் மஇகா தலைமைத்துவ பொறுப்பை அவரிடமே ஒப்படைக்க டத்தோஸ்ரீ சாமிவேலு முடிவெடுத்து விட்டார் என்றும் மஇகா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள். பிரதமரை சந்தித்தபோது கூட இதை தெளிவாக டத்தோஸ்ரீ சாமிவேலு கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரதமரின் தேர்வும் டத்தோ ஜி.பழனிவேலுவாக இருந்தால் மஇகா புதிய தலைமைத்துவ மாற்றத்திற்கான முதல் படியில் கால் வைத்து விட்டது என்றே அர்த்தம் என்றும் பலமான பேச்சு அடிபடுகிறது.