மலேசியாவின் 6வது புதிய பிரதமராக நாளை (ஏப்ரல் 3 2009) டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது. மலேசியா நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப் போகிறது.
1953ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள கோலலிப்பிஸ் நகரத்தில் நாட்டின் 2வது பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு மகனான பிறந்தார் டத்தோஸ்ரீ நஜீப். 6 பேர் கொண்ட குடும்பத்தில் இவர் மூத்த மகனாவார். 1974ஆம் ஆண்டு அவர் நோட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் வர்த்தக நிதிநிர்வாக துறையில் பட்டப்படிப்பை முடித்தார். 1976ஆம் ஆண்டு தனது தந்தையின் திடீர் மறைவிற்கு பின் நடைப்பெற்ற பெக்கான் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய வரலாற்றில் மிக இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையையும் டத்தோஸ்ரீ நஜீப் அப்போது பெற்றார். அடுத்த வருடத்திலேயே துணையமைச்சர் பதவியை அலங்கரித்து இளம் வயதில் துணையமைச்சராக பதவி வகித்தவர் என்ற வரலாற்று பெருமையை பதிவு செய்தார். பின்னர் தனது 29வது வயதில் பகாங் மாநில முதல்வராக பதவி ஏற்றார்.
1987ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு முழு அமைச்சராக பொறுப்பேற்றார். 1988ஆம் ஆண்டு இவர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால் நியமிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு அம்னோ உதவி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப் 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அம்னோ உதவி தலைவர்களில் ஒருவராகவே பதவி வகித்து வந்தார்.
2004ஆம் ஆண்டு இவர் துணைப் பிரதமராக அப்போது புதிய பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அவர்களால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அம்னோ துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் நடைப்பெற்ற அம்னோ தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப், நாளை நம் நாட்டின் 6வது பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.
அல்தான்துயா
டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் அவரது அரசியல் வாழ்க்கையையே அசைத்துப் பார்த்தது பிரபல மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை வழக்கு. டத்தோஸ்ரீ நஜீப்பின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான அப்துல் ரசாக் பகிண்டா இந்த கொலை வழக்கில் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டதால், ஆரம்பத்தில் இந்த வழக்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. கொலைக்கு காரணமானவராக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவின் விடுதலைக்குப் பின்னர் அந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கி அமைதியாகி விட்டது.
நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற இந்த வழக்கு இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை. வழக்கு தொடங்கப்பட்ட போது டத்தோஸ்ரீ நஜீப்புக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டென எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின. மலேசியா டுடே ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் கொலை சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
அப்துல் ரசாக் பகிண்டாவால் நியமிக்கப்பட்ட தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம், டத்தோஸ்ரீ நஜீப்பை தொடர்புபடுத்தி கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி சத்தியபிரமாண வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதை அவர் மீண்டும் வாபஸ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த புதிய சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நீக்கப்பட்டிருந்தன. பல வெளிநாட்டு பத்திரிகைகள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே செய்தி வெளியிட்டன.
டத்தோஸ்ரீ நஜீப் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, தனக்கும் மங்கோலிய அழகி அல்தான்துயாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென பொதுப்படையாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இஸ்லாம் சமய முறைப்படி புனித அல்-குரான் மீது சத்தியம் செய்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லாவும் துணைப்பிரதமர் நஜீப் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் பக்கபலமாக நிற்பதாக அறிவித்தார்.
இவை தவிர, சமீப காலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் லஞ்சம், பண அரசியல், அன்வார் இப்ராஹிம் மீதான் சைபுல் தொடுத்த ஒரின வழக்கு பின்னணியில் செயல்பட்டவர் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் இவைகளில் எதுவுமே ஆதாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஒன்றன் பின் ஒன்றாக தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் இருந்து மீண்டுக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் கைகளில்தான் மலேசிய நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு துறை அமைச்சர் பதவியை அலங்கரித்து பரந்த அனுபவம் பெற்ற அவரது தலைமைத்துவம் கொண்டுவரப் போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்த்துகள் டத்தோஸ்ரீ நஜீப்!