Category Archives: உலகக் கிண்ணம் 2010

உலகக் கிண்ண ஆட்டங்கள் இதுவரை….

உலகக் கிண்ண போட்டியில் இடம்பெற்ற அனைத்து பிரிவுக்குமான முதல் ஆட்டங்கள் நேற்றோடு முடிந்து விட்டன. இந்த முறை பெரிய அதிர்ச்சியைத் தந்த ஆட்டங்களாகவும் அவை திகழ்கின்றன. பெரிய குழுக்கள் பலவும் மண்ணைக் கவ்வ, இவை தேறாது என்று வர்ணிக்கப்பட்ட குழுக்கள் அடித்த அடியில் பெரிய குழுக்களின் பயிற்றுனர்கள் பலர் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.  அர்ஜெண்டினா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் நெதர்லாந்து (ஹாலந்து) தவிர மற்ற அனைத்து பெரிய குழுக்களும் சமநிலை அல்லது தோல்வியோடு தங்களது முதல் ஆட்டங்களை முடித்துக் கொண்டது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியே. அதிலும் பல கால்பந்து விமர்சகர்களால் இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லுமென ஆருடம் கூறப்பட்ட  ஸ்பெய்ன் 1-0 என்ற கோல் கணக்கில் நேற்றிரவு சுவிஸ்சர்லாந்திடம் வீழ்ந்தது.

ஏ பிரிவு – ஃப்ரான்ஸ்
உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய ஆட்டக்காரராக கருதப்பட்ட தியரி ஹென்றி தலைமையில் களமிறங்கிய ஃப்ரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் உருகுவே குழுவுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. தனது அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவுடன் மோதவிருக்கும் ஃப்ரான்ஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருக்கிறது. அதே கட்டாய நிலையில் மெக்சிகோவும் இருப்பதால் பரபரப்பான மோதலாக இது அமையும் என்பது திண்ணம். இந்த பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு பராகுவே.

பி பிரிவு – அர்ஜெண்டினா
உலக கிண்ண கால்பந்து போட்டியில் கோல் மன்னன் மெசியின் மெஸ்மெரிஸத்தால் அதிரடி படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா, “தலை தப்பியது மரடோனா புண்ணியம்” என்ற வகையில் 1-0 கோல் கணக்கில்தான் நைஜீரியாவை வீழ்த்தியது. அதே சமயம் இன்று தென்கொரியாவுடன் நடத்தவிருக்கும் பலப்பரீட்சையில் அர்ஜெண்டினா என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. வெற்றி பெற கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் அர்ஜெண்டினா இருப்பதாகவே இப்போதைக்கு சொல்ல முடியும். இப்பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு தென்கொரியா.

சி பிரிவு – இங்கிலாந்து
பல நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்ட குழுவாக திகழும் இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் 1-1 என்ற நிலையில் அமெரிக்காவுடன் சமநிலை கண்டது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சறுக்கல். உலகக் கிண்ணத்தில் அடிக்கடி இப்படி சறுக்கி விழுவது இங்கிலாந்திற்கு புதிதல்ல என்றாலும் பயிற்றுனர் ஃபாபியோ காபெல்லோவின் மீது அனைத்து இங்கிலாந்து ரசிகர்களும் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். வெய்னி ரூனி, ஸ்டீவன் ஜெரால்ட், ஜோன் டெர்ரி, ஃப்ராங்க் லம்பார்ட் போன்ற 4 முக்கிய தளபதிகள் கொண்டிருந்த இங்கிலாந்து கோல் காவலர் செய்த தவறால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. அல்ஜீரியாவுடனான தனது அடுத்த ஆட்டத்தில் வெற்ற பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையிலும் இப்போது இங்கிலாந்து இருக்கின்றது. இப்பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு ஸ்லோவெனியா.

டி பிரிவு – ஜெர்மனி
ஜெர்மனியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கோல் கணக்கில் அடித்து துவைத்து காயப் போட்டிருக்கிறார்கள். செர்பியாவுடனான அடுத்த ஆட்டத்திலும் சுலபமாக 3 புள்ளிகள் பெறுவார்கள் என தாராளமாக நம்பலாம். ஜெர்மனியின் முதல் ஆட்டத்தை கண்ணுற்ற அனைவருமே அக்குழுவின் கட்டுக்கோப்பான நேர்மையான விளையாட்டை பாராட்டியுள்ளனர். இந்தப் பிரிவின் கலக்கல் குழு ஜெர்மனிதான். ஆனாலும் கானா மீது கொஞ்சம் கவனம் செலுத்துவதும் அவசியம்.

ஈ பிரிவு – நெதர்லாந்து
முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் அடுத்த ஆட்டம் ஜப்பானுடன் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். கொஞ்சம் அசந்தாலும் ஜப்பான் வெற்றிக்கனியை தட்டிக் கொண்டு போய்விடும். இலகுவான முறையில் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெற வேண்டுமானால் ஜப்பானை வீழ்த்தியே ஆக வேண்டும். பார்க்கலாம். நெதர்லாந்தும் ஜப்பானும் தலா மூன்று புள்ளிகளை கைவசம் கொண்டிருப்பதால் கலக்கல் குழுவென்று இப்பிரிவில் தனியாக எதனையும் சொல்ல முடியாது.

எஃப் பிரிவு – இத்தாலி
உலகச் சாம்பியன் என்ற கௌரவத்தோடு வந்த இத்தாலி, பராகுவேயுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளது. அடுத்த ஆட்டம் நியூசிலாந்துடன் என்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனாலும் அதற்கு உலகச் சாம்பியன் என்ற கௌரவப் பெயர் மட்டும் போதாது. இத்தாலி இன்னும் நிறைய முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள அனைத்து குழுக்களுமே தலா ஒரு புள்ளி பெற்றுள்ளன. 

ஜி பிரிவு – பிரேசில்
மரணப் பிரிவு என்று வர்ணிக்கப்படும் இப்பிரிவில் பிரேசிலோடு போர்த்துகலும் இருக்கிறது. இந்த இரண்டு குழுவிற்கும் தலைவலி கொடுப்பதற்கெனவே ஐவரி கோஸ்ட் மற்றும் வடகொரியா இருக்கின்றன. பிரேசில் கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத நாடு. சம்பா வகையிலான அவர்களது ஆட்ட முறை அனைவரையும் மயக்கக் கூடியது. அதிலும் புதுப்புது பாணியில் பந்தை கையாளும் திறன் அவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கிறது. அதற்கு வடகொரியாவுடனான ஆட்டத்தின் போது மைக்கோன் அடித்த இரண்டாவது கோல்தான் சாட்சி. பனானா கிக் என செல்லப் பெயர் கொடுத்து காற்பந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கோலை. இருந்தாலும் ஜுன் 25ஆம் தேதி போர்த்துகலுடன் நடைபெறவிருக்கின்ற ஆட்டம்தான் இந்தப் பிரிவின் உச்சக்கட்ட ஆட்டம். இப்பிரிவின் கலக்கல் குழு எதுவென்பதை தனியாக சொல்ல வேண்டுமா?

ஹெச் பிரிவு – ஸ்பெய்ன்
பல முக்கிய தலைகளால் உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று ஆருடம் சொல்லப்பட்ட நாடு. முதல் ஆட்டத்தில் பரிதாபமாக மண்ணைக் கவ்வி இருக்கிறது. ஹோண்டுராஸ் மற்றும் சில்லி இரண்டையும் வீழ்த்தினால் காலரை தூக்கி விட்டுக் கொண்டு காலிறுதி ஆட்டத்திற்கு ஸ்பெய்ன் தகுதி பெறலாம். இதில் ஒன்றில் தோல்வியைத் தழுவினாலும் சொந்த நாட்டுக்கு கப்பல் ஏறுவதை தவிர ஸ்பெய்னுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரிவின் கலக்கல் குழு சில்லிதான்.

**மேற்கண்ட அனைத்தும் முதல் ஆட்டம் முடிந்து தொகுக்கப்பட்ட நிலவரம். சவூத் ஆப்ரிக்கா உருகுவே நீங்கலாக இதர குழுக்கள் அனைத்திற்குமே இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் குழுக்கள் மட்டுமே காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும்.