Category Archives: சினிமா

7ஆம் அறிவு (2011)

வழக்கம் போலவே கடைசியில் அமைந்திருக்கும் Couple Seat. சனிக்கிழமை இரவு 9.15 காட்சி. ட்ரோபிகானா சிட்டி மால் GSC. பொதுவாக இந்த திரையரங்குக்கு தமிழர்கள் வருவது குறைவு. எல்லாரும் தி கெர்வ், 1 உத்தாமா அல்லது பிஜே ஸ்டேட் பிக் சினிமா திரையரங்குகளை நோக்கியே படையெடுப்பார்கள். இந்த முறை அதிலொரு மாற்றம். 4 நாட்களுக்கான 24 காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன. படம் வெளிவந்து 4 நாட்களாகி விட்டது. ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதை பார்க்க முடிந்தது. படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் செய்த மாயம் இது. ஆனால் படம் ஏமாற்றவில்லை.  

டாமோ என சீன மக்களால் போற்றி வணங்கப்படுகிற போதிதர்மன் ஒரு தமிழன். இந்த ஒற்றை வரியை தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து அதை நமக்கெல்லாம் தீபாவளி விருந்தாக பரிமாறி இருக்கிறார் முருகதாஸ்.

 போதிதர்மன் பல்லவ இளவரசன். நோக்கு வர்மம், தற்காப்புக் கலை, மூலிகை மருத்துவத்தில் அவரொரு நிபுணர். சீனாவில் பரவி வரும் ஒரு மர்ம நோய் தமிழ்நாட்டை பீடிக்காமல் இருக்க அவரை சீன தேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். (பலர் அவர் ஏன் சீன தேசத்துக்குப் போனார் என புரியாமல் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவரும் அங்கு சென்று அந்த நோயை குணப்படுத்துகிறார். அப்படியே அந்த சீன மக்களுக்கு தற்காப்பு கலையையும் நோக்கு வர்மத்தையும் கற்றுத் தருகிறார். அந்த சீன மக்களின் சுயலநல வேண்டுகோளுக்காக விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு அங்கேயே இறந்து சமாதியாகிறார்.

இப்போது போதிதர்மன் கற்றுக் கொடுத்த அதே கலைகளைக் கொண்டு இந்தியாவை தனது கைப்பாவை ஆக்கிக் கொள்ள சீன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு சுபா என்றொரு மாணவி போதிதர்மனின் டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. தங்களது திட்டத்திற்கு சுபாவின் ஆராய்ச்சி இடையூறு விளைவிக்கும் என்பதால் அவளை அழிக்க டோன் லீ என்றொரு ஆளை அனுப்பி வைக்கின்றனர். சுபாவையும் இந்தியாவையும் காப்பாற்ற போதிதர்மன் வம்சாவளியில் பிறக்கின்ற அரவிந்த் உதவுகிறார். இதுதான் படத்தின் கதை.

ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் படமென்றாலும் இடையிடையே ஸ்ருதிஹாசனும் சூர்யாவும் பேசும் சில வசனங்கள் நமக்கு  அறை கொடுக்கின்ற எண்ணத்தை உருவாக்குவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெருமிதம் நமக்கு மட்டும்தான் இருக்கிறதென ஸ்ருதிஹாசனும் தமிழன் போகிற இடங்களில் எல்லாம் அடி வாங்குகிறான் என்று சூர்யா சொல்லும்போதும் வலிக்கிறது.

9 நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை கொன்றால் அது வீரமல்ல என சூர்யா சொல்லும்போது புலித் தலைவன் மீது ஏற்படுகின்ற அந்த கண நேர மதிப்பு.. அதை விவரிக்க வார்த்தையில்லை.

உண்மைதான். இந்தப் படம் நமது உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் லாபம் பார்க்கும் முயற்சிதான். திரைப்படம் என்பதே லாபத்திற்காக செய்யப்படும் வணிகமே தவிர நம்மை திருத்தவோ அல்லது நமக்கு கருத்து சொல்லவோ உருவாக்கப்படுவதில்லை. அப்படியொரு எண்ணத்தோடு படம் பார்க்க போகிறவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றும் புரியவில்லை. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு கேணைத்தனமாக கூற்றோ.. அதுபோலதான் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தபின்பு கன்னாபின்னாவென படத்தின் இயக்குநருக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்குவதும்.
 
ஒரு படத்தைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. பல கோடிகளை கொட்டி படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளரை விட, ஒரு கதையை உருவாக்கி அதை சினிமாவாக எடுக்கின்ற இயக்குநரை விட 10-15 ரிங்கிட் கொடுத்து விரும்பியே போய் படம் பார்த்து விட்டு கருத்து வாந்தி எடுக்கின்ற சிலரின் ஒலக சினிமா தேடல் என்னவென புரியவில்லை. ஏன்பா.. நீங்களும் ஓர் ஒலக சினிமா எடுத்துதான் காட்டுங்களேன். அப்போதாவது உங்கள் ஒலக சினிமாவின் புரிதல் என்னவென எங்களுக்கும் விளங்குமல்லவா? சரி, அவர்கள் எதையோ செய்து தொலைக்கட்டும். உலக இயக்கம் நடைபெற இது போன்ற கோமாளிகளும் தேவைப்படுகிறார்கள்.

இந்தப் படம் முடிந்து வெளியே கார் நிறுத்துமிடத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 85 விழுக்காடு சீனர்களே என்னைச் சுற்றி அங்கே இருந்தார்கள். படத்தில் காட்டப்படுவது போல சீனர்களில் பலர் சுயநலவாதிகளே. இது கொஞ்சம் காரமான கூற்றாக தோன்றலாம். ஆனால் போதிவர்மன் கற்றுக் கொடுத்தது போல சீனர்களிடமிருந்து நீங்கள் எதையும் இலகுவாக கற்றுக் கொள்ள முடியாது. நமக்கு தெரியாத ஒன்றை அவர்களிடம் கேட்டால் அதற்கொரு தயாரான பதிலை அவர்கள் வைத்திருப்பார்கள். அது… “தெரியாது”.

சீனர்களோடு வேலை செய்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். தொழில் நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள்.

தொழில் விவகாரத்திலும் சீனர்கள் நடந்துக் கொள்ளும் முறை புரிந்துக் கொள்ள முடியாதது. தன் இனத்திற்கு வியாபாரம் கொடுக்கவே அவர்கள் விரும்புவார்கள். ஒரு கடைவரிசையில் 3 வேறு இனத்தவரின் கடைகள் இருந்தால் இதில் சீனர் கடையாக தேடிச் சென்று பொருட்கள் வாங்குவது தொடங்கி, மற்ற வியாபாரிகளை குறைத்து பேசுவது வரை சீனர்களுக்கு நிகர் சீனர்களே. மிக நல்ல சீன முதலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே.

இதில் தமிழன் மட்டும்தான் “தவுக்கே, பாஸ்” என இன்னமும் சீனர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்களை இப்படி முதலாளி – முதலாளி என்றழைப்பதில் தமிழர்களுக்கு அப்படியொரு ஆனந்தம். தவிர தங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாரும் கேட்பதற்கு முன்பாகவே தம்பட்டம் அடித்து காட்டிக் கொள்வதும் ஏமாளித்தனமாக தன் இனத்தை தவிர மற்ற இனத்தவருக்கு தங்களுக்குத் தெரிந்ததைக் கற்று தருவதிலும் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என யார் சொன்னது? பெரும்பாலான தமிழனிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன்னொரு தமிழன் எப்படி நம்மை விட நன்றாக வாழலாம் என்ற வயிற்றெரிச்சல். இதனால் ஏற்படும் பொறாமையில் ஆயிரம் பிரிவினைகள், கூச்சல்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளைவு நம்மை பிரநிதிக்க 30 கட்சிகள் 300 தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

படம் முடிந்து வெளியே வரும்போது இளைஞர் பட்டாளத்திலிருந்து  ஒரு கபோதி கூவியது “என்னவோ பெரிய
..தி தர்மனாம். பேசாம வேலாயுதம் பார்க்க போயிருக்கலாம்”. இதுதான் நமது இளைய தலைமுறையின் லட்சணம்.  இவர்களுக்கு உலக சினிமாவை எடுத்துக் காட்டினால் மட்டும் மாற்றம் வந்துவிடப் போகிறதா? அடப்போங்கடா…

பி.கு: இது எனது 100வது பதிவு.

THE NEXT THREE DAYS (2010)

வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடக்கும்போது நமக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை. அதுவே சில சமயங்களில் நமது கை மீறிப் போகும்போதுதான் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வருகிறது. அடுத்த என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்படுகின்றது. எதையாவது செய்து அதிலிருந்து மீள துணிவோம்.

அதிலும் நம் அன்புக்குரியவர்களுக்கு இப்படி ஏதாவது அசம்பாவிதம் அல்லது சிக்கல் ஏற்படும்போது நம் முழு சக்தியை பயன்படுத்தி அவர்களை அதிலிருந்து மீட்க போராடுவோம். சாதுவான பல மனிதர்கள் சட்டத்தை மீறத் துணிவதுதான் இது போன்ற சமயங்களில்தான். அப்படி தவறாக குற்றச்சாட்டப்பட்டு சிறையில் வாடும் தன் மனைவியை மீட்க சட்டத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிப் பார்க்கத் துணியும் ஒரு கல்லூரி போராசியரின் கதைதான் The Next Three Days. இது 2008ஆம் ஆண்டில் வெளிவந்த “Pour Elle”  என்ற ஃபிரான்ஸ் படத்தின் தழுவலாகும்.

அமைதியாக வாழும் போராசிரியர் John Brennan (Russell Crowe) வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் புயலடிக்கிறது. அவரது மனைவி Lara Brennan (Elizabeth Banks) அவளுடைய மேலாளரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். பல்வேறு முறையீடுகள் செய்தும் சாட்சியங்கள் அனைத்தும் அவளுக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் தண்டனை உறுதியாகிறது. இறுதியாக மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். ஆனால் அங்கேயும் தீர்ப்பு அவளுக்கு சாதகமாக வருகின்ற சாத்தியம் குறைவாகவே இருக்கிறது.

இந்த நிலையில் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கும் மனைவியை சிறையிலிருந்து கடத்திக் கொண்டு வர முடிவு செய்கிறார் பேராசிரியர். இதற்காக எழு முறை சிறையிலிருந்து தப்பித்த ஒரு முன்னாள் கைதியிடம் ஆலோசனை கேட்கிறார். அவனிடமிருந்து பல தகவல்களை அறிந்துக் கொள்ளும் பேராசிரியர் அதற்கான முயற்சிகளில் இறங்கத் தொடங்குகிறார். அந்த முயற்சியில் சில எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தாலும் தன் இலக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மனைவியைக் காப்பாற்ற போராடுகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? அல்லது மனைவியைக் காப்பாற்றும் தீவிரத்தில் இவரும் சிறையில் அடைபட்டாரா? என்பதே மீதிப் படம்.

அன்புக்குரியவர்களை கொண்டாடும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Paul Haggis.

INSIDIOUS (2011)

Renai-Josh Lambert தம்பதி, புதிய வீட்டில் தங்களது மூன்று பிள்ளைகளுடன் குடியேறுகிறார்கள். ஒரு நாள் இவர்களின் மூத்த மகன் Dalton வீட்டின் மாடியில் அமைந்திருக்கும் ஓர் அறைக்குச் செல்கிறான். விளக்கை போடுவதற்காக படியில் ஏறும்போது கால் சறுக்கி கீழே விழுந்து விடுகிறான். ஆரம்பத்தில் மகனுக்கு காயமேதும் ஏற்படவில்லையென Renai – Josh  சமாதானமடைந்தாலும்.. மறுநாள் காலையில் அவனை எழுப்பும்போது Dalton அசைவின்றி கிடப்பதை கண்டு திடுக்கிடுகின்றனர். மருத்துவர்களோ அவன் காரணமே சொல்ல முடியாத கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 மூன்று மாதங்களுக்குப் பிறகும் Dalton கோமா நிலையிலிருந்து மீளாததைத் தொடர்ந்து Renai – Josh அவனை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அன்று தொடங்கி அந்த வீட்டில் தொல்லைத் தரும் பல்வேறு விசித்திர சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இதுபற்றி Renai, Joshசிடம் சொல்கிறாள். சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துக் கொள்ளும் Josh வேறு புதிய வீட்டிற்கு மாற்றலாகிச் செல்ல சம்மதிக்கிறான்.

புதிய வீட்டிலும் தொல்லை தரும், அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பது குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் பல குழப்பம் தரும் சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அந்தச் சமயத்தில் அங்கு வரும் Joshசின் தாயார், அங்கு நடக்கும் சம்பவங்களை புரிந்துக் கொண்டு அதற்கு தீர்வு காணும் சக்தியுடைய தனது தோழியை அங்கு வரவழைக்கிறாள். தாயாரின் எண்ணத்திற்கு ஆரம்பத்தில் Josh தடை சொல்லாவிட்டாலும், முற்றிலுமாக அவன் எதையும் நம்பத் தயாராக இல்லை. ஆனாலும் தாயார் மற்றும் மனைவியின் வற்புறுத்தலின் போரில் மகனை கோமா நிலையிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய முயற்சிக்கு Josh சம்மதிக்கிறான். ஆபத்தும், தொல்லைகளும் நிறைந்த அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? தன்னுடைய மகனை அந்த தம்பதியினரால் காப்பாற்ற முடிந்ததா? Reina – Josh வீட்டில் நடந்த தொல்லைகளுக்கு காரணம் என்ன என்பதுதான் மீதிப்படம்.

திகில் மற்றும் மர்மம் நிறைந்த இந்தப் படத்தை Saw, Death Silent, Death Sentence போன்ற படங்களை எழுதி இயக்கிய James Wan இயக்கியுள்ளார். இவர் மலேசியா, சரவாக் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இப்போது 34 வயதுதான் ஆகிறது. ஆஸ்திரேலியா Royal Melbourne Institute of Technologyயில் படிக்கும்போது சந்தித்த Leigh Whannel என்பவரை தனது தொழில் பங்காளியாக்கிக் கொண்ட இவர் தனது சொந்த திரைக்கதையை மட்டுமே இதுவரை இயக்கி வந்துள்ளார். Saw II, Saw III, Saw IV, Saw V, Saw VI, Saw 3D போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

I SPIT ON YOUR GRAVE (2010)

பொதுவாக இது ஆணாதிக்க உலகம். ஆண் திமிர் இங்கே பெரும்பாலான ஆண்களிடம் விரவிக் கிடக்கிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவே பார்த்துப் பழகிப் போனவர்களுக்கு அவர்களின் மென்மையான மனதும், நளினமான செயல்களையும் ரசிக்கத் தெரியாது. மாறாக அவர்களின் உடலும் சதையும் மட்டுமே தெரியும். வாய்ப்பு கிடைத்தால் அந்தப் பெண்ணை சீரழிக்கவும் தயங்க மாட்டார்கள். இதே போன்ற மனநிலை கொண்ட 5 ஆண்களிடம் ஒரு பெண் சிக்கினால் என்ன ஆகும்? அதுதான் I Spit On Your Grave படத்தின் கதை.

Jennifer Hills ஒரு நாவலாசியர். தனது இரண்டாவது நாவலை எழுத தனிமையான இடத்தை தேர்ந்தெடுக்கிறாள். ஒரு நாள் அவளது கழிவறைக் குழாயில் சின்ன பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் சொல்கிறாள். அவரும் பிரச்னையை சரி செய்ய ஒரு ஆளை அனுப்பி வைப்பதாக கூறுகிறார். குழாயைச் சரி செய்தவனை பாராட்டும் விதமாக, அவனுக்கு முத்தம் ஒன்றை கொடுக்கிறாள் Jennifer. அவனோ அந்த முத்தத்தை தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான். அதோடு அவள் முத்தம் கொடுத்தது பற்றி அவனது நண்பர்களிடமும் கூறுகிறான். உடனே அவர்கள் அவளொரு தவறான நடத்தைக் கொண்ட பெண் என்று நினைத்து இரவே அவளை சென்று பார்ப்பது என்று முடிவெடுக்கிறார்கள்.

இரவில் தன் வீட்டில் அத்துமீறி நுழையும் அவர்களை கண்டு Jennifer பயந்து போகிறாள். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள். ஒருவழியாக தப்பித்து அந்நகர ஷெரீப்பிடம் தஞ்சமடைகிறாள். ஆனால் ஷெரீப்பும் அந்த 4 பேருடன் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். எங்கே உயிருடன் விட்டு வைத்தால் Jennifer எல்லாரையும் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் அவளை கொல்ல அந்த ஜவரும் முடிவெடுக்கும் சமயத்தில், அவள் பக்கத்திலிருக்கும் ஆற்றில் குதித்து விடுகிறாள். கிட்டத்தட்ட அவள் இறந்து விட்டதாகவே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சமயத்தில்.. அந்த ஜவரும் அவளால் பழிவாங்கப்படுகின்றனர்.

இந்தப் படம் 1978ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக் என்றாலும் பழிவாங்கும் காட்சிகள் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருக்கின்றன. இதே போன்ற கதையைக் கொண்டதுதான் ஏற்கனவே நான் எழுதியிருந்த The Last On The Left படம். ஆனால் அந்த படத்தில் பெற்ற தந்தையும் தாயும் பெண்ணை சீரழித்தவர்களை பழிவாங்குவார்கள். இதிலோ பாதிக்கப்பட்ட பெண்ணே தன்னை கெடுத்தவர்களை பழிவாங்குகிறாள். அதுவும் மிகக் கொடூரமாக அவர்களை தண்டிக்கிறாள். தன்னை கதறக்-கதறக் கெடுத்தவர்களை அந்தப் பெண் பழிவாங்கும் போது நமக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. மாறாக மனநிறைவு மட்டுமே ஏற்படுவது படத்தின் மிகப்பெரிய பலம். கமல்ஹாசன் “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் சொல்வதுபோல் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என அழுத்தந்திருத்தமாக கூறிருக்கும் திரைக்கதை. தவிர பெண்ணால் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்றும் உரக்கச் சொல்லியிருக்கும் படம்.

OLDBOY (2003)

Oh Dae  Su ஒரு தொழிலதிபர். அவளது மகளின் பிறந்தநாளின் போது அவன் கடத்தப்படுகிறான். அன்றிலிருந்து 15 வருடங்களுக்கு தனியொரு அறையில் அவன் சிறை வைக்கப்படுகிறான். மனித தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சி மட்டுமே அவனுக்கு துணையாக இருக்கிறது. தொலைக்காட்சி வழியாக தனது மனைவி கொல்லப்பட்டதையும் மகள் தத்துக் கொடுக்கப்பட்டதையும் தெரிந்துக் கொள்கிறான். அந்தச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 15 வருடங்களும் அவனுக்கு உணவாக பொறித்த டம்ப்ளிங் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஒரு நாள், ஓர் உயரமான கட்டிடத்தின் மேல் மாடியில் Oh Dae Su விடுவிக்கப்படுகிறான். கூடவே ஒரு கைத்தொலைபேசியும் கொஞ்சம் பணமும் அவனுக்கு இன்னொரு மனிதன் மூலமாக கொடுக்கப்படுகிறது. 15 வருடங்களாக தன்னை காரணமே இல்லாமல் ஒரே இடத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய அந்த மர்ம மனிதனை பழிவாங்க கிளம்புகிறான் Oh Dae Su.

உணவகம் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் Mi-Do என்பவளுடன் Oh Dae Su விற்கு பழக்கம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் Oh Dae Su வை தொடர்பு கொள்ளும் அந்த மர்ம மனிதன்.. இன்னும் 5 நாட்களுக்குள் அவனைத் தேடி வராவிட்டால் Mi-Do வைக் கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறான். ஒருவழியாக தன்னைக் கடத்தியவனை தேடிப்பிடிக்கும் Oh Dae Sue, அவனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவனிடம் கெஞ்சத் தொடங்குகிறான்.. Oh Dae Sue விடம் ஏற்பட்ட மனமாற்றத்திற்கு காரணம் என்ன? அவனை ஏன் அந்த மர்ம மனிதன் 15 வருடங்கள் அடைத்து வைத்திருந்தான்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் படத்தில் இருக்கிறது.

பொதுவாக பழிவாங்கும் உணர்ச்சி நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் வருகின்ற அந்த மர்ம மனிதன் தனக்கு ஏற்பட்ட இழப்பை, அதை ஏற்படுத்தியவனும் அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இப்படியொரு தண்டனையை தேர்ந்தெடுக்கிறான். 15 வருடங்கள் என்பது மிக நீண்டதொரு காலம்தான். அவன் நினைத்திருந்தால் 2 நிமிடங்களில் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து Oh Dae Sue வைக் கொன்றிருக்க முடியும். ஆனால் ஏன் அவன் இப்படியொரு வழியைத் தேர்ந்தெடுத்தான் என்பதில் தொடங்கி.. Oh Dae Sue வை பழிவாங்குவதற்காக காரணம் வரை எல்லாமே நம்மை புரட்டி போடும் விஷயங்கள்.

படத்தின் கதையை ஜீரணிப்பதற்கு நிறையவே கஷ்டமாக இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் கற்பனைக்கு அற்பாற்பட்ட புதிர்களை உள்ளடக்கியது என்கிற நிஜத்தையும் அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படமாகிறது. உலக சினிமா விமர்சகர்களால் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்ட இந்த தென் கொரிய படத்தை இயக்கியவர் Park Chan Wook. சினிமாவை நேசிப்பவர்கள்  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

** இந்த படம் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் 2006ஆம் ஆண்டு ஜிந்தா (ZINDA) என்ற பெயரில் வெளிவந்தது. படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்து இந்திய சினிமாவிற்கு ஏற்ற வகையில் இயக்கி இருந்தார் இயக்குநர் சஞ்சய் குப்தா.

CONVICTION (2010)

இதுநாள் வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக பாசமலர் படத்தைப் பற்றியே பேசி வந்தோம். இனி அதனுடன் இந்த  படத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தவிர இந்தப் படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதுதான் இதன் சிறப்பு.

Kenny Water ரும் Betty Anne Water ரும் அண்ணன்- தங்கை. சிறு வயதில் தாயாரின் (9 கணவருக்கு 7 பிள்ளைகள் பெற்றுக் கொடுத்தவள்) சரியான கவனிப்பின்றி கொஞ்சம் முரட்டுத்தனமும் குறும்புத்தனமும் மிகுந்த பிள்ளைகளாக வளர்கின்றனர். இவர்களின் அட்டூழியம் அவர்கள் குடியிருந்த Ayer (America) நகர் மக்களிடையே வெகு பிரபலம் என்பதால், அடிக்கடி காவல் நிலையம் சென்று வர வேண்டியதிருக்கிறது. அதிலும் Kenny மீது போலீசார் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கின்றனர். அந்த அளவுக்கு முரட்டுப் பேர்வழி.

அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து திருமணமாகி மகிழச்சியான வாழ்ந்து வரும் சமயத்தில்,1983ஆம் வருடம்  Kenny மீது ஒரு கொலைக் குற்றசாட்டு மீது சுமத்தப்படுகிறது.  1980ஆம் ஆண்டு Ayer நகரில் நடந்த அந்தக் கொலையை Kennyதான் செய்ததாக kennyயின்  மனைவி உட்பட பலரும்  சாட்சி சொல்கிறார்கள். தங்கை Betty மட்டும் தன் அண்ணன் அந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டான் என்று தீர்மானமாக நம்புகிறாள். சாட்சியங்களின் அடிப்படையில் Kennyக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

தவறே செய்யாத தன் அண்ணன் தண்டிக்கப்பட்டதை கண்டு பொங்கி எழும் தங்கை Betty, தன்னுடைய வாழ்நாளில் அண்ணனை சிறையிலிருந்து மீட்பதையே லட்சியமாகக் கொண்டு சட்டம் பயிலத் தொடங்குகிறாள். இடையிடையே.. சிறைக்குச் சென்று அண்ணனுக்கு ஆறுதலாகவும் இருந்து வருகிறாள். இது அவள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. இருந்தாலும் அண்ணனுக்காக எல்லாவற்றையும் அந்த அன்புத் தங்கை தாங்கிக் கொள்கிறாள்.

ஒரு வழியாக டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரபல வழக்கறிஞர் Berry Sheck துணையுடன் 18 வருடங்கள் கழித்து அவளால் தனது அண்ணனை நிரபராதி என்று நிரூபிக்க முடிகிறது. 1983ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அண்ணனுக்கு 2001ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி விடுதலை வாங்கிக் கொடுக்கிறாள் தங்கை. இந்தப் படம் இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த படம் என்று சொல்ல முடியாது. ஆனால் அண்ணன் தங்கை உறவுக்கு தனி மதிப்பளிக்க வந்திருக்கும் படம். அண்ணன் Kenny Waterராக Sam Rockwellலும் தங்கை Betty Anne Waterராக Hilary Swankக்கும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் Tony Goldwyn.

THE CLIENT LIST (2010)

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் உருவாக்கிய சில பெண் கதாபாத்திரங்கள் பிரபலமானவை.

அன்றைய காலக்கட்டத்திலேயே சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கின்ற கட்டமைப்புகளை உடைத்தெரியும் பாத்திரமாக விளங்கும்.

அதிலும் குடும்ப நிலையை மாற்றியமைக்க தன்னையே விறகாக்கிக் கொள்ளும் பாத்திரங்களாவும் அவை உருவாக்கப்பட்டிருக்கும்.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பெண் கதாபாத்திரத்தின் கதையை ஆங்கிலத்தில் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு உணர்வை ஏற்படுத்திய படம்தான் The Client List.

Samantha Horton ஒரு முன்னாள் Texas அழகி. அவளது கணவன் Rex ஒரு விபத்தில் சிக்கி காலில் அடிப்பட்டு விடுகிறது. அதனால் அவனுக்கு வேலை பறிபோகிறது. 3 குழந்தைகள், வேலை இல்லாத கணவன். பொருளாதார நெருக்கடி. வேறென்ன அவள்தான் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக தன்னுடைய நகரிலேயே வேலை தேடுகிறாள். ஆனால் அச்சிறிய நகரத்தில் வேலை காலி இல்லை.

ஆகவே தன் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கின்ற நகருக்கு வேலை தேடி போகின்றாள்.  அங்கே ஒரு மசாஜ் நிலையத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள், மசாஜ் செய்து விடுவது தவிர வேறு சில சேவைகளையும் அவள் வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அவளும் எல்லாவற்றிக்கும் சம்மதம் சொல்கிறாள். ஆரம்பத்தில் குடும்ப தேவைக்காக விரும்பாத வேலையை செய்யத் தொடங்குகிறவள், நாளடைவில் அங்கு தனக்கு கிடைக்கின்ற மரியாதைக்கும், பரிசுப் பொருட்களுக்கும் அடிமையாகிறாள். அப்படியே அவளுக்கு போதைப் பொருள் பழக்கமும் ஏற்படுகிறது.

இதற்கிடையில் இந்த மசாஜ் நிலையத்தில் நடக்கின்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை பற்றி காவல் துறைக்கு தெரிய வருகிறது. இதுதவிர அந்த நகரில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புகிற அரசியல்வாதி ஒருவர் இந்த விவகாரத்தை பெரிதாக்கி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்.

பத்திரிகை, தொலைக்காட்சி மட்டுமின்றி அவ்வட்டார மக்களிடையேயும் பிரபலமாகி விட்ட இந்த விவகாரத்தினால் அவள் குடும்ப வாழ்க்கை பாதிப்புறுகிறது. Samanthaவின் கணவன் அவர்களது மூன்று பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு சென்று விடுகிறான். தனிமரமாக தான் செய்த தவற்றை எண்ணி வருந்தத் தொடங்குகிறாள் Samantha.

இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவள் எப்படி மீண்டு வந்தாள்? அவளுக்கு என்ன தண்டனை கிடைத்தது? அவளிடம் வாடிக்கையாளர்களாக இருந்த அதே நகரைச் சேர்ந்த ஆண்களின்  மனைவிகள் அவளை என்ன செய்தார்கள்? மீண்டும் அவள் குடும்பத்தோடு சேர்ந்தாளா? என்பதே நெஞ்சை உருக்கும் மீதிக் கதை.

இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக Samantha Hurton ஆக நடித்த Jeniffer Love Hewitt பெயர் சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Lifetime Network தொலைக்காட்சியில் ஒளிபரப்ப எடுக்கப்பட்ட இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்தப் படத்தின் இயக்குநர் Eric Laneuville. மக்களின் ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து 2011 ஜனவரி மாதம் டிவிடியிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

THE MECHANIC (2011)

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஆங்கில சினிமாவிலும் புகழ் பெற்ற சில படங்கள் ரீமேக் செய்யப்படுவதுண்டு. அப்படி ரீமேக் செய்து வெளிவந்துள்ள படம் The Mechanic. 1972ஆம் ஆண்டு Charles Bronson நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தின் ரீமேக்கில் தற்போதைய ஹாலிவூட் அதிரடி நாயகன் Jason Statham நடித்துள்ளார். இயக்கம் Simon West.

Arthur Bishop ஒரு கொலைக்காரன். தான் செய்கின்ற கொலைகளை விபத்தாகவோ, தற்செயலான நிகழ்வாகவோ அல்லது எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நுணுக்கமாகவோ செய்வதில் வல்லவன். இந்த துறையில் இவனுக்கு வழிகாட்டியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்கின்ற Harry McKennaவைக்  கொலை செய்யும்படி முதலாளி Dean-னால் பணிக்கப்படுகிறான்.

ஏற்றுக்கொண்ட தொழிலில் இருந்து சற்றும் பின்வாங்காத Bishop, Harry McKenna கார் திருட்டு சம்பவத்தில் கொலையுண்ட வகையில் கொலை செய்து விட்டு போகிறான். இருந்தாலும் Harry McKenna-வுக்கு பட்ட நன்றி கடனை தீர்க்கும் வகையில் அவனது மகன் Steve-வைத் தன்னுடன் இணைந்துக் கொண்டு தான் செய்து வரும் தொழில் நுணுக்கங்களைப் பற்றி கற்றுத்தரத் தொடங்குகிறான் Bishop. இதனை Bishop முதலாளி Dean கண்டிக்கிறான். இருந்தாலும் Bishop தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து Steveவைத் தன்னுடன் வைத்துக் கொள்கிறான்.

ஒரு கட்டத்தில் Harry McKenna-வைக் கொல்ல தன் முதலாளியால் தான் பலிகடா ஆக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளும் Bishop, தன்னுடைய முதலாளியைக் கொல்ல முடிவெடுக்கிறான். அதே சமயத்தில் தன்னுடைய தந்தையை கொன்றது Bishop-தான் என்ற உண்மையையும் steve தெரிந்துக் கொள்கிறான்.  தன் தந்தையைக் கொன்றவனை பழிவாங்கி Steve வஞ்சம் தீர்க்கிறானா?  இறுதியில் இருவரது நிலையும் என்ன ஆகிறது? என்பதுதான் பரபரப்பான முடிவு.

ஏன் கொலை செய்கிறார்கள் என்ற கேள்விக்கெல்லாம் படத்தில் பதில் இல்லை. இருந்தாலும் ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதத்தில் செய்யப்படுவது ரசிக்க வைக்கிறது. The Transporter 1,2,3, The Italian Job, The Bank Job படங்களின் வரிசையில் Jason Statham-க்கு இன்னொரு வெற்றிப் படம்.

THE TOWN (2010)

Chuck Hogan எழுதிய நாவலைத் தழுவி Ben Affleck இயக்கிய படம்தான் The Town . Charlestown என்ற அமெரிக்க நகரத்தில் வங்கி கொள்ளை என்பது சர்வ சாதாரணம். அப்படி வங்கியைக் கொள்ளையடிக்கின்ற திருடன் ஒருவனுக்கு அதே வங்கியில் துணை நிர்வாகியாக பணியாற்றுகின்ற பெண் மீது காதல் வந்தால் என்ன நடக்கும்?

Dough MacRay, Jem Coughlin, Albert Magloan, Desmond Eldenஆகிய நால்வரும் சிறு வயது தோழர்கள். நகரத்தில் பூக்கடை நடத்தும் Fergie என்பவனின் கையாளாக இவர்கள் செயல்படுகிறார்கள். Fergie யின் ஆலோசனையின் அடிப்படையில் பல கொள்ளைகளையும் செய்கின்றனர். இந்த சூழலில்தான் இந்தத் திருட்டுக் கும்பலை பிடிக்கும் பொறுப்பு Adam Frawley என்ற FBI அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் இவர்களை ஒடுக்க திட்டமிடுகிறார்.

அதே நேரத்தில் ஏற்கனவே இவர்கள் கொள்ளையடித்த வங்கியின்  துணை நிர்வாகி Claire Keesey மீது Dough காதல் கொள்கிறான். இவனுக்கு அவளைப் பற்றி தெரிந்தாலும், இவனை பற்றி தெரியாமலேயே Claire அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதைத் தெரிந்து கொள்ளும் FBI அதிகாரி,  Claireரும் அந்த வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் Claireரின்  காதலனைப் பற்றிய உண்மையையும் அவளிடம் சொல்லி விடுகிறார்.

Claireரைக்  காதலிக்கத் தொடங்கிய பிறகு கொள்ளையடிப்பதை நிறுத்தி விட முடிவு செய்யும் Dough , அதனை தன் நண்பன் Jemமிடம் சொல்கிறான். இதனால் இருவருக்கும் மனவருத்தம் ஏற்படுகிறது. இருந்தாலும் தன்னை தன் போக்கில் விட்டுவிடும்படி Dough கேட்டுக் கொள்வதற்கு இணங்க, Jem  அவனை போகச் சொல்கிறான். இருந்தாலும் இத்தனை காலமாக வேலை செய்து வந்த Fergie யிடமும் இந்த தொழிலில் இருந்து Dough விலகிக் கொள்ள விரும்புவதாக சொல்லிவிட்டு போகச் சொல்கிறான் Jem.

நேராக Fergieயிடம் சென்று தன்னுடைய முடிவை Dough சொல்லும்போது, அதனை ஏற்க மறுத்து விடுகிறான் Fergie. மாறாக, இந்த முடிவு அவன் காதலியை பாதிக்கும் என்றும் மிரட்டுகிறான். அதனால் இறுதியாக ஒரு கொள்ளை செய்ய ஒப்புக்கொள்கிறான் Dough. அந்தக் கொள்ளை திட்டமிட்டபடி நடந்ததா? காதல் நிறைவேறியதா? நண்பர்கள் நால்வரும் என்னவானார்கள்? என்பதுதான் படத்தின் முடிவு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான க்ரைம் படம். அதிலும் ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, கொள்ளையடித்து விட்டு வரும்போது பின்னாடி 10-20 போலீஸ் கார்கள் துரத்த, அதிலிருந்து தப்பித்து இன்னொரு காருக்கு மாறும் சமயத்தில் அவர்களுக்கு பக்கத்திலேயே ஒரு காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர்.. அவர்களை கண்டும் காணாதது போல் முகத்தை அந்தப் பக்கமாக திருப்பிக் கொள்வது.. நல்ல கலகலப்பான காட்சி. Gone Baby Gone படத்தையடுத்து Ben Affleck இயக்கத்தில் வெளிவந்துள்ள இன்னொரு சூப்பர் திரைப்படம் இது.

சிறுத்தை (2011)

சமீப காலத்தில் இப்படியொரு முழு நீள நகைச்சுவை படத்தைப் பார்க்கவில்லை. கார்த்திக்கு முதல் இரட்டை வேடம். ஒருவர் திருடன். இன்னொருவர் காவல் அதிகாரி. படத்தின் முற்பகுதி முழுவதும் திருடன் கார்த்தி (ராக்கெட் ராஜா) மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடி. வார்த்தைக்கு வார்த்தை சிரிக்கலாம். படத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் நிச்சயம் இந்த வருட “டாக்”.

அதிலும் பிற்பாதியில் வில்லன் கும்பலுடன் தனியொரு ஆளாக சந்தானம் நடத்தும் காமெடி தர்பார் “ஏ” ஒன். “ஏய்ய்ய்ய்ய்ய்” என்று சில லோக்கல் ரவுடிகள் கத்தும்போது “ஏன்டா வில்லன்கள் எல்லாம் ஒரே ரிங்டோனோட சுத்துறீங்க” என்று அதிரடியாய் சந்தானம் கேட்கும்போது… சிரிப்பு சத்தத்தில் தியேட்டரே அதிர்ந்தது.

அடுத்து ரத்னவேல் பாண்டியன். பார்வையில் சிறுத்தையின் கூர்மை. பேச்சில் அனல். நடையில் கம்பீரம், செயலில் புயல். போதாதா? வெற்றிப்பட வரிசையில் சிறுத்தைக்கு இடம் உறுதி. இரட்டை வேடத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல்.. இரண்டு படங்களில் நடிக்கிறோம் என்று கார்த்தி நினைத்திருப்பார் போலிருக்கிறது. இரு கதாபாத்திரங்களின் இயல்புகளை இருவேறு விதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். அதிலும் ரத்னவேல் பாண்டியனின் பாடி லாங்குவேஜ் அசத்தல். கார்த்திக்கு இது ஒரு அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர். இருந்தாலும் தப்பி தவறி கூட யாருடைய பாதிப்பும் குறிப்பாக காக்க-காக்க சூர்யாவின் பாதிப்பு வந்துவிடக்கூடாதென நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

ரத்னவேல் பாண்டியனுக்கான ப்ளாஷ்பேக் காட்சிகள் அவசர-அவசரமாக நீளம் கருதி கத்தரிக்கப்பட்டது போல தெரிகிறது. மற்றபடி இது லாஜிக் பார்க்கும் படமல்ல. வெறும் பொழுது போக்கு சித்திரம் மட்டுமே. சூர்யாவிற்கு போட்டி நிச்சயமாக வெளியில் இல்லை. வீட்டிற்குள்ளேயே இருக்கிறது.

தமன்னா.. வழக்கமான கதாநாயகி செய்யும் வேலையை மட்டும் செய்திருக்கிறார். ரத்னவேல் பாண்டியன் மகளாக வரும் அந்த சின்னப் பெண் நன்றாக நடித்திருக்கிறது. ஆள் மாறாட்டம் நிகழ்ந்திருப்பதை அறியாமல் தந்தை போலவே இருக்கும் ராஜாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் புரியாமல் தவிப்பது.. நிச்சயம் மனதை உருக்கும். சந்தானபாரதியும் மனோபாலாவும் வில்லன் கும்பலுக்கு துணை நிற்கும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். அதையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். கார்த்தி – சந்தானம் அட்டகாசத்துக்காக பார்க்கலாம்.