நாளை மஇகா தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த முறையும் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு, தன்னுடன் இணைந்து பணியாற்ற தகுதியுடையவர்கள் என்று சொல்லி அதிகாரத்துவ அணியை அறிவித்திருக்கிறார். மற்றபடி இந்த முறை நிறைய பேர் தனித்தே போட்டியிடுகிறார்கள். மஇகாவில் இது வழக்கத்திற்கு மாறான மாற்றம்.
துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலாக இது விளங்கினாலும் துணைத் தலைவர் பதவிக்கு நடக்கின்ற மும்முனை போட்டியைப் பற்றிதான் மலேசியா முழுவதும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். டத்தோ எஸ்.சுப்ரமணியம், டத்தோ ஜி.பழனிவேலு மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் ஆகியோர் இந்த முறை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதில் டத்தோ சுப்ராவும் டத்தோ பழனியும் ஏற்கனவே அந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். டத்தோ சோதிநாதன் மட்டும் முதல் முறையான அந்தப் பதவியைக் குறிவைத்து களமிறங்குகிறார்.
இனி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தனித் தனியாக பார்ப்போம்…
டத்தோ எஸ்.சுப்ரமணியம்
மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். டத்தோஸ்ரீ சாமிவேலுவும் இவரும் அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள். கொஞ்ச காலம் கழித்து கைகுலுக்கிக் கொண்டு ‘மக்கள் நலன் கருதி இணைக்கிறோம்’ என்று அறிக்கை விடுவார்கள். இடையில் எந்த சாத்தான் புகுந்து வேதம் ஓதுமோ தெரியாது, மீண்டும் பத்திரிகைகளில் அறிக்கை போர் நடத்தி ஒருவர் சட்டையை ஒருவர் இழுத்துக் கிழிக்காத குறையாக திட்டிக் கொள்வார்கள். மஇகா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு நடந்துக் கொண்டிருக்கும் அறிக்கை போர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்போது அமெரிக்கா-ரஷ்யா மாதிரி அணுகுண்டு வீசுவதைப் பற்றியெல்லாம் பேசி மஇகா பேராளர்கள் வயிற்றில் புளியை அல்ல கிலோ-கிலோவாக மிளகாய்த் தூளை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி வாய்ப்பைப் பொருத்தவரை டத்தோ சுப்ராவிற்கென தனிப்பட்ட ஆதரவாளர்கள் மஇகாவில் உண்டு. அந்த ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் நிச்சயம் டத்தோ சுப்ராவை சென்றடையும். ஆனால் அந்த ஓட்டுக்களை மட்டுமே டத்தோ சுப்ரா நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் சென்ற முறை நடைப்பெற்ற தேர்தலில் கூட டத்தோ பழனிவேலுவிடம் இவர் தோற்றுப் போனார். இத்தனைக்கும் பழனிவேலு அப்போது முற்றிலும் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவை நம்பியே களத்தில் நின்றார். இப்போது அவரும் ஒரு தவணை துணைத் தலைவராக வேறு இருந்து விட்டார். ஆகவே போட்டி நிச்சயம் கடுமையானதாக இருக்கும். இந்த தேர்தல் டத்தோ சுப்ராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. வேறு கட்சியில் இணைய மாட்டேன். நான் மஇகாகாரன் என்று ஒவ்வொரு முறையும் டத்தோ சுப்ரா சொல்லி வந்திருக்கிறார். ஆனால் மஇகா தலைவரோ இவர் ஒரு செயல்படாத அரசியல்வாதி என்கிறார். மஇகா பேராளர்களின் நிலைதான் மதில் மேல் பூனை மாதிரி ஆகி விட்டது.
டத்தோ ஜி.பழனிவேலு
தேசிய தலைவரின் ஆசி பெற்ற தளபதி. வெற்றிக் கோட்டை தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட தலைமைப் பொறுப்பை இவரிடம்தான் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறேன் என்று டத்தோஸ்ரீ சாமிவேலுவும் கோடிகாட்டி விட்டார். டத்தோ சுப்ரா சாதிக்க முடியாத விஷயம் இது. மௌனமாக இருந்தே பழனிவேலு சாதித்துக் கொண்டார். அந்த வகையில் இவர் ஓகே என்று மஇகாவில் லேசாக முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். எல்லாம் ஜயப்பனின் அருள்.
இவரது நிலை முயல் ஆமை கதை போல் ஆகிவிடும் என்றும் எதிர்தரப்பினர் சொல்கிறார்கள். தலைவனின் ஆணையை மீறி மஇகாவில் ஒன்றுமில்லை என்பதை டத்தோ பழனிவேலு அறியாதவரல்ல. ஆனாலும் சென்ற முறை இவருக்கு விழுந்த ஓட்டுகள் இந்தமுறை டத்தோ சோதிநாதன் தரும் போட்டியினால் சிதறிவிடும் வாய்ப்பு இருப்பதையும் இவர் கவனத்தில் கொள்ள வேண்டும். டத்தோ சோதியும் முன்பு டத்தோஸ்ரீயின் அரவணப்பில் இருந்தவர்தானே… ஆகவே இவருக்கு ஓட்டு போடுவதில் என்ன பிரச்னை ஏற்பட்டுவிடப் போகிறது என மஇகா பேராளர்கள் கருதினால் அதன் விளைவுகள் பழனிவேலுவின் வெற்றியை பாதிக்கும். ஆக, பழனிவேலு வெற்றிக் கோட்டிற்கு மிக மிக அருகில் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு தெரியும் வரை எதுவும் உறுதியாக சொல்வதற்கில்லை.
டத்தோ எஸ்.சோதிநாதன்
இன்றைய தேதிக்கு மஇகாவின் டைனமிக் இளைஞர் இவர்தான். மாற்றத்திற்கான தேவை என்ற இவரது பிரச்சார யுக்தி மஇகா பேராளர்களின் குறிப்பாக இளைஞர்களின் பார்வையை இவர் பக்கம் ஒரளவுக்கு திருப்பியுள்ளது. அதே நேரத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் விசுவாசியாக இருந்த இவர், திடீரென தலைவர் ஆசி பெற்ற வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் குதித்திருப்பதும் பலரது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கைப்பிடியிலிருந்த அதிகார சாட்டை மெல்ல மெல்ல நழுவி விழுந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் இது தென்படுகிறது.
தனது அதிகாரத்துவ அணி வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டத்தோ சோதிநாதனைப் பார்த்து, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை விடுத்து நேராக தேசிய தலைவர் பதவிக்கே போட்டியிட்டிருக்கலாம் என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கிண்டலடிக்கிறார். பொதுவாக சாமிவேலு தனக்குப் பிடிக்காதவர்களை பற்றி மட்டும்தான் இப்படி கமெண்ட அடிப்பார் என்று மஇகா உறுப்பினர்களுக்கு தெரியும். இது மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்களால் கவனமாக பரிசீலிக்கப்படலாம். கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் உண்மையான மஇகா உறுப்பினர்கள் டத்தோ சுப்ரா மற்றும் டத்தோ பழனிவேலுவை ஓரங்கட்டி விட்டு, தன் சேவையை மட்டும் நம்பி நிற்கும் சோதிநாதனுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆக, மூவருக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமான அளவிலேயே இருக்கிறது. இதில் யாருமே பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்க தோன்றவில்லை. ஒரு வேளை அப்படி யாராவது பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் அவர்தான் அடுத்து கட்சியை வழிநடத்த சரியான தலைவராக மஇகா பேராளர்களால் கருதப்படுகிறார் என்று அர்த்தம்.
டத்தோஸ்ரீ சாமிவேலு துணைத் தலைவர் பதவிக்கு அறிவித்திருக்கும் வேட்பாளரைத் தவிர வேறு யார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களால் சிறப்பாக கட்சிப் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே… காரணம் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தானே போட்டியிடுவது போலத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு நடந்துக் கொள்கிறார். தான் விரும்புகின்ற தலைவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு செல்லும் வரை அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதையும் பேராளர்கள் அறிவார்கள். தலைமைத்துவ மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்கள், கட்சியின் தலையெழுத்தை நாளை எப்படி நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்….