Monthly Archives: செப்ரெம்பர் 2011

மே13 கலவரம்

மலேசிய வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக திகழ்கிற மே13 கலவரம், 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவின் எதிரொலி என்றால் அது மிகையில்லை.

 அன்று 1969ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி, காலையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதிர்ச்சி தரும் வகையில் கூட்டணிக் கட்சி (அம்னோ-மசீச-மஇகா) 2/3 பெரும்பான்மையை தக்க வைப்பதில் தோல்வி கண்டிருந்தது. 1964ஆம் ஆண்டு 86 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற கூட்டணிக் கட்சி 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. எதிர்கட்சிகளான டிஏபி-பாஸ் மற்றும் பிபிபி அந்தத் தேர்தலில் மொத்தமாக 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றிருந்தன.

அந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்த எதிர்க்கட்சிகள், அதற்கொரு வெற்றி விழாவை நடத்த நாள் குறித்தன. அது 1969ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி. போலீஸ் பெர்மிட்டுடன் நடந்த இந்த வெற்றி ஊர்வலம், இன பிரச்னையை தூண்டிவிட நடத்தப்பட்ட ஒன்றல்ல என்றாலும் இதில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத பலரின் தன்மூப்பான நடவடிக்கையால், மலாய் இன மக்களின் வெறுப்பு சீனர்களின் பக்கம் திரும்பியது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், மலாய்காரர்களின் சிறப்புரிமை மற்றும் பூமிபுத்ரா அல்லாத இனங்களின் குடியுரிமை சார்ந்து கேள்வி எழுப்பியிருந்தது இதற்கு வசதியாக அமைந்து விட்டது.

மீண்டும் மே 12 ஆம் தேதி இன்னொரு வெற்றி ஊர்வலத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதனை கோலாலம்பூரில்  நடத்தவும் முடிவு செய்தன. மலாய் இனத்தவர் அதிகம் வசிக்கின்ற கம்போங் பாரு வழியாக இந்த ஊர்வலம் வந்தபோது, பொறுப்பற்ற சில நபர்களால் எழுப்பப்பட்ட தேவையில்லாத இனநெடி மிகுந்த கோஷம் மற்றும் ஊர்வலத்தில் காட்டப்பட்ட பதாதைகளால் கோபமுற்ற மலாய் இன மக்கள் துடைப்பத்தை வீதிக்கு கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் வெற்றி ஊர்வலத்தில் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள், மலாய் இன மக்கள் மீது காறி உமிழ்ந்தும், துடைப்பத்தை தங்களது வாகனத்தில் கட்டிவைத்தும் (பல இடங்களில் கூட்டணிக் கட்சி
தொகுதிகளை எதிர்கட்சிகள் தங்கள் வசமாக்கி கொண்டதன் அடையாளமாக) கொண்டாடினர்.

பெரும்பான்மையான சீன உறுப்பினர்களைக் கொண்டிருந்த எதிர்கட்சிகள், இந்த ஊர்வலம் நடந்து முடிந்த மறுநாள் (மே 13) தங்களது ஆதரவாளர்களின் செயலுக்காக மன்னிப்பு கோரின. ஆனாலும், இந்த மன்னிப்பு கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களின் காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே, அதே நாளன்று முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு வெற்றி ஊர்வலத்தை கூட்டணிக் கட்சிகளின் சார்பாக அம்னோ நடத்த வேண்டுமெனக் கோரி அதன் ஆதரவாளர்கள் அப்போதைய சிலாங்கூர் முதல்வர் டத்தோ ஹரூண் இட்ரிஸ் வீட்டிற்கு முன்பாக கூடினர். டத்தோ ஹரூண் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கும் பொருட்டு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதோடு அம்னோ ஏற்பாட்டில் வெற்றி ஊர்வலம் அன்றைய இரவு 7.30 மணியளவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையில், ஸ்தாபாக்கில் மலாய் இன ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலும் மலாய் இன கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவை பன்றி இறைச்சியை மாட்டி வைக்க பயன்படுத்தும் கொக்கியைக் கொண்டு கருவறுத்த தகவலும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை கொந்தளிக்க வைத்தது. இது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்துக் கொண்டிருக்க யாருக்கும் பொறுமையில்லை. இனக் கலவரம் தொடங்கி விட்டது.

சரியாக மாலை 4 மணியளவில் கம்போங் பாரு வழியாக சென்ற இரு சீன ஆடவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. சிகரட் கொண்டுவரப்பட்ட வேன் கொளுத்தப்பட்டது. அதன் ஓட்டுனநர் கொல்லப்பட்டார். சீன குண்டர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் செயலில் இறங்கினர். கோலாம்பூர் சுற்று வட்டாரத்தில் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.. பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்த கலவரத்திற்கு ஏற்றவாறு ஆயுதங்களையும் அவர்கள் முன்கூட்டியே தயார் செய்தும் வைத்திருந்தனர்.

இருதரப்பின் தாக்குதலும் எல்லை மீறிப் போக.. நிலமையைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலாங்கூர் வட்டாரங்களில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. முதலில் ஃஎப்.ஆர்.யூ கட்டுப்பாட்டில் இருந்த கம்போங் பாரு பின்னர் ரெஜிமென் ரேஞ்சர் பிரிவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சீனரின் தலைமையில் செயல்பட்ட இந்தப் பிரிவு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதாக கூறி மலாய் இளைஞர்களை சுடத் தொடங்கியது. கம்போங் பாரு மலாய் இளைஞர்கள், தாங்கள் சீனர்களுக்கு மத்தியிலும் ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு மத்தியிலும் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதாக குமுறினர். இந்தக் குமுறல் பின்னர் மாபெரும் கோபக் கனலாக மாறியது. இதன் எதிரொலியாக ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு பதிலாக மலாய்காரர்கள் நிரம்பிய ராணுவப் படை அங்கே பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அப்படி வந்த சில ராணுவ வீரர்கள் சீனர்களுக்குச் சொந்தமான நகைக்கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். தவிர தங்கள் மீது கண்ணாடி பாட்டிலை வீசியதாக கூறி சீனர்களை சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இளைஞர்கள் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் அமைந்துள்ள ஓடியன் திரையரங்கை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதில் படம் பார்த்துக் கொண்டிருந்த சீனர்களை மட்டும் வெளியேற்றும் விதமாக திரையில் சீன மொழியில் அறிவிப்பு போடப்பட்டது. அதில் இருந்த இதர இனத்தவருக்கு சீன மொழியை படிக்கத் தெரியாதென்பது கலகக்காரர்களுக்கு வசதியாக போய்விட்டது. கொலை வெறியுடன் ஓடியன் திரையங்கில் நுழைந்த சீன இளைஞர்கள், அங்கிருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.

சிலாங்கூர் – கோலாலம்பூர் மட்டுமே இந்த இனக்கலவரம் நடந்தது. பேராக், கெடா, பினாங்கு, ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மலாக்காவில் சிறு கலவரம் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. பின்னர் துங்குவின் ஆலோசனையின் பேரில் மே 16ஆம் தேதி பேரரசர் சுல்தான் இஸ்மாயில் நசாரூதீன் ஷா அவர்கள் தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன் தலைவராக துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக் பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்கள் நாட்டின் அனைத்து சட்ட திட்ட கட்டுப்பாடுகளும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மெல்ல-மெல்ல இனக்கலவர பாதிப்பிலிருந்தும் மலேசியா மீளத் தொடங்கியது.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, துங்கு அப்துல் ரஹ்மான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து துன் அப்துல் ரசாக் நாட்டின் இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீண்டும் நாடாளுமன்றம் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியது. தீமையிலும் ஒரு நன்மை என்பது போல நமது நாட்டின் தேசிய கோட்பாடு (ருக்குன் நெகாரா) இந்த இனக் கலவரத்திற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

(மே 13 கலவரம் பற்றிய பல்வேறு கட்டுரை, செய்திக் குறிப்பு என பலவற்றை வாசித்த பின்தான் இந்தப் பதிவை எழுதினேன். பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. அதில் சில கட்டுரை மற்றும் செய்தி குறிப்புகளில் காணப்பட்ட முக்கிய தகவல்களை மட்டுமே இங்கே தொகுத்து தந்துள்ளேன்)

நாய் வளர்க்கும் கலை.

இது எனக்கு நன்கு தெரிந்தவனின் கதை. அதனால் தைரியமாக வலையேற்றலாம். அவனைத் தவிர வேறு யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. அந்த “அவன்” யாரென்று பின்னால் தெரியவரும்.

சிறிய நகரங்களில் நாய் வளர்ப்பது போல, கோலாலம்பூர் குடியிருப்பு பகுதிகளில் அவ்வளவு சுலபமாக நாய் வளர்த்துவிட முடியாது. 1008 ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் உண்டு. இங்கே பெரும்பாலும் பலரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு பை-பை சொல்லியவர்கள் என்பதால் நாய் வளர்ப்பதெல்லாம் நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வருகிறது. சீனர்களைத் தவிர பெரும்பான்மையான இந்தியர் வீடுகளில் இப்பொதெல்லாம் நாய்களைக் காண முடிவதில்லை.

மேலும் இங்கு யாருக்கும் நேரமே இருப்பதில்லை. நேரமின்மை என்ற நோய் பீடித்த மனிதர்களே இங்கு அதிகம். என்ன செய்வது புற்றுநோயை விட மிக பயங்கரமான வியாதியாக இப்போது நேரமின்மை கருதப்படுகிறது. “எந்த 5 நிமிஷத்தைக் கேட்குறீங்க? கொடுத்தா வைச்சிருக்கீங்க?” என டிஹெச்ஆர் ராகாவில் பொதுநல அறிவிப்பு போடுகிற அளவுக்கு ஆளாளுக்கு நேரத்தைப் பாராபட்சமின்றி கடனாகக் கேட்கின்றனர். இவனும் இப்படியொரு சிக்கலில் சிக்கிக் கொண்டவன்தான். வீட்டில் ஓய்வெடுக்கவே நேரமில்லை. இதில் நாய் வளர்க்க கிளம்பினால் என்ன ஆகும்?

திடீரென ஒரு காலை பொழுதில் அவனுடைய வெளிநாட்டு நண்பன், தன்னுடைய நாய் ஈன்றிருக்கும் குட்டியில் ஒன்றைத் தருவதாக சொன்னபோது, தனக்கு கிடைத்த புது வாய்ப்பை எண்ணி அவன் மனம் துள்ளிக் குதித்தது. (“கண்ணா லட்டு திங்க ஆசையா???”) போதாக்குறைக்கு அது அல்சேஷன் மற்றும் லெபரேட்டர் கலப்பில் உருவான குட்டி. (“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆ..சை..யா????”) விலை எப்படியும் 3000 ரிங்கிட்டுக்கும் மேல்.

இருந்தாலும் மனைவியாகிய, வீட்டின் நிரந்தர நிதி மற்றும் தலைமை செயலாக்க அதிகாரியிடம்  ஒப்புதல் வாங்காமல் எதையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்விட முடியாது.

“நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கலாம்னு இருக்கேன்.”

“எதுக்கு? சும்மா இருக்க முடியலியா?”

மனைவியிடம் நாயின் குலம் கோத்திரம் பற்றி எல்லாம் சொல்லி, கெஞ்சி –  கொஞ்சி சம்மதம் கேட்டபோது, ஏதோ பண்ணுங்க என்று அவளும் சொல்லி விட்டாள். ஒரு சுபயோக சுபதினத்தில் நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு வந்தாகி விட்டது.

முதல் வேலையாக நாய்க்கு வேண்டிய சங்கிலி, தட்டு, பிஸ்கட், டின் உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் என்று வாங்கியதில் செலவு 200 வெள்ளியைத் தாண்டியது. அடுத்ததாக கூண்டு வாங்க வேண்டும். இதுவோ சின்ன ரக நாயில்லை. இப்போது சின்னதாக வாங்கும் கூண்டு இன்னும் 10-12 மாதத்தில் உபயோகப்படாது. தவிர எந்தக் கூண்டுமே மேலே கூரை கொண்டதாக இல்லை. அப்படி கூரை கொண்ட கூண்டுகள் வைக்க வீட்டில் இடம் போதாது. விலையும் 2000 ரிங்கிட் என பயமுறுத்தியது.

முதல் பிரச்னை தோன்றியது அப்போதுதான்..

இந்த வீடு கட்டுற டெவலப்பர் இருக்கானுங்களே.. கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டானுங்களா? ஒரு வீட்டைக் கட்டுனா அதோட முன் தாழ்வாரத்தை குறைந்தபட்சம் கேட் வரைக்கும் வைக்கிறது இல்லை? இப்போ நான் நாயை எங்கே கொண்டு போய் கட்டுறது????? மழை தூறினால் நாய் நனையுமே? அவன் உச்சி மண்டையில் யாரோ அம்மியை வைச்சு நச்சு நச்சென்று அரைத்தார்கள்.

பெரிய ஏ3 பேப்பர் ஒன்றை எடுத்து, என்னமோ இன்னொரு கேஎல்சிசி கட்டுகிற தோரணையில்  அங்கும் இங்கும் 4 கோடுகளைப் போட்டு, கூரை, கதவு, ஜன்னல் என்று தனித் தனியாக வரைந்து, அதற்கு என்ன வர்ணம் கொடுக்கலாம், நிப்போன் பெயிண்ட் அடிக்கலாமா? இல்லை ஜசிஜ பெயிண்ட் பெட்டரா? வெளியே விளக்கு வைத்து மின்சார இணைப்பு கொடுக்கலாமா? இல்லை அப்படியே விட்டு விடலாமா? நாயின் ஹாலில் சின்னதாக கார்ப்பெட் போட்டு படுக்க வைக்கலாமா? இல்லை வெறும் இரும்புக் கம்பியை தரையாகப் போட்டு, கீழே ஒரு ட்ரே மாதிரி வைத்தால் நாயின் இயற்கை கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமா? என்றெல்லாம் துல்லியமாக திட்டமிட்டு, ஒருவேளை வேறு வீடு மாற வேண்டியதிருந்தால் சிமெண்ட் வைத்து கட்டப்பட்ட நாய் வீட்டை தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் நாய் வீட்டின் சுவரை பலகையிலேயே செய்து விடலாம் என்று அவன் முடிவு செய்து நிமிர்ந்த போதே அவனுக்குத் தெரிந்து விட்டது. “நாம் போகாத ஊருக்கு வழி தேடுறோம்!”.

இனி என்ன செய்வது என்று திக்கித் தடுமாறி நின்றபோது, அவன் மனைவி தேவதை மாதிரி ஒரு அருள் பாலித்தாள். “வீட்டுக்குள்ளேயே கட்டி வைங்க”. உடனே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான் அவன். வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து நாயை கட்டி வைக்க முடியாது. அதனால் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு காலியான இடத்தை தேர்ந்தெடுத்து நாயை அங்கே கட்டினான். இந்த நாய்க்குட்டிக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சிறுநீரை மிகச் சரியாக அது படுப்பதற்காக விரித்து வைத்த துணியில் அடித்து வைத்தது.

எத்தனை முறை துணியை மாற்ற முடியும்? உடனே துணிக்கு மாற்றாக பேப்பரை விரித்துப் பார்த்தான். உயர்ரக நாயல்லவா? மிகச் சரியாக பேப்பர் மீது சுச்சா போனது. ஒருவகையில் அவனுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகப் பட்டது. கண்ட இடத்தில் வீட்டை அசுத்தப்படுத்தி வைக்காமல், ஒழுங்காக ஒரே இடத்தில் போகிறதே என.. ஆனால் அந்த மகிழ்ச்சி 30 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. சீறுநீரை சரியாக பேப்பரில் அடிக்கக் கற்றுக் கொண்ட அந்த நாய்க்குட்டி, மலம் கழிப்பதை மட்டும் பேப்பரை விட்டு தனியாக வீட்டுத் தரையில் செய்து வைத்தது. அவனுக்கு இரண்டாவது முறை தலையில் அம்மிக்கல் இடி விழுந்தது.

சரி எல்லாமே நாம் பழகிக் கொடுப்பதில்தானே இருக்கிறது என்று அவனும் மறுநாள் முதலாக நாயை வீட்டில் இருக்கின்ற டாய்லெட்டை பயன்படுத்த சொல்லிக் கொடுக்க தொடங்கினான். அவன் கெட்ட நேரமா இல்லை நாயின் பிடிவாதமா என்று தெரியவில்லை.. நாயக்கு டாய்லெட்டை பயன்படுத்துவதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அதற்காக தினமும் வீட்டின் முன்புறமுள்ள திடலைச் சுற்றி 45 நிமிடங்கள் நாயோடு அவன் வாக்கிங் போக வேண்டியதிருந்தது.

அதிகாலை 1-2 மணிக்கு படுப்பவனை அவ்வளவு சீக்கிரம் எழுப்ப மனைவியே துணிந்ததில்லை. ஆனாலும் நாய் தனது சங்கீத குரலால் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவனை அதிகாலை 5 மணிக்கே அலறிக் கொண்டு எழ வைப்பதில் வெற்றி கண்டது. 5 மணியிலிருந்து 5.45 மணி வரை இருவரும் வாக்கிங் போவார்கள். பின்னர்  காலை 7 மணி அளவில் நாய்க்கு காலை உணவு வைக்க வேண்டும். வேலைக்கு கிளம்பும் சமயம் நாயை வீட்டிற்குள் கொண்டு வந்து கட்டினால் அதோடு இரவு சரியாக 8 மணியளவில் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போயே தீர வேண்டும். அப்படி  இல்லையென்றால் அதற்குரிய தண்டனையாக வீட்டை கழுவ வேண்டியதிருக்கும். 9 மணியளவில் இரவு உணவை வைக்க வைக்க வேண்டும்

இதுவே அவனது தினசரி வழக்கமானது.  விரும்பி ஏற்றுக் கொண்ட சுமை. இறக்கி வைக்க முடியாது. தவிர இதில் அவன் பின்வாங்கி விட்டால் இனி ஆயுளுக்கும் “நாய்” என்று எழுத்துக்கூட்டி படித்தாலும் முகவாய் கட்டையில் பூரிக்கட்டையால் அடி விழலாம். நாமே உருவாக்கிக் கொண்ட இந்த சுகமான சுமையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டியதுதான், கௌரவமாவது மிஞ்சும் என முடிவெடுத்தான். அதிலும் ஒரு பிரச்னை இருந்தது. மழைத்தூறும் சமயத்தில் நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது இயலாத காரியம். அப்போதெல்லாம் வீட்டைக் கழுவினான்.

அடுத்ததாக நாய்க்குத் தடுப்பூசி போட வேண்டும். இந்தக் குட்டிக்கு இன்னும் போடவில்லை என்று ஏற்கனவே நண்பன் சொல்லியிருந்தான். தடுப்பூசி போட நல்ல கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு முன்பாக அங்கே எல்லாம் எட்டிக் கூட பார்த்ததில்லை. தன் வட்டாரத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவர் பட்டியலை Yellow Pages புத்தகத்தில் தேடினான். காலாற நடந்து போகிற தூரத்தில் ஏதும் இல்லை. நாயை வாகனத்தில்தான் ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு விடுமுறை நாளன்று நாயை அங்கே கொண்டு சென்றான்.

‘1இல் 9 அடங்கிய ஊசியா? இல்லை 1இல் 41 அடங்கிய ஊசியா?’

முதல் கேள்வியே திக்குமுக்காட வைத்தது.

“உங்களுக்கு எதைப் போடணும்னு தோணுதோ அதைப் போடுங்க..” ஒருவழியாக தன்னை நோக்கி ஏவப்பட்ட அணுகுண்டை டாக்டர் பக்கமே திருப்பி விட்டான். தன் நாய்க்கு ஏதும் ஏடாகூடாமாகி விடக்கூடாது என்ற கவலையும் கூடவே சேர்ந்துக் கொண்டது. ஒருவழியாக.. பல கேள்விகளால் அவனை தொடர்ந்து வறுத்தெடுத்து.. நாய்க்கு 1இல் 9 அடங்கிய ஊசியே போதும் என டாக்டர் முடிவு செய்தார்.

ஊசி போட்ட பிறகு, இன்னும் 1 வாரத்திற்கு நாயைக் குளிப்பாட்டக் கூடாது என்று தொடங்கி தனியாக 5-6 கட்டளைகள் இட்டார். எல்லாவற்றையும் கர்ம சிரத்தையும் அவனும் கேட்டுக் கொண்டான். நாய்க்கு ஏதும் ஆகிவிடக் கூடாதல்லவா? நாளைய சரித்திரத்தில் நாய் வளர்க்கத் தெரியாதவன் என்ற அவப்பெயர் எக்காரணத்தைக் கொண்டும் தன்னோடு ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

ஊசி போட்டு விட்டு வந்த இரண்டு நாட்களும் நாயின் ஒவ்வொரு அசைவையும் உற்றுக் கவனித்தான். ஓகே! எல்லாம் சரியாக இருக்கிறது.  நமக்கு நாய் வளர்க்கத் தெரிந்து விட்டது. அவனுக்குள்ளேயே ஒரு பெருமித உணர்வு பொங்கி அடங்கியது.

இப்போது அவனுக்கு எல்லாம் பழகிப் போய் விட்டது. முன்கோபியான அவனுக்கு ஓர் இமாலய பொறுமையும் கைக்கூடி வந்திருக்கிறது. கூடவே “பரவாயில்லையே வீட்டு வேலையும் நல்லா செய்றீங்களே” என்ற மனைவியின் பாராட்டும் கிடைத்துள்ளது. (இந்தப் பாராட்டின் பின்னணியில் என்னவெல்லாம் இருக்கோ????)

இப்போது அவன் நாய்க்கு லைசன்ஸ் வாங்கும் முயற்சியில் இருக்கிறான். இப்போது இல்லையெனினும் என்றெனும் ஒருநாள், அவன் “நாய் வளர்க்கும் நுணுக்கங்கள்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாம். அப்படியொரு நிலை வரும் சமயத்தில் தமிழுக்கு புது வரவு என ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர இந்த மலையக தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை!

என்ன, அவன் யாரென்றா கேட்கிறீர்கள்?. ஹிஹிஹிஹிஹி…

மங்காத்தா – தியேட்டரில் நடந்த கலாட்டா!

மங்காத்தா “தல”யின் 50வது படம். வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்பந்தம். அதற்கு தல தேர்ந்தெடுத்த நபர்  வெங்கட் பிரபு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் அதிர்ச்சி அதுதான். மிகப் பெரிய சவால். இந்த இளைஞனால் முடியுமா என்றுதான் எங்கேயும் பேசிக் கொண்டார்கள். ஆனால் வெங்கட் பிரபுவின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் அஜீத். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஆமாம், சொல்லி அடித்த “கில்லி”யை விடவும் சொல்லாமல் அடித்த மங்காத்தாவுக்கு இப்போது மவுசு அதிகம். மீண்டும் விஜய்யுடனான அடுத்த சுற்று மங்காத்தா ஆட்டத்துக்கு “தல” ரெடி, வெல்டன் ‘தல’! படத்தைப் பற்றி கேட்டால் இவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றபடி பார்த்து ரசிக்க வேண்டிய படமிது.

இந்த பதிவு படத்தை பற்றி சொல்வதற்காக அல்ல. படத்தைப் பார்க்கப் போனபோது நடந்த டிக்கெட் கலாட்டா பற்றி சொல்வதற்காகவே… மங்காத்தா நம் நாட்டில் கடந்த 1ஆம் தேதி திரையிடப்பட்டது.  நான் 3ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9மணி ஷோவுக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். இடம்: ப்ரைம் மால், கெப்போங். லோட்டஸ் பிக் சினிமா தியேட்டர்.

பொதுவாக நான் தியேட்டருக்கு போய் டிக்கெட் எடுப்பதில்லை. நேரடியாக ஒன்லைன் வழியாக டிக்கெட் வாங்கி விடுவேன். இந்த முறையும் அப்படிதான் Couple சீட்டுக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினேன். விலை 13 வெள்ளி மட்டுமே. இந்த (குறைந்த) விலை எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் அதைப்பற்றி எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. நேராக தியேட்டருக்குப் போய்விட்டேன். கூடவே நிறைமாதமாக இருந்த என் மனைவி.

எங்கள் அரங்குக்கான சீட்டிங் விளக்கு எரியத் தொடங்கியவுடன் உள்ளே போனோம். வாசலில் டிக்கெட் பரிசோதகர்களாக நம் இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். டிக்கெட்டை காட்டியவுடன் உள்ளே போக அனுமதித்தவர்கள். பின்னர் என்னை மட்டும் அழைத்து இது ஒரு ஆள் அமர்வதற்கான டிக்கெட் மட்டுமே என்றார்கள்.

இது Couple சீட். எப்படி தனியாக ஒரு ஆளுக்கு மட்டும் கட்டணம் வசூலித்திருப்பீர்கள் என்று கேட்டேன். தவிர ஒன்லைனில் டிக்கெட் வாங்கும் போது Couple சீட் என்றால் (குறிப்பாக கிஎஸ்சி தியேட்டர்) இருவருக்கும் சேர்த்தே விலை போட்டிருப்பார்கள். மேலும் பிக் சினிமா தன்னுடைய டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தில் Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்று அறிவிப்பு ஏதும் போடவில்லை. பிறகெப்படி அது எனக்குத் தெரியும் என்றும் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஆங்கிலப் படமென்றால் நான் சொல்வது போல இரண்டு பேருக்கும் சேர்த்தே விலை காட்டப்படும் என்றும் தமிழ்ப்படத்திற்காக அந்த முறை மாற்றப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். இருந்தாலும் பரவாயில்லை. உள்ளே இடம் இருந்தால் நீங்கள் அங்கே அமர்ந்துக் கொள்ளலாம் என்றும் பச்சைக் கொடி காட்டினர்.

தியேட்டர் உள்ளே போனால், நான் பதிவு செய்த இடத்தில் இன்னொரு ஜோடி அமர்ந்திருந்தது.  அவர்களிடம் கேட்டபோது, தனித்தனியாக வேறு சீட்டுக்கு பதிவு செய்தவர்கள் ஒழுங்காக என் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

அதாவது நான் பதிவு செய்த  சீட் ஏ7-ஏ8 என்றால் என்னிடம் ஏ7 இருக்க அவரிடம் ஏ8 இருந்தது. அவருடைய காதலியோ சி7 சீட்டுக்கான டிக்கெட்டை வைத்திருந்தார். அவர்கள் பிக் சினிமா முறைப்படி Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்கி இருந்தாலும் வேறு வேறு சீட்டுக்கான டிக்கெட்டை வாங்கி இருந்தார்கள். எப்படியும் ஒருவர்தானே ஏ7 டிக்கெட் வாங்கி இருப்பார். அவரிடம் சொல்லி இடம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

டிக்கெட் குழப்பம் அங்கேயே தொடங்கி விட்டது. அதற்குள் படமும் ஆரம்பமாகி விட்டது. 3 திரையரங்கில் மங்காத்தா அன்று ஒரே காட்சியாக திரையிடப்பட்டிருந்தாலும் எல்லாமே House Full. நிறைய பேர் திரையரங்கின் உள்ளே வந்த வண்ணமிருந்ததால் மேலும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்காமல் வெளியே வந்து டிக்கெட் பரிசோதகர்களிடம் பிரச்னையை விளக்கினேன்.

“நீங்க மட்டும் இல்லண்ணே.. இந்த முறை நிறைய சீட்டிங்ல நிறைய குழப்பம். தமிழ்ப்படம் போட்டாலே இப்படிதான் 1000 குழப்பம் வரும்” என்று அவர்கள் தங்களுடைய சோக குமுறலை சொல்ல ஆரம்பித்தபோதே கிட்டத்தட்ட 20 பேர் அங்கே வந்து தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் உட்கார்ந்திருப்பதாக முறையிட்டனர். “நான் சொல்லலை?” என்றவாறு ஒருவர் சிரித்துக் கொண்டே அவர்களை சம்பந்தப்பட்ட 10ஆம் எண் கொண்ட அரங்கிற்குள் அழைத்துப் போனார்.

அங்கிருந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர் அன்றைய டூட்டி சூப்பர்வைசரை அழைத்து என் பிரச்னை குறித்து சொன்னார். நிலைமையைப் புரிந்துக் கொண்ட அவரோ, இன்றைய அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட் (நள்ளிரவு 12 மணி உட்பட) அனைத்தும் விற்று முடிந்து விட்டதென சொல்லி, நாளைக்கு முதல் ஷோவுக்கான (நண்பகல் 12மணி) மாற்று டிக்கெட் தரட்டுமா என்று கேட்டார். மேலும் நடந்துவிட்ட கேளாறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில்  26 வெள்ளி மதிப்புடைய சீட்டை நான் வாங்கிய விலைக்கே தருவதாக சொன்னார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சம்மதித்தேன். டிக்கெட் எடுத்து வர போய்விட்டார்.

அப்போது, 11ஆம் அரங்கிலிருந்து வெளிவந்த ஒரு ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆள் அமர்ந்திருப்பதாக மிகவும் கோபமாக முறையிட்டனர். நேற்றே தாங்கள் டிக்கெட்டை பதிவு செய்து வாங்கி விட்டதாகவும், எப்படி அந்த இடத்தில் வேறு ஆள் அமர முடியும் என்றும் கடும் டென்ஷனோடு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேள்வி கேட்ட தோரணையும் காட்டி முகபாவங்களும் கடுமையானவை. தங்களது அதிருப்தியை புலப்படுத்தும் வகையில் அடிக்கடி  தலையை வேறு ஆட்டிக் கொண்டார்கள். பரிதாபத்திற்குரிய டிக்கெட் பரிசோதகரோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

மௌன சாட்சியாக நானும் என் மனைவியும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாக இது போன்ற சமயங்களில் நான்தான் மிகுந்த டென்ஷன் ஆவேன். என்னை சமாளித்து சண்டை போடாமல் அழைத்து வருவதற்குள் என் மனைவி பெரும் போராட்டமே நடத்த வேண்டியதிருக்கும். ஆனால் அன்று ஏனோ கோபமே வரவில்லை. நடப்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே தோன்றியது.

அந்த ஜோடி கொடுத்த டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அந்த டிக்கெட் பரிசோதகர், பிரகாசமான முகத்துடன் “அண்ணே நீங்க போக வேண்டியது 12ஆம் அரங்கம். 11வது அரங்கத்துல போய் உங்க சீட்டைத் தேடுனா எப்படியண்ணே கிடைக்கும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார், ஒரு கணம் ஆடிப்போன அந்த ஜோடி, அசடு வழிய மன்னிப்பு கூட கேளாமல் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு 12ஆம் அரங்கினுள் ஓடியது. அதற்குள் பலரை இடம் மாற்றி அமர வைத்த களைப்பில் வெளியே வந்தார் 10ஆம் எண் அரங்கத்தில் நுழைந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர்.

அந்த சமயத்தில் 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த மேலும் 2 ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக முறையிட்டார்கள். அவர்களையும் உள்ளே அழைத்துக் கொண்டு போனார் வெளியே வந்த பரிசோதகர். எங்களுடன் இருந்தவரோ உள்ளே போனவரைப் பார்த்தவாறு, “தமிழப்படம் போட்டாலே இப்படிதான்ணா, ஒவ்வொரு ஷோவும் ஆரம்பிச்சு முடிகிற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணும்” என்று கவலையுடன் சொன்னார். உள்ளே போன பரிசோதகர் வெளியே வந்த சமயத்தில், எங்களுக்கான டிக்கெட்டை எடுத்துவர போன சூப்பர்வைசரும் டிக்கெட்டோடு வந்தார்.

அவரிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்புகிற சமயத்தில் மீண்டும் 12 அரங்கிலிருந்து மேலும் 5 பேர் வெளியே வந்தார்கள். தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த பரிசோதகர் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்தார். சிரித்தார். தன்னுடைய நண்பர்களிடமும் காட்டினார். அவர்களும் சிரித்தார்கள். அங்கேயே ரொம்ப நேரம் நின்று பேசிக் கொண்டிருந்த நானும் அவர்கள் நட்பு வளையத்தில் இணைந்து விட்ட காரணத்தினால் எனக்கும் டிக்கெட்டைக் காட்டினார்கள். அதிர்ந்தே போனேன். அவர்கள் காட்டிய 5 டிக்கெட்களிலும் 2ஆம் தேதி, இரவு 9மணி காட்சி என போட்டிருந்தது.

(அடப்பாவிங்களா… நேற்றைய ஷோவுக்கான டிக்கெட்டை இன்னைக்கு கொண்டு வர்றீங்க?? டிக்கெட் வாங்குனா என்ன தேதி எத்தனை மணி ஷோன்னு கூடவா பார்க்க மாட்டீங்க? இல்லை முதல் நாள் ஷோவைப் பார்த்திட்டு திரும்ப அதே டிக்கெட்டை கொண்டு வருவீங்களா? எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?)

பி.கு: காருக்குள் வந்து நானும் என் மனைவியும் டிக்கெட்டை சரியாகப் பார்க்காமல் விஸ்வாமித்திரர் லெவலுக்கு கோபப்பட்ட ஜோடியையும் நேற்றைய டிக்கெட்டை வைத்துக் கொண்டு மறுநாள் படம் பார்க்க வந்த நபர்களையும் நினைத்து  சிரித்த சிரிப்பை வேறு யாரேனும் பார்த்திருந்தால் எங்களை மனநோயாளிகள் என்று நினைத்திருக்கக் கூடும்.

THE NEXT THREE DAYS (2010)

வாழ்க்கையில் எல்லாம் சரியாக நடக்கும்போது நமக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை. அதுவே சில சமயங்களில் நமது கை மீறிப் போகும்போதுதான் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வருகிறது. அடுத்த என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்படுகின்றது. எதையாவது செய்து அதிலிருந்து மீள துணிவோம்.

அதிலும் நம் அன்புக்குரியவர்களுக்கு இப்படி ஏதாவது அசம்பாவிதம் அல்லது சிக்கல் ஏற்படும்போது நம் முழு சக்தியை பயன்படுத்தி அவர்களை அதிலிருந்து மீட்க போராடுவோம். சாதுவான பல மனிதர்கள் சட்டத்தை மீறத் துணிவதுதான் இது போன்ற சமயங்களில்தான். அப்படி தவறாக குற்றச்சாட்டப்பட்டு சிறையில் வாடும் தன் மனைவியை மீட்க சட்டத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிப் பார்க்கத் துணியும் ஒரு கல்லூரி போராசியரின் கதைதான் The Next Three Days. இது 2008ஆம் ஆண்டில் வெளிவந்த “Pour Elle”  என்ற ஃபிரான்ஸ் படத்தின் தழுவலாகும்.

அமைதியாக வாழும் போராசிரியர் John Brennan (Russell Crowe) வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் புயலடிக்கிறது. அவரது மனைவி Lara Brennan (Elizabeth Banks) அவளுடைய மேலாளரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். பல்வேறு முறையீடுகள் செய்தும் சாட்சியங்கள் அனைத்தும் அவளுக்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால் தண்டனை உறுதியாகிறது. இறுதியாக மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். ஆனால் அங்கேயும் தீர்ப்பு அவளுக்கு சாதகமாக வருகின்ற சாத்தியம் குறைவாகவே இருக்கிறது.

இந்த நிலையில் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கும் மனைவியை சிறையிலிருந்து கடத்திக் கொண்டு வர முடிவு செய்கிறார் பேராசிரியர். இதற்காக எழு முறை சிறையிலிருந்து தப்பித்த ஒரு முன்னாள் கைதியிடம் ஆலோசனை கேட்கிறார். அவனிடமிருந்து பல தகவல்களை அறிந்துக் கொள்ளும் பேராசிரியர் அதற்கான முயற்சிகளில் இறங்கத் தொடங்குகிறார். அந்த முயற்சியில் சில எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தாலும் தன் இலக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மனைவியைக் காப்பாற்ற போராடுகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? அல்லது மனைவியைக் காப்பாற்றும் தீவிரத்தில் இவரும் சிறையில் அடைபட்டாரா? என்பதே மீதிப் படம்.

அன்புக்குரியவர்களை கொண்டாடும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Paul Haggis.