1951ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்தவன் வோங் சுவீ சின். உடன்பிறந்தோர் மொத்தம் 10 பேர். இவனுடைய அப்பா ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரி. செந்தூல் பசார் சீன ஆரம்ப பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்ற சுவீ சின் பின்னர் மேற்படிப்புக்காக ஆங்கில பள்ளியில் சேர்ந்தான். ஆனால் வழக்கமான வில்லன் பாணியில் இவனும் தனது 15வது வயதில் படிப்பை பாதியில் நிறுத்தினான். சுவீ சின் சிறந்த கல்விமானாக பிற்காலத்தில் வருவான் என்று நம்பிய அவன் தந்தையின் ஆசை, நிராசையானது.
கல்வியை துறந்த சுவீ சின், ஜாலான் துன் இஸ்மாயிலில் அமைந்துள்ள பசாரில் உதவியாளனாக வேலை பார்த்தான். ஒரு வருட காலத்திற்குப் பின் 360 என்ற குண்டர் கும்பல் தொடர்பு கிடைக்க, அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவர்களோடு இணைந்துக் கொண்டான். தவறான வழியில் சுலபமாக கிடைத்த பணம் அவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
என்னதான் முழு நேர குண்டர் கும்பல் உறுப்பினர் என்றாலும் திருடுவதில் அப்போது சுவீ சின் ஒரு பாலர் பள்ளி மாணவன்தான். திருடச் செல்பவர்களுக்கு உதவியாக உடன் செல்லும் பொறுப்பு மட்டுமே அப்போது அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் அவனது தாயாரும் காலமானார். தாயைப் பார்க்க வேண்டுமென்ற காரணத்திற்காக மட்டும் தனது சொந்த வீட்டிற்குப் போய் வந்துக் கொண்டிருந்த சுவீ சின், அவரது மரணத்திற்கு அதை அப்படியே நிறுத்திக் கொண்டான்.
இது அவனுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியது. தனது குண்டர் கும்பல் நண்பர்களுடனே வசிக்கத் தொடங்கினான். இதனால் அவனுக்கு இரண்டு லாபம் கிடைத்தது. ஒன்று குண்டர் கும்பலின் நடவடிக்கைகளைப் பற்றி நன்கு புரிந்துக் கொண்டான், இன்னொன்று பயம் என்ற வார்த்தையே அவனுக்கு மறந்து போனது. இதைவிடவும் ஒருமுறை தனது நண்பனின் பாக்கெட்டிலிருந்து நழுவி விழுந்த கைத்துப்பாக்கியைக் கண்ட சுவீ சின், தான் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களுடன் பழகுவதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.
எத்தனையோ கொள்ளைகளுக்கு உதவியாக போயிருக்கிறோம், தனியாக ஒன்றைச் செய்து பார்த்தால் என்ன என்று யோசித்த சுவீ சின் துப்பாக்கி வைத்திருந்த தனது இரண்டு நண்பர்களுடன் பேசி, அவர்களையும் தன்னுடைய முதல் கொள்ளைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் துணையுடன் 19 ஏப்ரல் 1969ல் தனது முதல் கொள்ளையை செய்தான் சுவீ சின். இந்த கொள்ளை வெற்றிகரமாக நடந்தேறியது. இந்த கொள்ளையின் மூலம் கிடைத்த பணத்தில் தனது முதல் கைத் துப்பாக்கியை வாங்கினான் சுவீ சின்.
தொடர்ந்து தனக்கென ஒரு குண்டர் கும்பலை உருவாக்க முடிவெடுத்த சுவீ சின், ஏறக்குறைய 7-8 நபர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டான். அதன்பின் தொடராக 8 கொள்ளை. என்னதான் 8 தொடர் கொள்ளை என்றாலும் அன்றைக்கு சுவீ சின் கொள்ளையடிப்பதில் சிறுவன்தான். ஆகவே வெகு சுலபத்தில் காவல் துறையினர் சுவீ சின்னையும் அவனது சகாக்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடங்கிய வேகத்திலேயே சுவீ சின் ஆட்டம் முடக்கப்பட்டது.
1974ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான சுவீ சின் ரொம்பவே மாறி இருந்தான். சிறை வாழ்க்கை அவனுக்கு சுத்தமாக போரடித்துப் போயிருந்தது. மற்ற மனிதர்களைப் போல சுதந்திரமாக வாழ வேண்டுமென முடிவெடுத்தான். அதற்காக முன்பு அவன் வேலை செய்த பசாரிலேயே காய்கறி வியாபாரமும் செய்யத் தொடங்கினான். நேர்மையான வழியில் ஒரு சத்ய சோதனை.
ஆனால் விதி யாரை விட்டது? சுவீ சின்னுக்கு வெகு விரைவிலேயே காய்கறி வியாபாரத்தில் கிடைத்த வருமானம் சலித்து விட்டது. தனது பழைய வாழ்க்கைக்கே திரும்ப முடிவு செய்தான். மேலோட்டமாக பார்த்தால், சிறிய யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவுதான், ஆனால் இது அவன் வாழ்க்கைப் புரட்டிப் போட்டது, மலாயா வரலாற்றில் அவனொரு கறும்புள்ளியாக காரணமாக அமைந்தது. ஆமாம், சாதாரண சுவீ சின்.. 70ஆம் ஆண்டுகளில் மலாயாவை ஆட்டிப்படைத்த கொள்ளைக்காரன் போத்தா சின்-ஆக அவதாரமெடுத்தது இந்த முடிவுக்குப் பிறகுதான்.
இப்படியொரு முடிவு செய்த போத்தா சின், தன்னைப் போலவே கொடூரமான நபர்களை தனது கும்பலில் சேர்க்கத் தொடக்கினான். எங் செங் வோங் (ஆ வோங்) பெ கோக் சின் (பங்கோர் சாய்) தே போக் லாய் (சீ ஹாய்) என்ற அந்த மூன்று பேரை தனது குண்டர் கும்பலின் முப்படை தளபதிகளாக நியமித்தான். இவர்களோடு இணைந்து தனது புதிய குண்டர் கும்பலில் இருக்கின்ற பலவீனங்களை சரி செய்ய ஆலோசனை நடத்தினான். முதலில் தான் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அதில் நடந்த தவறுகள், குண்டர் கும்பலை எப்படி வழிநடத்துவது, கண்டபடி கொள்ளையடிக்காமல் எப்படி ஒழுங்குடன் அதனைச் செய்வது, காவல் துறையின் கவனத்தை எப்படி திசை திருப்புவது என்று விலாவாரியாக அவர்களுடன் இணைந்து திட்டமிட்டான்.
என்னதான் ஆள் பலமும், மன தைரியமும் இருந்தாலும் காவல் துறையின் அதிரடி நடவடிக்கையை சமாளிக்க வேண்டுமென்றால் ஆயத பலமும் தேவை என்பதை உணர்ந்த போத்தா சின், தனது அடுத்த நடவடிக்கையாக தாய்லாந்தில் இருக்கின்ற தன் தொடர்புகள் மூலமாக 3 புதிய துப்பாக்கிகளை வாங்கினான். துப்பாக்கி வந்துவிட்டது. ஆள் பலமும் இருக்கிறது. இனி என்ன கவலை என்று நினைத்த போத்தா சின், தனது பலத்தை பரிசோதித்து பார்க்க விரும்பினான். அதற்காக ஒரு சின்ன திருட்டுக்கு திட்டம் போட்டான். தனது வீட்டிற்குப் பக்கத்திலேயே இருக்கின்ற ஒரு சூதாட்ட விடுதியை அதற்காக குறி வைத்தான்.
1975ஆம் ஆண்டு ஜுன் 2ஆம் தேதி அந்த சூதாட்ட விடுதியை கொள்ளையடித்த போத்தா சின், கண் இமைக்கும் நேரத்தில் சர்வ சாதாரணமாக அங்கிருந்து 5,800 ரிங்கிட்டை கொள்ளையிட்டு தப்பினான். இந்தப் பணத்தை தனது குண்டர் கும்பலின் ஆரவார ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தாமல் மேலும் 8 கைத்துப்பாக்கி மற்றும் 100 துப்பாக்கி தோட்டாக்கள் வாங்கி வைத்தான்.
துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக கெப்போங் வட்டாரத்தில் இருக்கின்ற ஒரு காலி இடத்தை தேர்வு செய்த போத்தா சின், தனது சகாக்களுக்கு அங்கே துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தான். தினசரி பயிற்சி போத்தா சின்னுக்கு குறி தப்பாமல் சுடும் வரத்தைத் தந்தது. இதனால் செந்தூல் பசார் பகுதிகளில் மிக வெளிப்படையாகவே துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான் அவன். இதனால் அவனைப் பற்றியோ அல்லது அவனது சகாக்கள் குறித்தோ காவல் துறைக்கு ஏதும் தகவல் கொடுத்தால் அடுத்த நொடியே கொல்லப்படலாம் என்ற அச்சம் இயல்பாகவே பொதுமக்களுக்கு வந்து விட்டது. அதோடு அவனை எதிர்க்க யாருக்கும் துணிவில்லாமல் போனது.
தொடர்ந்து ஜாலான் இம்பியில் அமைந்துள்ள ஒரு வங்கியை குறி வைத்த போத்தா சின், ஜுலை 29ஆம் தேதி அதையும் வெற்றிகரமாக கொள்ளையடித்தான். மொத்தம் 95,000 ரிங்கிட் அந்த வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் போத்தா சின் அப்போது பிரபலமாக திகழ்ந்த டட்சுன் காரை வாங்கி இருக்கிறான். தொடர்ந்து ஒரு சீனக் கோயிலை குறி வைத்த போத்தா சின், அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து 10,000 ரிங்கிட்டை கொள்ளையடித்தான்.
போத்தா சின்னின் இந்த நடவடிக்கைகளை அப்போது ஒருவர் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல.. சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் எஸ். குலசிங்கம்தான் அவர். போத்தா சின்னை பற்றிய எல்லா தவல்களையும் திரட்டி விட்டு அவளை அடக்கி ஒடுக்குவதற்கான காய்களை நகர்த்த தொடங்கினார். எஸ். குலசிங்கத்தின் இந்த திடீர் தலையீடு போத்தா சின்னுடைய பெரும்பாலான நடவடிக்கைகளை பாதித்தன. சில நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டன. கிட்டத்த எஸ். குலசிங்கத்தின் கிடுக்குப்பிடி போத்தா சின்னின் வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது. இதனால் போத்தா சின் வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியதிருந்தது.
இந்தச் சிக்கலை தீர்க்க, காவல் துறையிடமே கொள்ளையடிக்க போத்தா சின் அதிரடி முடிவெடுத்தான். அவனது பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை அதிகாரிகளை தாக்கிய போத்தா சின், அவர்களிடமிருந்த ஆயுதங்களை திருடிச் சென்றான். தொடர்ந்து இரவு விடுதி பாதுகாவலர் ஒருவரை தாக்கிய போத்தா சின், அவரிடமிருந்த துப்பாக்கி ஒன்றையும் திருடிச் சென்றான். போத்தா சின்னின் இந்த செயலைக் கண்டு காவல் துறையினர் மிகுந்த கோபம் கொண்டார்கள். காவல் துறை அதிகாரிகளையே தாங்கி ஆயுதங்கள் கொள்ளையிட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தவிர பொதுமக்களின் உயிருக்கு போத்தா சின் மிரட்டலாகி வருவதைக் கண்டு, அவனைத் தேடும் வேட்டையையும் துரிதப்படுத்தினார்கள்.
இதற்குப் பலனாக 1975ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி போத்தா சின்னை கையும் களவுமாக பிடிக்கும் அளவுக்கு காவல் துறையினர் அவனை நெருங்கினார்கள். அன்று ஜாலான் ஈப்போவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போத்தா சின் தப்பி விட்டாலும், அவனது நெருங்கிய நண்பனான சாவ் குவான் (ஆ குவான்) சூடுபட்டு இறந்து போனான். இதற்கும் பதிலடி கொடுக்க முடிவெடுத்த போத்தா சின் மிகப் பெரிய கொள்ளை ஒன்றுக்குத் திட்டமிட்டான். இந்த முறை குதிரைப் பந்தய கிளப் ஒன்றுக்கு கொண்டு செல்லவிருந்த பணத்தை கொள்ளையடிக்க தீர்மானித்தான். மொத்தமாக 218,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இதுவொரு பெரிய தொகை. இந்த பணத்தைப் பங்கு பிரித்ததில் போத்தா சின்னுக்கு 40,000 ரிங்கிட் கிடைத்தது. கிடைத்த எல்லா பணத்திற்கும் துப்பாக்கிகளாக வாங்கிக் குவித்தான் அவன்.
போத்தா சின் இப்படி ஒருசில சந்தர்ப்பங்களில் காவல் துறையை ஏமாற்றி தனது செயலைத் தொடர்ந்தாலும் காவல் துறையின் முழு கவனமும் அவன் மீது மட்டுமே இருந்தது. போத்தா சின்னுடைய நம்பிக்கைக்குரிய ஆட்களாக தேடிப் பார்த்து அழிக்க ஆரம்பித்தார்கள் காவல் துறையினர். இது அவனது கோபத்தை மென்மேலும் கிளறியது. தன்னை குறி வைத்துள்ள எஸ்.குலசிங்கத்தை கொன்று விட அதிரடியாக தீர்மானித்தான் போத்தா சின். 1975ஆம் ஆண்டு நவம்பர் 22 தேதி பெக்கலிலிங் பக்கமாக வந்துக் கொண்டிருந்த எஸ்.குலசிங்கத்தை இன்னொரு காரில் பின்தொடர்ந்த போத்தா சின், ஒரு சாலை விளக்கில் நின்ற எஸ்.குலசிங்கத்தின் காரை நோக்கி சரமாரியாக 11 முறை சுட்டான்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் எஸ்.குலசிங்கம் நிலைக்குலைந்து போனார் என்றாலும், போத்தா சின் விரும்பியபடி அவர் இறக்கவில்லை. சிறிய காயத்தோடு தப்பித்துக் கொண்டார். இந்த தாக்குதல் போத்தா சின்னை பிடிக்க வேண்டும் என்ற அவர் வேட்கையை இன்னும் அதிகப்படுத்தியது. எஸ்.குலசிங்கம் இறந்து விட்டார் என்ற ஆனந்தக் களிப்பில் இருந்த போத்தா சின், மறுநாள் பத்திரிகைகளில் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற தலைப்புச் செய்தியைக் கண்டு மிகுந்த ஆத்திரமடைந்தான்.
இந்த சமயத்தில்தான் போத்தா சின் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் இடத்தை பற்றிய தகவலொன்று காவல் துறையினருக்கு கிடைத்தது. போத்தா சின்னை பிடிக்க காவல் துறையினர் கிளம்பினார்கள். அன்று 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள். கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்து மரஆலை ஒன்றை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். உள்ளே போத்தா சின் அவன் நண்பர்கள் பங்கோர் சாய், ஆ கியோங்கோடு இருப்பதை உறுதி செய்தபின், அதிரடியாக நுழைந்தனர். இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. தன் நண்பர்கள் இருவரும் அந்தச் துப்பாக்கி சண்டையில் பலியானது கண்டு கலங்கிப் போன போத்தா சின், சரணடைய சம்மதித்தான்.
போத்தா சின் மீதான வழக்கு 4 வருடங்கள் தொடர்ந்து நடைப்பெற்றது. கொள்ளையடித்த பணத்தில் பெரும்பகுதியை அவன் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துதவி இருக்கிறான் என்றுகூட போத்தா சின்னுடைய வழக்கறிஞர் வாதாடிப் பார்த்தார். (1975ஆம் ஆண்டுகளில் செந்தூல் பசாரில் வாழ்ந்த ஏழை எளியவர் பலருக்கு போத்தா சின் கிட்டத்தட்ட ராபின் ஹ{ட் போல உதவியதாக இன்றும் சொல்லப்படுகிறது) எனினும் பொது மக்களுக்கு மிரட்டலாக திகழ்ந்தது, அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்தது என பல்வேறு குற்றப்பதிவின் கீழ் உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீhப்பை 1980ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி மறு உறுதிப்படுத்தியது. இறுதியாக 1981ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் தேதி போத்தா சின் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான்.