அண்மையில் கே.எல் பெரிய மருத்துவமனைக்கு போயிருந்தேன். ரத்த அழுத்தம் எகிறி குதித்து தாண்டி ஓடியதில்….
முடியல…!
பொதுவாக நான் மருத்துவமனைகளின் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம்தான். அன்றும் போயிருக்க மாட்டேன். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்ளத் தோன்றியது. கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு போனேன்.
மருத்துவமனையில் காலடி எடுத்து வைத்தபோது காலை மணி சரியாக 9.20 காட்டியது. இதற்கு முன்பு அங்கு போனதில்லை என்பதால் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். வழக்கம் போலவே வரிசை. எனது முறை வந்தபோது பெரிதும் சிறிதுமாக இரு அட்டைகளை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள். வழக்கம் போலவே நம்பர் கொடுத்தார்கள். அட்டைகளில் என் விபரங்களை பூர்த்தி செய்து விட்டு காத்திருந்தேன். சரியாக பதினைந்து நிமிடங்களில் எனக்கான அழைப்பு வந்தது அப்போது மணி 9.35. கௌண்டருக்குப் போனேன். அட்டையை வாங்கி சரிபார்த்தவர் உங்களுக்கு என்ன பிரச்னை என்றார். சொன்னேன். ஒரு அறை எண்ணை எழுதிக் கொடுத்து போய் காத்திருங்கள் என்றார். நேராக அங்கே போனேன். இப்போது அரசாங்க மருத்துமனை இயக்கம் முன்பு போல மெதுவாக நகர்வதில்லை. எல்லாம் துரித கதியில் நடக்கிறது.
அன்று நம்மினத்தவர் அதிகம் இல்லை. பத்துக்கும் குறைவானர்களே இருந்தார்கள். இதர இனத்தவர்களே அதிகம். நம்மின இளம் ஆண் மருத்துவர் ஒருவர் அங்கும் இங்கும் நடந்து யாரையோ தேடிக் கொண்டிருந்தார். எனக்கு எழுதிக் கொடுத்த அறை முன்பு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு என்னை உள்ளே வருமாறு அழைத்தார் ஒரு தாதி, அப்போது மணி 10.10. அறைக்குள் போனேன். நம்மின இளம் பெண் டாக்டர் ஒருவர் இன்னொரு நோயாளியிடம் பேசிக் கொண்டிருந்தார். என்னை உள்ளே அழைத்த தாதி உடம்புக்கு என்ன? என்றார். சொன்னேன். வெளியில் அமர்ந்திருக்கும் தாதியிடம் சென்று உங்கள் அளவையும் ரத்தத்தின் இனிப்பின் அளவையும் பரிசோதித்து கொண்டு வாருங்கள் என்றார். மீண்டும் வெளியில் வந்தேன்.
எனக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களது வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். பரிசோதித்த தாதி உங்களது ரத்த அழுத்த அளவு அதிகமாக இருக்கிறது என்று அந்தக் குறிப்பை எண்களில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் அறைக்குள் சென்றேன். மருத்துவர் பிஸியாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது மணி 10.20. சாவகாசமாக அவர் எழுதிய குறிப்புகளை சரிபார்த்து விட்டு, என்னிடம் திரும்பி என்ன பிரச்னை என்றார்? சொன்னேன். இந்த குறைபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்றார். என்னுடைய வேலையும் வாழ்க்கை முறையும் அதற்கு காரணமாக இருக்கலாம் என்றேன். அப்படியென்றால் உங்களைப் போன்று வேலை செய்யும் அனைவருக்குமே இந்த குறைபாடு இருக்க வேண்டுமே என்று நக்கலாக கேட்டார். எரிச்சலாக இருந்தது.
அதன் பின்னர் சம்பிரதாயமான 3 கேள்விகள். உங்களுடைய கேஸை நான் ஆரம்பத்தில் இருந்து கவனிக்க வேண்டும் என்ற முடிவு. அவ்வளவுதான். மருந்தும் இல்லை ஒன்றும் இல்லை. ஓய்வெடுக்க எம்சியும் தரப்படவில்லை. எம்சி கிடைக்குமா? என்று கேட்டதற்கு… நன்றாகத்தானே நடந்து வந்திருக்கிறீர்கள் பின்னர் எதற்கு விடுமுறை? என்ற நக்கல் வேறு. வேண்டுமானால் டைம் ஸ்லிப் கொடுக்கிறேன். அடுத்த மாதம் வந்து பாருங்கள். அதற்கு முன்பாக சில பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள் என்ற அதிகார தோரணையில் 2 கட்டளைகள். இறுக்கமான பேச்சுவார்த்தை. அவ்வளவுதான். வெளியே அனுப்பி விட்டார்.
வெளியே வந்தபோது மணி 10.35. வெளியில் அடை மழை. என்னிடம் கொடுக்கப்பட்ட டைம் சிலிப்பில் 11 மணி வரை நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அடை மழையில் நனைந்துக் கொண்டே அலுவலகம் சென்று சேர்வது சாத்தியமில்லை. உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. யோசித்தேன். பேசாமல் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் குடும்ப மருத்துவரிடம் போயிருக்கலாம். மீண்டும் மழையில் நனைந்து கொண்டே அவரிடம் போனேன்.
அடடா… நனைந்து விட்டீர்களா? என்ன செய்கிறது உங்களுக்கு என்றார். சொன்னேன். ரத்த அழுத்த அளவை பரிசோதித்தார். ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. முன்பே உங்களுக்கு மருந்து தந்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னும் உங்களுக்கு இளம் வயதுதான். அதுவாக குறைந்து விடும் வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் மருந்து தரவில்லை. இந்த மருந்தை எடுக்க தொடங்கி விட்டால் வாழ்நாள் முழுக்க எடுக்க வேண்டியதிருக்கும். இன்று மருந்து தருகிறேன். இனி தொடர்ந்து சாப்பிட வேண்டும். இன்றைக்கு எம்சி தருகிறேன். நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓய்வு ரொம்ப முக்கியம். எல்லாம் சரியாகி விடும். கவலைப்படாதீர்கள். ஒரு வாரம் கழித்து வந்து என்னைப் பாருங்கள் என்றார்.
மருத்துவமனையில் நடந்ததைச் சொன்னேன். சிரித்தார். புதிதாக பணிபுரிய தொடங்கியுள்ள மருத்துவர் போலிருக்கிறது. அதனால்தான் மருந்து தர பயப்படுகிறார். பொதுவாக உங்களுடைய ரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுப்பதே போதுமானது. சிறுநீரக பரிசோதனை எல்லாம் இப்போதைக்கு தேவையில்லை. ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த கூடிய அளவில்தான் இருக்கிறது. மருந்து சாப்பிட்டும் கட்டுப்படவில்லை என்றால்தான் அடுத்தடுத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். சரியாக பத்து நிமிடம் கழித்து மீண்டும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். முன்பைவிட குறைந்திருந்தது. ரிலாக்ஸ் ஆக இருந்தாலே ரத்த அழுத்தம் குறைந்து விடும். இப்போது உங்கள் மன இறுக்கம் குறைந்துள்ளது அதனால் ரத்த அழுத்தமும் குறைந்துள்ளது என்றார்.
இரண்டு மருத்துவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா?
என்னைப் பரிசோதித்த அரசாங்க மருத்துவரைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தை முழுமையாக புரிந்துக் கொண்டு அதற்கேற்ற சிகிச்சையைத் தருவதே சரியான முறை என்று அவர் நினைக்கிறார். நியாயம்தான்.
ஆனால், ஒரு மருத்துவர் நோயாளிகளிடம் எப்படி பேச வேண்டும்? மக்களுடன் தோழமையுடன் பழகுங்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அரசாங்க பொது மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்களுக்கும் அது பொருந்தும்தானே? நோயுற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்வது என்று தெரிய வேண்டாமா? நோயாளிகளோடு ஒரேடியாக சிரித்துப் பேச சொல்லவில்லை. நோயாளியைக் கண்டவுடன் புன்னகையாவது செய்யலாம் அல்லவா? தன்னிடம் வருகின்ற நோயாளியிடம் அனுசரணையாக பேசினாலே அவர்களது துன்பத்தில் பாதி குறைந்து விடும். அதை விட்டுவிட்டு நோயுற்றவர்களிடம் நக்கலடிப்பதும் அவர்களது உடல் நிலைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவதும் கொஞ்சம் ஓவர்தான். (உடல் நிலை சரியில்லை என்பதால் அன்று கோபத்திற்கு விடுமுறை… அதனால் டாக்டர் தப்பித்தார்.)
அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் இது போன்ற நடவடிக்கைகளால் பெருவாரியான மக்கள் அதிருப்தியுறுகிறார்கள் என்பதே உண்மை.