Category Archives: பொது

இந்து அறவாரியத் தலைவர் பதவிக்கு சீனரா?

மலேசிய இந்து அறவாரியத் தலைவராக ஓர் சீனரை நியமினம் செய்து, மலேசிய இந்துக்களின் மனதில் ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது தேசிய முன்னணி அரசு. மஇகாவை தனது கூட்டணியில் வைத்திருக்கும் நிலையில், தடாலடியாக ஒரு சீனரை இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் மலேசிய இந்துக்களின் கேள்வியாகும்.

தேர்தல் காலங்களில் மஇகா மட்டுமே மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே இந்தியர் கட்சி என்று பிரசாரம் செய்த தேசிய முன்னணி, திடீரென கெராக்கான் கட்சித் தலைவர் மா சியு கியோங்கை இந்து அறவாரியத் தலைவராக நியமித்திருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வேடிக்கையானதும் கூட.

இந்து அறவாரியம் என்பது இந்து சமயம் சார்ந்த அமைப்பு. இதன் தலைவராக ஓர் இந்துவே நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக வேற்று மதத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமனம் செய்துள்ள தேசிய முன்னணி அரசாங்கம் மலேசிய இந்துக்களுக்கு என்ன புரிய வைக்க முயற்சிக்கிறது என்பதுதான் விளங்கவில்லை. அதாவது இந்து அறவாரியத் தலைவராக செயல்பட மஇகாவில் திறமை வாய்ந்த இந்து தலைவர்களே இல்லை என்று தேசிய முன்னணி அரசு கருதுகிறதா?

நிறைய பேர் இதை ஒரு 1 மலேசியா கொள்கையின் வெளிப்பாடு என்று சொல்லி புளங்காகிதம் அடைகிறார்கள். நல்லது. அப்படியென்றால் ஓர் இந்துவை இஸ்லாமியத் துறை அறவாரியத் தலைவராக நியமனம் செய்து விட்டு இதைச் செய்திருக்க வேண்டும். அதுதானே 1 மலேசியா கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் செயலாக இருக்க முடியும்?

இது குறித்து கண்டனம் தெரிவித்த பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியை கெராக்கான் இளைஞர் பகுதி தலைவர் டான் ‘மலேசியர் என்ற உணர்வு இல்லாதவர்” என்று வசைபாடியுள்ளார். மேலும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவாங் எங் சீனராக இருப்பதால், அவர் பினாங்கு மாநில சீன சமூகத்துக்கு மட்டும் பாடுபடுகிறார் என்று பொருள் கொள்ளலாமா? என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதை சிறுபிள்ளைதனமாக பேச்சு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மாநில முதல்வருக்கும் – ஒரு சமய அறவாரியத் தலைவருக்கும் உள்ள வேறுபாடு புரியாதவரெல்லாம் ஒரு கட்சியின் இளைஞர் பகுதி தலைவராக ஆக முடியும் என்பதற்கு டான் ஒரு நல்ல உதாரணம்.

மாநில முதல்வர் என்பவர் ஒரு மாநிலத்துக்கே பொறுப்பானவர். இந்து அறவாரியத் துறை என்பது இந்துக்களின் சமய நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இரண்டும் நிறைய வேறுபாடு உண்டு டான் அவர்களே… ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பும் புரிந்துக் கொண்டு பேசுங்கள். எப்படி இப்படி ஒரு வேகாத முட்டைகளை எல்லாம் தலைவராக வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியம், ஆனால் உண்மை!

சீனரான டான் தன் இனத்தவரின் நியமனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார் என்றால் நமது விளையாட்டுத் துறை துணை அமைச்சரும் – மஇகா உதவித் தலைவருமான டத்தோ சரவணன், இந்து அறவாரியத் துறை முன்பு ஒரு மலாய் அமைச்சரின் கீழ் செயல்பட்டபோது இது குறித்து கேள்வி எழுப்பாதவர்கள், இப்போது இந்நியமனம் குறித்து கேள்வி எழுப்புவதன் அவசியம் என்ன? என்று கேட்டிருக்கிறார்.
டத்தோ சரவணன் அவர்களே, நீங்கள் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். மேடையில் நல்ல தமிழ் பேசுகிறீர்கள். சமயத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்ற அக்கறையும் உங்களிடம் இருக்கிறது. எதிர்கால இந்திய சமுதாயம் தமிழ் படித்த சமூகமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையும் உங்களிடம் காணப்படுகிறது.

அப்படியிருக்கும் போது ஏற்கனவே இந்து அறவாரியத் தலைவராக ஒரு மலாய் அமைச்சர் செயல்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருந்தும், இப்போது அதைத் தூக்கி சீனர் ஒருவருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தபோது நீங்கள் ஏன் அந்நியமனம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? குறைந்தபட்சம் உங்கள் மஇகா உறுப்பினர் யாராவது ஒருவருக்கு அதை பெற்றுத் தர நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை?

எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. கவனித்துக் கொள்கிறோம் என்றுதானே மேடை தோறும் சொல்கிறீர்கள்?

“உங்களுக்கொரு பிரச்னையா – மஇகா இருக்கிறது. உங்கள் குரலாக மஇகா இருக்கிறது. உங்களுக்காக மஇகா போராடுகிறது. உங்கள் தலைவர்கள் நாங்கள் இருக்கிறோம். மக்களோ எங்களை நம்புங்கள். நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம்” இப்படித்தானே காலங்காலமாக எங்களிடம் சொல்லி வாக்கு வேட்டையாடுகிறீர்கள்? அதை நம்பித்தானே ஓட்டு போடுகிறோம்?

அம்னோதான் ஏதோ அரசியல் லாபங்களுக்காக கெராக்கான் கட்சிக்கு இந்தப் பதவியை கொடுத்து அழகு பார்க்கிறது என்றால் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நீங்களும் சொல்கிறீர்களே.. இது சரியா?

எங்கள் எல்லாருக்கும் முன்பாக நீங்களல்லவா இவ்விவகாரத்தில் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்? மஇகாவில் தலைவர்கள் இல்லையா டத்தோஸ்ரீ? என்றல்லவா நீங்கள் பிரதமரை வினவியிருக்க வேண்டும்? குறைந்தபட்சம் இவரை பரிசீலியுங்கள் என்றாவது ஆலோசனை சொல்லியிருக்கலாமே?

இதுவே ஒரு சீன அறவாரியத்துக்கு ஒரு தமிழன் தலைவராக முடியுமென்றால் ஆக்கிக் காட்டுங்கள். நமது பிரதமரின் 1 மலேசியா கொள்கை இந்த பூமியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ சமாளிக்க வேண்டும் என்பதற்காக காரணம் சொல்லாதீர்கள் டத்தோ சரவணன்.

நான் ஒன்றும் மதவாதியில்லை. ஆனால் இந்த நியமனம் தப்பாக இருக்கிறது. இதையெல்லாம்விட மலேசிய இந்து அறவாரியத்துக்கு தலைமையேற்க ஓர் இந்து தலைவருக்கு கூடவா அருகதையில்லை?

வெட்கக்கேடு!

நண்பேன்டா!

சில மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களை நீங்கள் புரிந்துக் கொள்வது கடினம். எல்லாரும் ஓர் இலக்கை துரத்தி ஓடிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் சாதிக்கிறோமென பல இலக்குகளைத் துரத்திக் கொண்டிருப்பார்கள். அதில் எந்த இலக்கை நோக்கி போகிறோமென அவர்களுக்கே முழுமையாக தெரியாது என்பதுதான் இதிலுள்ள ப்யூட்டி. அப்படியொரு நபரை அண்மையில் சந்தித்தேன். நேரக்கூடாத விபத்துதான். சில சமயங்களில் “விதி வலியது”.

நீங்கள் எல்லாரும் எம்எல்எம் என்றழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெடிங் துறையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மனித தொடர்புகளை சங்கிலிக் கோர்வையாக இணைப்பதன் வழி செயல்படும் துறை இது. உங்களது தொடர்புச் சங்கிலி எவ்வளவு நீளமோ அந்தளவுக்கு பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம். ஆனாலும் உங்களது கீழ்நிலைத் தொடர்பாளர்கள் அவர்கள் பங்குக்கு அந்த தொடர்ச்சியை பெருக்கிக் கொண்டே போக வேண்டும். அவர்கள் செயல்படாமல் நின்று விட்டால் ஓர் அளவுக்கு மேல் உங்களுக்கு அங்கே வளர்ச்சி இருக்காது. பொதுவாக பேசியே ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்கிற துறை என்பதால், இந்த துறையில் பெரிய வளர்ச்சியை எட்டுவதற்கு பேச்சுத் திறன் ரொம்ப அவசியம். இப்படிதான் என்றில்லாமல் உங்களை நோக்கி வீசப்படுகின்ற சரமாரியான கேள்வி கணைகளை கூலாக டீல் செய்தாக வேண்டும்.

மலேசியாவில் மாதம் ஒருமுறை ஏதாவதொரு புதிய நிறுவனம் இப்படியொரு பொருளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் உறுப்பினராக பதிந்து, தன்னை அங்கே நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய ஒருவர்தான் நான் சந்தித்த அந்த மனிதர். இதுதான் என்றில்லை.. புதிதாக நீங்கள் ஒரு பொருளைக் காட்டி, இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அந்த நிறுவன முகவராக பதிந்து, நிறுவனத்தின் பொருள், தரம் மற்றும் அந்த நிறுவன மார்க்கெட்டிங் ப்ளான் வரை கரைத்துக் குடித்துவிடும் அளவுக்கு மும்முரமாக வேலையில் இறங்கிவிடும் ஆள் இவர்.

பலமுறை இவரைக் கண்டு ஓடியிருக்கிறேன். மனிதர் பிடியில் மாட்டினால், சிக்கி சீரழிவதை தவிர வேறு வழியே இல்லை என்பதை அனுபவத்தில் ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். 5 மணி நேரத்திற்கும் குறைவாக அவர் பேசி நான் கேட்டதே இல்லை. ஒரு புள்ளியி;ல் ஆரம்பித்து உலகையே வலம் வந்துவிடும் அபாயகரமான மனிதர். அந்தப் பீதியிலேயே அவர் இருக்கின்ற திசை பக்கமாகக் கூட நான் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும் சமீபத்தில் விதி என்னை அவரோடு கோர்த்து விட்டு கைக்கொட்டி சிரித்தது.

நம் நாட்டில் இருக்கின்ற ஒரு வசதி அங்காங்கே இருக்கின்ற மாமாக் ஸ்டால். அதிலும் குறிப்பாக இரவு நேர மாமாக் ஸ்டால் விசேஷமானவை. நண்பர்களோடு அரட்டையடிக்க, காதலியோடு பேச, வர்த்தக திட்டங்களை விவரிக்க, இன்றைய அரசியல் குறித்து அலசவென பல வாசல்களை திறந்து வைத்துக் காத்திருக்கும் ஒரு ஸ்பாட் அது. மலேசிய குடிமகனில் ஒருவனான நான் மட்டும் இதில் விதிவிலக்க என்ன? எனக்கு பிடித்த மாமாக் ஸ்டால் ஒன்றுக்கு போனேன். நெஸ்காபி சி ஒன்றுக்கு ஆர்டர் செய்து விட்டு வந்தமர்ந்த என்னை கரமொன்று தொட்டுத் தழுவியது. பார்த்தால் மேலே நான் புகழ்ந்து பேசிய நண்பர் புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தார்.

“நண்பேன்டா….”

என் இதயம் துடிக்கின்ற ஓசை எனக்கே கேட்ட தருணமது. எந்த பொருளை கொடுத்து என்னை டெஸ்ட் செய்து பாருங்கள், டேஸ்ட் பண்ணி பாருங்கள் என கொடுமைப்படுத்த போகிறாரோ என உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், அவரையும் அமரச் சொன்னேன். அதற்குப் பின் நடந்ததெல்லாம் நாளைய வரலாற்றில் பொன்னெழுத்தில் செதுக்கப்படவிருக்கின்ற பிஸ்னெஸ் டாக்.

நண்பர் இப்போது புதிதாக 3 புதிய எம்எல்எம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார். ஒரு பொருளைப் பற்றியே 5 மணி நேரம் பேசுவாரே… இப்போ 3னு சொல்றாரேனு அப்போதே மண்டைக்குள் கவுளி கத்தியது. “தப்பிச்சு ஓடிரு.. தப்பிச்சு ஓடிரு”னு என் மனம் உள்ளுக்குள் ஓலமிட்டு ஆடிய கதகளியை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைத்தேன். நண்பர் உற்சாகமானார். “என்னய்யா குடிக்கிறீங்க? நெஸ்காபி சி யா? ஏன் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த ஆரம்பிச்சாச்சா?” என்று கேட்டபடி தன்னுடைய பேக்கில் கையை விட்டு துழாவினார்.

ஆஹா.. ஏழரைச் சனியின் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பரிகாரம் செய்து கொள்வோம் என நினைத்து, “நண்பரே, ஏதாவது புதிய பொருளை எனக்கு காட்டப்போகிறீர்களா? உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நீங்கள் சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன்” என்றெல்லாம் சொல்லிப் (கெஞ்சி)  பார்த்தேன். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் நண்பர் இல்லை. கர்மவீரன் போல் கடமையில் கண்ணாக இருந்தார். அதற்குப் பலனாக அவர் தேடியது கிடைத்தும் விட்டது.

நமது கட்டைவிரல் சைஸில் ஒரு சிறிய குப்பி. அதிலிருந்து ஒரு சொட்டை நாம் அருந்தும் பானத்திலோ உணவிலோ விட்டுக் கொண்டால் சீனியின் பயன்பாடு இல்லாமலேயே இனிப்பின் சுவையை அனுபவிக்க முடியும் என அவர் வரிசையாக அந்த பொருளின் பயன், மூலப் பொருட்கள்,  தயாரிப்பு நாடு, ஏற்றுமதி-இறக்குமதியாகும் நாடுகள், மலேசியாவில் அறிமுகமான நாள்,தேதி,கிழமை என புள்ளி விபரங்களை அடுக்க எனக்கு கிலிபிடிக்க ஆரம்பித்து விட்டது. ஏறக்குறைய 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பொருளைப் பற்றி விலா நோக விவரித்த மனிதர், இன்று அந்த பழையப் பொருளின் ஞாபகமே ஏற்படாத வகையில் தனது புதிய விற்பனை பொருளைப் பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

நீங்களும் அதன் சுவையை அனுபவியுங்கள் என வலுக்கட்டாயமாக ஒரு வெந்நீரை வரவழைத்து அதைக் கொஞ்சம் குடிக்கச் சொன்னார். பின்னர் தனது குப்பியிலிருந்து ஒரு சொட்டை அந்த நீரில் விட்டபின்பு மீண்டும் குடித்துப் பார்க்கச் சொன்னார். வெந்நீர் இனித்தது உண்மை. ஆனாலும் அதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளும் ஆவலோ ஆசையோ எனக்கில்லை. நண்பரிடம் தண்ணீர் இனிக்கிறது என்று மட்டும் சொல்லி வைத்தேன். உடனே அந்த பொருளின் நன்மைகளையும் அது செயல்படும் முறையும் விளக்கத் தொடங்கி விட்டார் நண்பர்.

நான் நெஸ்காபி சி குடிக்க ஆரம்பித்துதான் இதற்கெல்லாம் காரணமா? ஒழுங்கின்மை சித்தாந்தம்  (chaos theory) இப்படியெல்லாமா வேலைச் செய்யும்? ஒருவேளை, இன்று  நண்பரிடம் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, அது நாளைக்கு எனக்கு வண்ணத்துப்பூச்சி விளைவாக (butterfly effect) பாதகத்தை ஏற்படுத்தி விடுமா? என்றெல்லாம் எனக்கே பயம் வருகிற அளவுக்கு என் மூளை அறிவியல் கோட்பாடுகளைப் பற்றியெல்லாம் அலசத் தொடங்கி விட்டது.

அவர் பேசத் தொடங்கிய ஒரு விஷயத்துக்கே நான் ஏதேதோ யோசித்து குழம்பிக் கொண்டிருக்க, என் கவனம் அவரை விட்டு 100 கி.மீ வேகத்தில் விலகி ஓடுவதை உணர்ந்த நண்பர் என்னை இம்பிரஸ் செய்வதாக நினைத்து பேஸ்புக் போலவே அச்சு அசலாக அறிமுகமாகி இருக்கு இன்னொரு சோஷியல் வெப்சைட் பற்றி பேசத் தொடங்கினார். “இந்த சோஷியல் வெப்சைட்டில் உறுப்பினராக நீங்கள் பணம் செலுத்த வேண்டும், தொடர்ந்து நான்கு – நான்கு பேராக 16 பேரை உங்களுக்குக் கீழே சேர்த்து விட்டீர்கள் என்றால்….” என அவர் சொல்லிய வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறெதுவுமே காதில் விழவில்லை.

ஆனாலும் திடீரென “நண்பா, உங்க தொடர்புல இருக்கிற 20 பேரை நமக்கு கீழே பார்க் பண்ணிங்கன்னு வைங்க.. நான் உங்களுக்கு ஒரு லைன், உங்க வைஃப்க்கு ஒரு லைன்னு 2 லைன் தனியா போட்டுத் தரேன். காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அப்புறம் என்னய்யா…  பேஸ்புக் ஒனருக்கே ஜுஸ் வாங்கி கொடுக்கலாம்யா..” என அவர் சொன்னது மட்டும் காதில் விழுந்து தொலைத்த காரணமாக, யுஎஃப்போ எல்லாம் என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது, தனியாக சொல்ல வேண்டிய கிளைக் கதை.

(இம்சைகள் தொடரும்….)

நிழல் உலகின் ராஜா – Lucky Luciano (1897-1962)

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவர்களை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் மிரட்டியதாக செய்திகள் வந்தன. அவர்களோடு இணைய மறுத்த மாணவர்களை சிலர் தாக்கியதாகக் கூட செய்திகள் வெளிவந்தன. உண்மையில் குண்டர் கும்பல் தங்களது உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணத்தைக் கொண்டே இயங்கி வருகின்றன. பல எண்களை தங்களது அடையாளமாக கொண்டு செயல்படும் இதுபோன்ற குண்டர் கும்பல் அந்த எண்களுக்கு தொடர்புடைய தொகையை தங்களது சந்தாவாக வசூலித்துக் கொள்கின்றன. இது தவிர பாதுகாப்பு தருவதாகக் கூறி கடை, உணவகம் உள்ளிட்ட சில வர்த்தக மையங்களிலும் அவர்கள் பணம் வசூலித்துக் கொள்கிறார்கள்.

சட்டத்தை மதிக்கின்ற சிலர், இவர்களது பேரத்திற்கு பணியாத பட்சத்தில் அவர்களது வர்த்தகம் பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் யார் மீதும் போலீஸ் புகார் கொடுக்க முடியாமல் பல வர்த்தகர்கள் இவர்களது பேரத்திற்கு பணிந்து கப்பம் கட்டுகிறார்கள். இப்படி கிடைக்கின்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. நிழல் உலகில் பல ஆயிரங்களை இப்படி சம்பாதிக்கின்ற குண்டர் கும்பலின் தலைவர்கள் பணத்திற்கு அடிமையாகிற சில அரசியல்வாதிகளையும் உயரதிகாரிகளையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.

இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால் யாரும் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நமக்கு தொல்லைக்கு தராத வரை பிரச்னையில்லை என்றே எல்லாரும் கருதுகிறார்கள். குண்டர் கும்பலின் உருட்டல் மிரட்டலுக்கு பயந்து பலர் மௌனியாக இருந்து விடுகிறார்கள். இது போன்ற கும்பலின் தலைவராக திகழ்பவர் தங்களது உடல் பலத்தை அட்டைப்போல் உறிஞ்சு சொகுசு வாழ்க்கை நடத்துகிறார் என அதன் உறுப்பினர்கள் உணருவதே இல்லை. நம்மோடு 10-15 அடியாட்கள் இருந்தால் போதும் என்ற திருப்தி குண்டர் கும்பல் உறுப்பினர்களிடம் விரவிக் கிடக்கிறது.

குண்டர் கும்பல் உறுப்பினர்கள் யாராவது ஏதாவது பிரச்னையில் சிக்கி சிறை செல்ல நேர்ந்தால் அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவும் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கொடுக்கவும் மிரட்டி வசூலிக்கப்படுகின்ற பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால் நாமொரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறோம் என குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இந்த தைரியத்தில்தான் பல பேர் அமர்ந்திருக்கின்ற உணவகத்தில் நுழைந்து சக மனிதனை வெட்டிக் கொல்லும் தைரியத்தை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கொண்டிருக்கிறார்கள்.

எதற்கும் ஆரம்பம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா? இப்படியொரு ஒழுங்கு செய்யப்பட்ட குண்டர் கும்பல் கட்டமைப்பு விதிகளை உருவாக்கிய மனிதன் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு கும்பலை உருவாக்கி அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து அதை சட்டத்தின் பிடியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த கும்பலை உருவாக்குவதன் வழி தனியொரு வட்டி நிறுவனத்தை நடத்துவது போல நடத்தி பணம் சம்பாதிக்க முடியும் எனவும் அன்றே யோசித்து செயல்படுத்திய மாஸ்டர் மைண்ட் மனிதனின் பெயர் Lucky Luciano.

அமெரிக்க வரலாற்றில் ஒழுங்கு செய்யப்பட்ட நவீன குற்ற விதிகளின் தந்தை என இவனை அழைக்கிறார்கள். டைம் இதழ் கூட இவனை இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த டான் (கொடுங்குற்றம் புரியும் கூட்டத்தின் தலைவன்) என குறிப்பிட்டுள்ளது.

1897ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இத்தாலி, Sicily மாநிலத்தில் Antonio – Rosalia Lucania தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்த Charlie  ‘Lucky’ Luciano தனது குடும்பத்தோடு பத்து வயதில் அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள நியூயார்க் நகரின் Lower East Side நகருக்கு குடிபெயர்ந்தான். நிழல் உலகின் இருப்பிடமான திகழ்ந்த அந்த நகர், Lucky Luciano வையும் அதே பாதைக்கு இழுத்துச் சென்றதில் வியப்பொன்றும் இல்லை.

அந்த ஏரியாவில் பிரபலமாக திகழ்ந்த Jo Masseria என்ற குண்டர் கும்பல் தலைவனின் கீழ் Lucky Luciano செயல்படத் தொடங்கினான். Masseria யூத இளைஞர்களின் செல்வ வளத்தை பெருக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டியது Lucky Luciano விற்கு பிடிக்கவில்லை. யூத இளைஞர்களோடு இத்தாலிய இளைஞர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் நல்ல வருமானத்தையும் ஆள் பலத்தையும் மிக விரைவில் சம்பாதிக்க முடியுமென அவன் நம்பினான். தனது தலைவனைப் போல பாரம்பரிய குண்டர் கும்பல் விதிகளையும் நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் புதிய வழியில் ஒரு குண்டர் கும்பலை உருவாக்கி வழிநடத்த விரும்பினான்.

மிக ரகசியமாக யூத இளைஞர்களை கொண்ட குண்டர் கும்பலை உருவாக்கிய Lucky Luciano, மற்ற குண்டர் கும்பல்களை போல் வழிப்பறி, பிக்பாக்கெட், திருட்டு போன்ற சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தனது குழுவின் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் வாரத்திற்கு ஆளுக்கு பத்து சென் வீதம் வசூலித்தான். அதோடு வணிகர்களையும் பணக்காரர்களையும் மிரட்டி பாதுகாப்பு பணம் வசூலிப்பதையும் போதைப் பொருளைக் கடத்தி பணம் சம்பாதிப்பதையும் தனது கும்பலின் நடவடிக்கையாக வரையறுத்துக் கொண்டான். அப்படி திரட்டிய பணத்தில் சிறிய அளவிலான தொகை வட்டிக்கு கொடுத்து அதன் மூலமும் லாபம் பார்க்கத் தொடங்கினான்.

1919ஆம் ஆண்டு அமெரிக்காவில் மதுபான தடை அமலில் இருந்த சமயம், மதுபானத்திற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை புரிந்துக் கொண்ட Lucky Luciano அதனை கள்ளத்தனமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினான். இது அவனது கும்பலுக்கு மேலும் பண பலத்தை சேர்த்தது. Meyer Lansky என்ற இன்னொரு யூத குண்டர் கும்பல் தலைவனுடன் ஏற்பட்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. (இந்த மதுபானத் தடை 1933ஆம் ஆண்டு மீட்டுக் கொள்ளப்பட்டது)

தனது வர்த்தக எல்லையை மேலும் விரிவுபடுத்தி அதிக லாபம் பார்க்க நினைத்த Lucky Luciano இத்தாலிய குண்டர் கும்பல்களை தன்னோடு இணைத்துக் கொண்டான். இந்த ஒருங்கிணைப்பின் மூலம் அரசியல் மற்றும் சட்ட பாதுகாப்பிற்காக செலவிட்ட தொகையை அவர்களால் பெருமளவு மிச்சப்படுத்த முடிந்தது. 1921ஆம் ஆண்டு மேலும் சில முக்கிய குண்டர் கும்பல் தலைவர்களின் நட்பு Lucky Luciano விற்கு கிடைத்தது. இதனால் 1925ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 12 மில்லியன் வருமானம் பெரும் நிலைக்கு அவன் உயர்ந்தான். விஸ்கி, ரம் போன்ற மதுபான விற்பனை மற்றும் பணத்தை வட்டிக்கு விடுவதை தவிர்த்து சூதாட்டத்திலும் ஈடுபடத் தொடங்கினான் Lucky Luciano.

இதற்கிடையில் Luciano வின் தலைவர் Masseria வுக்கு அவன் திரை மறைவில் செய்து வரும் காரியங்கள் தெரிய வந்தது. இதனால் இருவருக்கும் பிரச்னை வலுக்க ஆரம்பித்தது. அது குறித்து பேசி சமரசம் செய்துக் கொள்வதற்காக 1931ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உணவகம் ஒன்றில் Masseria வும் Luciano வும் சந்தித்தனர். புறப்படும் சமயம் கழிவறை செல்வதாகக் கூறி Luciano அங்கிருந்து எழுந்து சென்ற வேளையில், திடீரென அந்த உணவகத்தில் நுழைந்த நால்வர் Masseriaவை  சுட்டுக் கொன்றனர். (சில காலத்திற்கு பின்னர் Luciano வின் உத்தரவின் பேரிலேயே அவரது கையாட்கள் அந்த கொலையைச் செய்ததாக கூறப்பட்டது)

Masseria வின் மறைவுக்குப் பின்னர் அவனது கீழ் செயல்பட்ட குண்டர் கும்பல் அனைத்து Luciano வின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆரம்ப காலந்தொட்டு Masseria வின் பகைவனாக கருதப்பட்ட Salvatore Maranzano, தனது எதிரியின் மறைவையொட்டி Luciano வோடு இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தான். இதன் வழி அனைத்து குண்டர் கும்பலையும் ஒருங்கிணைந்த பெருமை Luciano விற்கு கிட்டியது.

யாரும் எதையும் செய்துக் கொள்ளலாம். யாருடைய விவகாரத்திலும் யாரும் தலையிட மாட்டார்கள் என அவர்களுக்குள்ளாக பேசி வைத்துக் கொண்டனர். ‘Omerta’ என்றழைக்கப்படும் குண்டர் கும்பலின் சத்திய பிரமாணப்படி அனைவரும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.

Luciano விற்கு இந்த ‘Omerta’ எல்லாம் பழங்கதையாக தோன்றினாலும் Lansky யின் வற்புறுத்தலால் அதனை ஏற்றுக் கொண்டான். ‘Omerta’ என்ற சத்தியப் பிரமாணம் செய்யும் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அடைய நேர்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அப்படி காட்டிக் கொடுப்பது மிகப் பெரிய துரோகமாக கருதப்பட்டு காட்டிக் கொடுதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. குண்டர் கும்பலில் பல இளைஞர்கள் விரும்பமுடன் இணைய இது போன்ற கட்டுப்பாடுகள் பெரிதும் துணை நின்றன.

மெல்ல மெல்ல அமெரிக்காவின் நிழல் உலகை தன் கைப்பிடிக்கு கொண்டு வந்த Luciano அனைத்து குண்டர் கும்பல் தலைவர்களுக்கும் தலைவனாக மதிக்கப்பட்டான். Luciano வின் இந்த அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த Thomas E. Dewy என்ற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். முதலில் விபசார விடுதி ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட Thomas, அங்கிருந்து கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு Luciano வை மடக்கினார்.

1936ஆம் வருடம் விபசார வழக்கின் கீழ் Luciano விற்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Clinton Correctional Facility  சிறையில் அடைக்கப்பட்ட Luciano சிறையிலிருந்தபடியே தனது இயக்கங்களை வழிநடத்தினான். பின்னர் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி சிறைக்குள்ளாகவே ஒரு தேவாலயத்தை எழுப்பினான்.

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில், அமெரிக்க அரசாங்கம் Luciano வோடு ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துக் கொண்டது. அதன்படி இத்தாலி நாட்டிலிருந்த Luciano வின் நண்பர்கள் இத்தாலி நாட்டின் ராணுவ ரகசியங்களை அமெரிக்க ராணுவத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்படி தகவல்களை பெற்றுத் தரும் பட்சத்தில் Luciano விற்கு விடுதலை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

சொன்னபடியே, 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Luciano தன் சொந்த ஊரான Sicily க்கு திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் Luciano இத்தாலிக்கு திரும்பாமல் கியூபா நாட்டிற்கு சென்று விட்டான். அங்கிருந்தபடியே அமெரிக்காவில் செயல்பட்ட தனது குண்டர் கும்பல்களை வழிநடத்தினான். இது அமெரிக்க அரசுக்கு தெரிய வந்த பிறகு அவனை இத்தாலி நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கியூபா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்தது. ஒருவேளை கியூபா அரசு அதனைச் செயல்படுத்தத் தவறினால் கியூபாவிற்கு வழங்கப்படுகின்ற மருந்து ஏற்றுமதிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்தது.

இதனால் Luciano மீண்டும் இத்தாலிக்கு திரும்ப முடிவெடுத்தான். அதற்கு முன்பாக அமெரிக்க வரலாற்றில் அதுவரை செய்யப்படாத போதைப் பொருள் கடத்தலை செய்வதற்குரிய திட்டத்தை இதர அமெரிக்க குண்டர் கும்பல் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே அங்கிருந்து புறப்பட்டான். அதன்படி Sicily லிருந்து ஏற்றுமதி செய்யப்படும் போதைப் பொருளை அமெரிக்க குண்டர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்புவார்கள். இதன் மூலம் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கின்ற வாய்ப்பு உருவாகியது.

இத்தாலிக்கு திரும்பிய Luciano விற்கு அவனைவிட 20 வயது குறைந்த Igea Lissoni என்ற நடனக்காரி மீது காதல் ஏற்பட்டது. நாடு கடத்தப்பட்ட Luciano விற்கு திருமணம் செய்துக் கொள்ள தடை இருந்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழத் தொடங்கினர். அதே சமயத்தில் Luciano வைக் கொல்ல கூலிப்படையினர் சுற்றிக் கொண்டிருக்கும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால் அடிக்கடி அவர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர்.

11 வருடத்திற்கு பிறகு 1958ஆம் ஆண்டில் Igea மார்பகப் புற்றுநோயால் காலமானார். Igea வின் மறைவு Luciano வை மிகவும் பாதித்தது. இதனால் அமெரிக்க குண்டர் கும்பல்களின் மீதிருந்த அவனது பிடி நழுவத் தொடங்கியது. நீண்ட நாட்களாக அமெரிக்காவை விட்டு விலகியிருந்த காரணத்தால் வேறு பல புதிய தலைவர்கள் Luciano விட்டுச் சென்ற காலி இடத்தை நிரப்ப போட்டியிட்டனர். இதுவும் ஒருவகையில் Luciano வை பாதித்தது.

கடைசியாக Igea இறுதியாக பார்க்க விரும்பிய ஒரு திரைப்பட தயாரிப்பாளரை அவள் இறந்து பின்னர், விமான நிலையத்தில் காணச் சென்ற Luciano அங்கேயே மாரடைப்பால் இறந்து போனான். அவனது இறுதி வேண்டுகோளுக்கு இணங்க அவனது உடல் அமெரிக்காவின் Queens St.Johns இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இதுபோல இன்னும் எத்தனை?

சம்பவம் 1 : மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டிற்கு புதுச் சாயம் பூச விரும்பினார். பொதுவாக இதுபோன்ற வேலைகளுக்கு சீன குத்தகையாளர்களே கிடைப்பார்கள். மணியோ ஒரு இந்திய குத்தகையாளர் கிடைத்தால் அவருக்கு தொழில் கொடுத்த மாதிரி இருக்குமே என்ற நல்லெண்ணம். இணையத்தில் காணப்படுகின்ற மலேசிய இந்தியர் குழுக்களின் வலைப்பின்னல் ஒன்றில் அப்படியொரு சேவையை வழங்குகின்ற நிறுவனத்தை தெரிந்துக் கொண்டார். அவர்களை தொடர்பு கொண்டும் பேசினார். வேலை, அதற்குரிய கூலி எல்லாம் பேசி முடித்தாயிற்று. அவர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து வேலையை தொடங்கி விட்டார்கள். வேலை முடிந்த கையோடு மணியும் பணத்தை பேசியபடி முழுதாக கொடுத்து விட்டார். பிரச்னை தொடங்கியது அதன் பின்புதான், மணியின் கூற்றுப்படி அவர்கள் செய்த வேலை திருப்தியளிக்கவில்லை. பல இடங்களில் பூசப்பட்ட வர்ண்ணம் திட்டுத் திட்டாக இருந்தது. வேலையிலும் ஒரு சுத்தமின்மை காணப்படவில்லை. வீட்டையே அலங்கோலப்படுத்தி வைத்திருந்தார்கள். மணி அந்த குத்தகையாளரை அழைத்து விபரம் சொன்னார். மறுதரப்பில் இருந்த பதில் அவர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. தொழில் கொடுக்கிறேன் என்று சொன்னபோது விழுந்து விழுந்து உபசரித்தவர்கள் இப்போது இப்படி பேசுகிறார்களே என உள்ளுக்குள் குமைந்து போய் விட்டார்.

சம்பவம் 2 : சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  வீட்டில் தண்ணீர்க்குழாய் பிரச்னை. அவரும் இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த நபருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். வேலை செய்ய அழைக்கப்பட்ட நபரோ அதை மாற்ற வேண்டும்.. இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி பல நூறு ரிங்கிட்களை பொருட்கள் வாங்குவதற்கு என வாங்கிக் கொண்டார். அதோடு போனவர்தான். திரும்பி வரவேயில்லை. பலமுறை சந்திரன் அவரது தொலைபேசிக்கு அழைத்தாலும் எடுப்பதில்லை. வேலை செய்ய வந்தவர் செய்த குளறுபடியால் தன் நண்பரோடு சண்டை போடும்படி ஆகிவிட்ட வருத்தத்தில் இருக்கிறார் அவர்.

சம்பவம் 3 : கதிரேசனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  தனது வீட்டின் முன்பு காலியாக இருந்த இடத்தில் அழகான தோட்டத்தை அமைக்க ஆசை. அதற்காக இந்திய குத்தகையாளரை தேடினார். அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தனது உறவினர் அந்தத் தொழிலை செய்து வருவதாகக் கூறி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் வீட்டை வந்து பார்த்து வீட்டின் முன்புறத்தில் எந்த வகையான செடிகளை வைத்தால் அழகாக இருக்கும், அதன் விலை, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை தந்து விட்டுப் போனார். கதிரேசனுக்கு அவரது ஆலோசனை பிடித்து விட, அவரையே வேலையைச் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். பல ஆயிரங்களை செலவழித்து தோட்டத்தை உருவாக்கிய கதிரேசன் இப்போது கடும் விரக்தியில் இருக்கிறார். காரணம் வீட்டில் நடந்த வைபவத்திற்காக வந்திருந்த சீன நண்பர்களிடம் தோட்டத்தை உருவாக்க ஆன செலவு பற்றி கதிரேசன் சொல்லியபோது.. இது போன்ற தோட்டத்தை அமைக்க அவ்வளவு செலவழிக்க தேவையில்லை என்றும் இப்போது அவர் செலவழித்த தொகையில் பாதியளவே அந்த வேலையைச் செய்ய செலவாகியிருக்கும் என்றும் சொல்லி விட்டு போனார்கள். இப்போது கதிரேசன் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுகிறார்.

மேலே குறிப்பிட்ட 3 பேர் மட்டுமல்ல.. இதைப் படிக்கும் பலருக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கலாம். பொதுவாக சொந்தத் தொழில் செய்யும் நம் இந்தியர்களில் பலர், இதர இந்தியர்கள் தங்களுக்கு வாய்ப்புத் தருவதில்லை என குறைப்பட்டுக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் வெகு சிலரே தங்களது தொழிலை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறார்கள். பலபேர் ஏதோ அரையும் குறையுமாக தொழிலைக் கற்றுக் கொண்டு அதை நேர்த்தியுடன் செய்ய முடியாமல் இப்படி ஏதாவது கோளாறு செய்து வைக்கிறார்கள். தாங்கள் செய்வது தவறு என்று அவர்கள் உணர்வதே இல்லை. மாறாக புகார் சொல்லும் தங்களது வாடிக்கையாளர் சரியில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.

சொந்த தொழில் செய்வது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதிலொரு நேர்மையும் ஒழுங்கும் இருந்தால்தான் நம்மைப் பற்றி மற்றவர்களிடமும் தங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வார்கள் என அவர்கள் ஒருபோதும் கருதுவதே இல்லை. தங்களது நடவடிக்கை மற்றவர்களை பாதிக்கும் என்ற அக்கறையும் அவர்களிடம் கிடையாது. வேலை கிடைத்தால் போதும், எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றே பலர் இப்போது நினைக்கிறார்கள்.

இதெல்லாம் சரியா? இன்னொரு இந்தியருக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கும் நல்ல மனம் கொண்டவர்களை அலைக்கழிப்பதன் வழி இவர்கள் சாதிக்கப் போவது என்ன? ஒன்றுமில்லை. அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். தவிர இன்னொரு இந்திய குத்தகையாளரை அழைக்கவே அவர்கள் விரும்புவதில்லை. ஒருவரது செயல்களால் மற்றவர்கள் பிழைப்பில் மண் விழ வேண்டுமா? இவ்வாறு பொறுப்புணர்ச்சி இன்றி செயல்படும் இந்திய குத்தகையாளர்களை என்ன செய்வது? எங்கே முறையிடுவது?

உதிர்ந்த ஆப்பிள் – ஸ்டீவ் ஜாப்ஸ்

1980ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலகப் பந்தில் இருந்த அத்தனை இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ஆம் தேதி காலமாகி விட்டார். இவரது தொழில் போட்டியாளராக கருதப்பட்ட பில்கேட்ஸ் கூட “ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல தலைமுறைக்கு நினைவுக்கூறப்படும்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்து விட்டார் ஸ்டீவ்?

 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமணமாகாத கல்லூரி காதலர்களுக்கு மகனாக பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சூழ்நிலை காரணமாக பவுல் ஜாப்ஸ்-பவுலா ஜாப்ஸ் தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். பொதுவாக அறிவாளிகளுக்கும் பள்ளிப் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் கூட படிப்பில் தேறாதவர் என முத்திரை குத்தப்பட்டவர்தான். இருந்தாலும் ஏதோ தாக்குப் பிடித்து கல்லூரி வரை வந்தார். ஆனால் ஸ்டீவ் வோஸ் என்பவருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்க்கையை வேறொரு தளத்திற்கு, இனிவரும் காலங்களில் சரித்திரமாகப் போகிற உயரத்திற்கு கொண்டு சென்றது.

21 வயதில் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நண்பனுடன் சேர்ந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கினார். கணிணி மெல்ல – மெல்ல உலகத்திற்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த தருணத்தில் ஆப்பிள் 1 என்ற கணிணியை அவர்கள் தயாரித்து முடித்திருந்தனர். சில குறைகளோடு இருந்த ஆப்பிள் 1க்கு பதிலாக ஆப்பிள் 2 என்ற கலர் கணிணியை தொடர்ந்து உருவாக்கி அசத்தினார் ஸ்டீவ் வோஸ். இது போதாதா? ஒரு பொருளை எப்படி மக்கள் அலறியடித்துக் கொண்டு வாக்கும்படி செய்வது என்ற சூத்திரத்தை அப்போது உலகிற்கு கற்றுத் தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் 2, மில்லியன் யூனிட் விற்பனையானது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனை. பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் அறிமுகமான சில மணி நேரத்திற்குள்ளாக இமாயல உயரத்தைத் தொட்டது இரண்டாவது சாதனை. இவையிரண்டும் 24 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சை மில்லியனர் ஆக்கின.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் இப்போது உலகமே வியக்கும் நிறுவனம். ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள். போதாதா? உடனே பெர்சனல் கம்ப்யூட்டரான மேக் என்ற மேக்கின்டாஷ்சை உருவாக்கத் தொடங்கி விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என ஃப்ரேம்-ஃப்ரேமாக செதுக்கி அதனை உருவாக்கினார். இதற்காக தனியொரு குழு இரவுப் பகலாக ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டளைக்கு ஏற்ப ஆப்பிளில் வேலை பார்த்தது.

(ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இந்த கணிணி சாப்ட்வேர், அப்ளிகேஷன், இத்யாதி இத்யாதி பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. இவருக்கு தெரிந்ததெல்லாம் யாரை எங்கே எப்போது எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதும் எந்தப் பொருளை எப்படி, எவ்வாறு, எப்போது உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்சை மிஞ்ச வேறு ஆள் கிடையாது)

இருந்தாலும் மேக்கின்டாஷ் மக்கள் வாங்குகிற விலையில் இல்லை என்பது ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு உறைக்காமல் போனது அவரது கெட்ட நேரம். மேக் இனி உலகை ஆளும் என ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் ஆப்பிள் 2 விற்பனையே அப்போது ஆப்பிள் நிறுவன உயிர்ப்புக்கு காரணமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை பொருத்தவரை தான் செய்வதே சரியென நினைக்கக்கூடிய ஆசாமி என்பதால் ஆப்பிள் ஊழியர்கள் அனைவரும் பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் நிறுவன இயக்குநர் வாரியத்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் மேக் தயாரிக்கிறேன் பேர்வழி என செய்த அட்டகாசங்களை பொறுக்க முடியவில்லை.

இதற்கிடையில் ஆப்பிள் கம்பெனியில் அவரது இயக்குநர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக சில சம்பவங்கள் நடந்தது. மனம் வெறுத்து போய், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு பங்கை (ஷேர்) மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு தனக்கு சொந்தமாக இருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் “நெக்ஸ்ட்’ என்றொரு நிறுவனத்தை தொடங்கினார்.

புதிதாக பிறந்த நெக்ஸ்ட் நிறுவனம் கல்லூரிகளில் பயன்படுத்தும் விலை மலிவான கணிணிகளை தயாரிக்கப் போகிறது என செய்தி காட்டுத்தீ போல பரவியது. வாயப்பைத் தவறவிட விரும்பாத ஐபிஎம் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது. வழக்கம் போலவே தனது ஸ்பெஷலான குணங்களால் ஐபிஎம் நிறுவனத்தை தலை தெறிக்க ஓட வைத்தார் ஸ்டீவ் ஜாப். அப்படி ஓடிய ஐபிஎம் நேராக பில் கேட்ஸ்சிடம் போய் நின்றதும் அதன் விளைவாக மைக்ரோசாப்ட் பிறந்ததும் தனி வரலாறு.

ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நெக்ஸ்ட் நிறுவனமோ அடுத்த ஸ்டெப்புக்கு போக முடியாமல் அப்படியே நின்றது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை நம்பி பணத்தைக் கொட்ட ஆட்கள் தயாராக இருந்தாலும் விற்பதற்கு ஏதாவது சரக்கிருக்க வேண்டுமல்லவா? வெறுமனே கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அடுத்து?

இந்தக் கேள்வி ஸ்டீவ் ஜாப்ஸ் மூளையை போட்டுக் குடைய, அனிமேஷன் பக்கம் தன் பார்வையை திருப்பினார் அவர். ஆப்பிளில் இருந்த காலத்திலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு ‘பிக்ஸார்” என்ற நிறுவனத்தின் மீது ஒரு கண் இருந்தது. அதை வாங்கச் சொல்லியும் அவர் ஆப்பிள் இயக்குநர் வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் ஆப்பிளில் இருந்த காலத்தில் அந்த கனவு நனவாகவில்லை. இப்போது வாய்ப்பு அவரைத் தேடி தானாக வந்தது. “பிக்ஸார்” ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு சொந்தமானது.

நெக்ஸ்ட் போல பிக்ஸாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு தொடக்கத்தில் பெரிய லாபத்தை வாரி இறைத்துவிடவில்லை. அகலக் கால் வைத்து விட்டோமோ என்றுதான் அவரும் யோசித்தார். ஆனால் பிக்ஸாரின் பலமாக இருந்தது அதன் வசமிருந்த இரண்டு அனிமேஷன் கிராபிக்ஸ் சாப்ட்வேர்ஸ். இவை இரண்டும் டிஸ்னியை பிக்ஸார் பக்கமாக இழுத்து வந்தன. ஆமாம் அனிமேஷன் துறையில் நாளை பிக்ஸார் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என டிஸ்னி போட்ட கணக்கு பொய்க்கவில்லை. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய “டாய் ஸ்டோரி” திரைப்படத் துறையில் தனக்கென ஒரு வரலாறை பதிவு செய்தது.

இந்தச் சூட்டோடு சூடாக பிக்ஸாரை பங்குச் சந்தையில் இறக்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அது அவரை மீண்டும் பில்லியனர் ஆக்கியது. தொடர்ந்து ஆப்பிள் பக்கம் தன் பார்வையை திருப்பினார். என்ன இருந்தாலும் அவர் பார்த்து வளர்த்த நிறுவனமல்லவா? ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நல்ல நேரம் ஆப்பிள் அப்போது மைக்ரோசாப்ட் – ஐபிஎம் என்ற இரு ஜாம்பாவான்களுக்கு இடையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆப்பிளை தூக்கி நிறுத்த ஏதாவது செய்தே ஆக வேண்டும் என அதன் இயக்குநர் வாரியம் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபோது தனது நெக்ஸ்ட் சாப்ட்வேரை வாங்கிக் கொள்கிறீர்களா என்று வலை வீசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அப்படியே நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஆப்பிள் முன்வந்தது. நல்ல விலைக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு அதை விற்றவர் கையில் 1.5 மில்லியன் ஆப்பிள் பங்குகள் இருந்தன. ஒரு காலத்தில் கனத்த மனதுடன் தன்னிடமிருந்த ஆப்பிள் பங்குகள் அனைத்தையும் விற்று விட்டு ஒரே ஒரு பங்கை மட்டும் வைத்திருந்த அதே ஸ்டீவ் ஜாப்ஸ்… மீண்டும் ஆப்பிளின் முக்கிய பங்குதாரர் ஆனார். எங்களோடு இணைந்துக் கொள்கிறீர்களா ஆப்பிள் இயக்குநர் வாரியம் கேட்டபோது வருடம் 1 டாலர் சம்பளத்திற்கு இயக்குநர் வாரியத்தில் நீடிக்கிறேன். தலைவர் பொறுப்பு தேவையில்லை என்று பதில் சொன்னார்.

தொடர்ந்து ஆப்பிளை தூக்கி நிறுத்த வேண்டும். யோசித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். பதிலுக்கு பில்கேட்ஸ் 150 கோடியை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்த சில வருடங்களுக்கு ஆப்பிள் தள்ளாடாமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. தொடர்ந்து தான் முன்பு செய்த மேக்-கை புது வடிவம் கொடுத்து ஐ-மேக் என்ற பெயரில் வெளியிட்டார். அது மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

 ஆப்பிள் மீண்டும் இன்னொரு ஆட்டத்திற்கு தயாரானது. 99ஆம் ஆண்டு ஐ-புக் என்ற லேப்டாப். ஆப்பிள் லாபத்தில் செயல்படத் தொடங்கியது. 2001ஆம் இசைத்துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் முதல் முயற்சியாக ஐ-டியூன்ஸ் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அதே ஆண்டு ஐ-பாட் என்ற கையடக்க வாக்மேனை அறிமுகப்படுத்தினார். அது மக்களின் ஏக போக வரவேற்பை பெற்றது. எங்கு பார்த்தாலும் ஐ-போட் மயம். கிட்டத்தட்ட நூறு மில்லியன் ஐ-போட்களை விற்று ஆப்பிள் சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் அவர் ஆப்பிளின் தலைமை செயலாக்க அதிகாரி ஆகிவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். கணிணி, இணையம், இசைத்துறையில் ஆப்பிளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியாகி விட்டது. அடுத்து????? உலகமே ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவிப்பிற்காக காத்துக் கிடந்தது. ஐ-போட் அறிமுகமாகி சரியாக ஆறு வருடங்கள் கழித்து (2007) மீண்டும் மக்கள் முன் தோன்றினார் ஸ்டீவ் ஜாப்ஸ். தொலைத் தொடர்பு துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் அதிசயம் நிகழ்ந்தது. ஆம், அன்றுதான் ஐ-போனை அறிமுகப்படுத்தினார் அவர். ஐ-போன் விற்பனையைப் பற்றி தனியாகத் சொல்லத் தேவையில்லை. சூப்பர் ஹிட்.

இன்னும் ஏதோ குறைகிறதே என யோசித்திருப்பார் போலிருக்கிறது 2010ஆம் ஆண்டு ஐ-பேட் என்ற கையடக்க கணிணியை ஆப்பிள் வெளியிட்டது. தொடர்ந்து ஐ-பேட்டின் மீது வைக்கப்பட்ட குறைகளை களைந்து ஜ-பேட்2 என்ற மாடலை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் தலைவராக அவர் கடைசியாக அறிமுகப்படுத்திய சாதனம் அதுதான்.

2004ஆம் ஆண்டிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு தான் கணைய புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளோம் என்பது தெரியும். இருந்தாலும் அது தனது தனிப்பட்ட விவகாரம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பலமுறை பத்திரிகைகள் இது பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி முடிந்தவரை அவரது உடல்நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தட்டிக் கழித்தார். இருந்தாலும் இந்த விஷயத்தை அவரால் 2009ஆம் ஆண்டு வரைதான் மூடி மறைக்க முடிந்தது.

2009 ஆம் ஆண்டு கணைய மாற்று அறுவவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது ஆப்பிள் ஊழியர்களிடம் “நான் எதிர்பார்த்ததை விட என் உடல் மோசமாக இருக்கிறது” என தன்னுடைய உடல் நிலை குறித்து சூசகமாக அறிவித்து விட்டே மருத்துவ விடுப்பில் சென்றார் அவர்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலனில் கவனம் செலுத்தப் போவதாக கூறி காலவரம்பற்ற மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். மெலிந்து, சோர்வுற்ற நிலையில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை அதற்கு முன்பாக ஆப்பிள் ஊழியர்கள் கண்டதில்லை. அபாயகரமான என்னமோ நடக்கப் போகிறது என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.

பங்குச் சந்தையிலோ ஆப்பிளின் பங்கு விலைகள் வீழ்ச்சியுற தொடங்கின. தொடர்ந்து அவர் பங்குதாரதாக இருந்த டிஸ்னி போன்ற நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டன. உலகம் ஒரு சோகமாக நாளுக்கு தன்னை தயார் செய்துக் கொள்ளத் தொடங்கியது.

இதோ.. நேற்று முன்தினம் தொடங்கி பத்திரிகை, இணையம், தொலைக்காட்சி என எங்கு திரும்பினாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் செய்திதான். முயற்சி செய், சரியான நேரத்தில் சரியான முடிவை எடு, மக்களின் தேவையைப் புரிந்துக் கொள், மாத்தி யோசி என அவர் நமக்கு விட்டுச் சென்ற அனுபவ பாடங்கள் ஏராளம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சாதாரண மனிதர்தான். அவர் ஒன்றும் தேவகுமாரன் இல்லை. அவர் பிறக்கும்போது வானில் வால் நட்சத்திரம் எதுவும் தோன்றியதாக யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் பல கோடி இளைஞர்களின்  கனவு நாயகன் அன்றும் இனி எப்போதும்….!

மே13 கலவரம்

மலேசிய வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக திகழ்கிற மே13 கலவரம், 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவின் எதிரொலி என்றால் அது மிகையில்லை.

 அன்று 1969ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி, காலையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதிர்ச்சி தரும் வகையில் கூட்டணிக் கட்சி (அம்னோ-மசீச-மஇகா) 2/3 பெரும்பான்மையை தக்க வைப்பதில் தோல்வி கண்டிருந்தது. 1964ஆம் ஆண்டு 86 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற கூட்டணிக் கட்சி 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. எதிர்கட்சிகளான டிஏபி-பாஸ் மற்றும் பிபிபி அந்தத் தேர்தலில் மொத்தமாக 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றிருந்தன.

அந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்த எதிர்க்கட்சிகள், அதற்கொரு வெற்றி விழாவை நடத்த நாள் குறித்தன. அது 1969ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி. போலீஸ் பெர்மிட்டுடன் நடந்த இந்த வெற்றி ஊர்வலம், இன பிரச்னையை தூண்டிவிட நடத்தப்பட்ட ஒன்றல்ல என்றாலும் இதில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத பலரின் தன்மூப்பான நடவடிக்கையால், மலாய் இன மக்களின் வெறுப்பு சீனர்களின் பக்கம் திரும்பியது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், மலாய்காரர்களின் சிறப்புரிமை மற்றும் பூமிபுத்ரா அல்லாத இனங்களின் குடியுரிமை சார்ந்து கேள்வி எழுப்பியிருந்தது இதற்கு வசதியாக அமைந்து விட்டது.

மீண்டும் மே 12 ஆம் தேதி இன்னொரு வெற்றி ஊர்வலத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதனை கோலாலம்பூரில்  நடத்தவும் முடிவு செய்தன. மலாய் இனத்தவர் அதிகம் வசிக்கின்ற கம்போங் பாரு வழியாக இந்த ஊர்வலம் வந்தபோது, பொறுப்பற்ற சில நபர்களால் எழுப்பப்பட்ட தேவையில்லாத இனநெடி மிகுந்த கோஷம் மற்றும் ஊர்வலத்தில் காட்டப்பட்ட பதாதைகளால் கோபமுற்ற மலாய் இன மக்கள் துடைப்பத்தை வீதிக்கு கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் வெற்றி ஊர்வலத்தில் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள், மலாய் இன மக்கள் மீது காறி உமிழ்ந்தும், துடைப்பத்தை தங்களது வாகனத்தில் கட்டிவைத்தும் (பல இடங்களில் கூட்டணிக் கட்சி
தொகுதிகளை எதிர்கட்சிகள் தங்கள் வசமாக்கி கொண்டதன் அடையாளமாக) கொண்டாடினர்.

பெரும்பான்மையான சீன உறுப்பினர்களைக் கொண்டிருந்த எதிர்கட்சிகள், இந்த ஊர்வலம் நடந்து முடிந்த மறுநாள் (மே 13) தங்களது ஆதரவாளர்களின் செயலுக்காக மன்னிப்பு கோரின. ஆனாலும், இந்த மன்னிப்பு கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களின் காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே, அதே நாளன்று முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு வெற்றி ஊர்வலத்தை கூட்டணிக் கட்சிகளின் சார்பாக அம்னோ நடத்த வேண்டுமெனக் கோரி அதன் ஆதரவாளர்கள் அப்போதைய சிலாங்கூர் முதல்வர் டத்தோ ஹரூண் இட்ரிஸ் வீட்டிற்கு முன்பாக கூடினர். டத்தோ ஹரூண் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கும் பொருட்டு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதோடு அம்னோ ஏற்பாட்டில் வெற்றி ஊர்வலம் அன்றைய இரவு 7.30 மணியளவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையில், ஸ்தாபாக்கில் மலாய் இன ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலும் மலாய் இன கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவை பன்றி இறைச்சியை மாட்டி வைக்க பயன்படுத்தும் கொக்கியைக் கொண்டு கருவறுத்த தகவலும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை கொந்தளிக்க வைத்தது. இது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்துக் கொண்டிருக்க யாருக்கும் பொறுமையில்லை. இனக் கலவரம் தொடங்கி விட்டது.

சரியாக மாலை 4 மணியளவில் கம்போங் பாரு வழியாக சென்ற இரு சீன ஆடவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. சிகரட் கொண்டுவரப்பட்ட வேன் கொளுத்தப்பட்டது. அதன் ஓட்டுனநர் கொல்லப்பட்டார். சீன குண்டர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் செயலில் இறங்கினர். கோலாம்பூர் சுற்று வட்டாரத்தில் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.. பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்த கலவரத்திற்கு ஏற்றவாறு ஆயுதங்களையும் அவர்கள் முன்கூட்டியே தயார் செய்தும் வைத்திருந்தனர்.

இருதரப்பின் தாக்குதலும் எல்லை மீறிப் போக.. நிலமையைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலாங்கூர் வட்டாரங்களில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. முதலில் ஃஎப்.ஆர்.யூ கட்டுப்பாட்டில் இருந்த கம்போங் பாரு பின்னர் ரெஜிமென் ரேஞ்சர் பிரிவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சீனரின் தலைமையில் செயல்பட்ட இந்தப் பிரிவு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதாக கூறி மலாய் இளைஞர்களை சுடத் தொடங்கியது. கம்போங் பாரு மலாய் இளைஞர்கள், தாங்கள் சீனர்களுக்கு மத்தியிலும் ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு மத்தியிலும் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதாக குமுறினர். இந்தக் குமுறல் பின்னர் மாபெரும் கோபக் கனலாக மாறியது. இதன் எதிரொலியாக ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு பதிலாக மலாய்காரர்கள் நிரம்பிய ராணுவப் படை அங்கே பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அப்படி வந்த சில ராணுவ வீரர்கள் சீனர்களுக்குச் சொந்தமான நகைக்கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். தவிர தங்கள் மீது கண்ணாடி பாட்டிலை வீசியதாக கூறி சீனர்களை சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இளைஞர்கள் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் அமைந்துள்ள ஓடியன் திரையரங்கை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதில் படம் பார்த்துக் கொண்டிருந்த சீனர்களை மட்டும் வெளியேற்றும் விதமாக திரையில் சீன மொழியில் அறிவிப்பு போடப்பட்டது. அதில் இருந்த இதர இனத்தவருக்கு சீன மொழியை படிக்கத் தெரியாதென்பது கலகக்காரர்களுக்கு வசதியாக போய்விட்டது. கொலை வெறியுடன் ஓடியன் திரையங்கில் நுழைந்த சீன இளைஞர்கள், அங்கிருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.

சிலாங்கூர் – கோலாலம்பூர் மட்டுமே இந்த இனக்கலவரம் நடந்தது. பேராக், கெடா, பினாங்கு, ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மலாக்காவில் சிறு கலவரம் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. பின்னர் துங்குவின் ஆலோசனையின் பேரில் மே 16ஆம் தேதி பேரரசர் சுல்தான் இஸ்மாயில் நசாரூதீன் ஷா அவர்கள் தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன் தலைவராக துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக் பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்கள் நாட்டின் அனைத்து சட்ட திட்ட கட்டுப்பாடுகளும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மெல்ல-மெல்ல இனக்கலவர பாதிப்பிலிருந்தும் மலேசியா மீளத் தொடங்கியது.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, துங்கு அப்துல் ரஹ்மான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து துன் அப்துல் ரசாக் நாட்டின் இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீண்டும் நாடாளுமன்றம் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியது. தீமையிலும் ஒரு நன்மை என்பது போல நமது நாட்டின் தேசிய கோட்பாடு (ருக்குன் நெகாரா) இந்த இனக் கலவரத்திற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

(மே 13 கலவரம் பற்றிய பல்வேறு கட்டுரை, செய்திக் குறிப்பு என பலவற்றை வாசித்த பின்தான் இந்தப் பதிவை எழுதினேன். பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. அதில் சில கட்டுரை மற்றும் செய்தி குறிப்புகளில் காணப்பட்ட முக்கிய தகவல்களை மட்டுமே இங்கே தொகுத்து தந்துள்ளேன்)

நாய் வளர்க்கும் கலை.

இது எனக்கு நன்கு தெரிந்தவனின் கதை. அதனால் தைரியமாக வலையேற்றலாம். அவனைத் தவிர வேறு யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. அந்த “அவன்” யாரென்று பின்னால் தெரியவரும்.

சிறிய நகரங்களில் நாய் வளர்ப்பது போல, கோலாலம்பூர் குடியிருப்பு பகுதிகளில் அவ்வளவு சுலபமாக நாய் வளர்த்துவிட முடியாது. 1008 ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் உண்டு. இங்கே பெரும்பாலும் பலரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு பை-பை சொல்லியவர்கள் என்பதால் நாய் வளர்ப்பதெல்லாம் நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வருகிறது. சீனர்களைத் தவிர பெரும்பான்மையான இந்தியர் வீடுகளில் இப்பொதெல்லாம் நாய்களைக் காண முடிவதில்லை.

மேலும் இங்கு யாருக்கும் நேரமே இருப்பதில்லை. நேரமின்மை என்ற நோய் பீடித்த மனிதர்களே இங்கு அதிகம். என்ன செய்வது புற்றுநோயை விட மிக பயங்கரமான வியாதியாக இப்போது நேரமின்மை கருதப்படுகிறது. “எந்த 5 நிமிஷத்தைக் கேட்குறீங்க? கொடுத்தா வைச்சிருக்கீங்க?” என டிஹெச்ஆர் ராகாவில் பொதுநல அறிவிப்பு போடுகிற அளவுக்கு ஆளாளுக்கு நேரத்தைப் பாராபட்சமின்றி கடனாகக் கேட்கின்றனர். இவனும் இப்படியொரு சிக்கலில் சிக்கிக் கொண்டவன்தான். வீட்டில் ஓய்வெடுக்கவே நேரமில்லை. இதில் நாய் வளர்க்க கிளம்பினால் என்ன ஆகும்?

திடீரென ஒரு காலை பொழுதில் அவனுடைய வெளிநாட்டு நண்பன், தன்னுடைய நாய் ஈன்றிருக்கும் குட்டியில் ஒன்றைத் தருவதாக சொன்னபோது, தனக்கு கிடைத்த புது வாய்ப்பை எண்ணி அவன் மனம் துள்ளிக் குதித்தது. (“கண்ணா லட்டு திங்க ஆசையா???”) போதாக்குறைக்கு அது அல்சேஷன் மற்றும் லெபரேட்டர் கலப்பில் உருவான குட்டி. (“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆ..சை..யா????”) விலை எப்படியும் 3000 ரிங்கிட்டுக்கும் மேல்.

இருந்தாலும் மனைவியாகிய, வீட்டின் நிரந்தர நிதி மற்றும் தலைமை செயலாக்க அதிகாரியிடம்  ஒப்புதல் வாங்காமல் எதையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்விட முடியாது.

“நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கலாம்னு இருக்கேன்.”

“எதுக்கு? சும்மா இருக்க முடியலியா?”

மனைவியிடம் நாயின் குலம் கோத்திரம் பற்றி எல்லாம் சொல்லி, கெஞ்சி –  கொஞ்சி சம்மதம் கேட்டபோது, ஏதோ பண்ணுங்க என்று அவளும் சொல்லி விட்டாள். ஒரு சுபயோக சுபதினத்தில் நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு வந்தாகி விட்டது.

முதல் வேலையாக நாய்க்கு வேண்டிய சங்கிலி, தட்டு, பிஸ்கட், டின் உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் என்று வாங்கியதில் செலவு 200 வெள்ளியைத் தாண்டியது. அடுத்ததாக கூண்டு வாங்க வேண்டும். இதுவோ சின்ன ரக நாயில்லை. இப்போது சின்னதாக வாங்கும் கூண்டு இன்னும் 10-12 மாதத்தில் உபயோகப்படாது. தவிர எந்தக் கூண்டுமே மேலே கூரை கொண்டதாக இல்லை. அப்படி கூரை கொண்ட கூண்டுகள் வைக்க வீட்டில் இடம் போதாது. விலையும் 2000 ரிங்கிட் என பயமுறுத்தியது.

முதல் பிரச்னை தோன்றியது அப்போதுதான்..

இந்த வீடு கட்டுற டெவலப்பர் இருக்கானுங்களே.. கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டானுங்களா? ஒரு வீட்டைக் கட்டுனா அதோட முன் தாழ்வாரத்தை குறைந்தபட்சம் கேட் வரைக்கும் வைக்கிறது இல்லை? இப்போ நான் நாயை எங்கே கொண்டு போய் கட்டுறது????? மழை தூறினால் நாய் நனையுமே? அவன் உச்சி மண்டையில் யாரோ அம்மியை வைச்சு நச்சு நச்சென்று அரைத்தார்கள்.

பெரிய ஏ3 பேப்பர் ஒன்றை எடுத்து, என்னமோ இன்னொரு கேஎல்சிசி கட்டுகிற தோரணையில்  அங்கும் இங்கும் 4 கோடுகளைப் போட்டு, கூரை, கதவு, ஜன்னல் என்று தனித் தனியாக வரைந்து, அதற்கு என்ன வர்ணம் கொடுக்கலாம், நிப்போன் பெயிண்ட் அடிக்கலாமா? இல்லை ஜசிஜ பெயிண்ட் பெட்டரா? வெளியே விளக்கு வைத்து மின்சார இணைப்பு கொடுக்கலாமா? இல்லை அப்படியே விட்டு விடலாமா? நாயின் ஹாலில் சின்னதாக கார்ப்பெட் போட்டு படுக்க வைக்கலாமா? இல்லை வெறும் இரும்புக் கம்பியை தரையாகப் போட்டு, கீழே ஒரு ட்ரே மாதிரி வைத்தால் நாயின் இயற்கை கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமா? என்றெல்லாம் துல்லியமாக திட்டமிட்டு, ஒருவேளை வேறு வீடு மாற வேண்டியதிருந்தால் சிமெண்ட் வைத்து கட்டப்பட்ட நாய் வீட்டை தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் நாய் வீட்டின் சுவரை பலகையிலேயே செய்து விடலாம் என்று அவன் முடிவு செய்து நிமிர்ந்த போதே அவனுக்குத் தெரிந்து விட்டது. “நாம் போகாத ஊருக்கு வழி தேடுறோம்!”.

இனி என்ன செய்வது என்று திக்கித் தடுமாறி நின்றபோது, அவன் மனைவி தேவதை மாதிரி ஒரு அருள் பாலித்தாள். “வீட்டுக்குள்ளேயே கட்டி வைங்க”. உடனே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான் அவன். வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து நாயை கட்டி வைக்க முடியாது. அதனால் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு காலியான இடத்தை தேர்ந்தெடுத்து நாயை அங்கே கட்டினான். இந்த நாய்க்குட்டிக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சிறுநீரை மிகச் சரியாக அது படுப்பதற்காக விரித்து வைத்த துணியில் அடித்து வைத்தது.

எத்தனை முறை துணியை மாற்ற முடியும்? உடனே துணிக்கு மாற்றாக பேப்பரை விரித்துப் பார்த்தான். உயர்ரக நாயல்லவா? மிகச் சரியாக பேப்பர் மீது சுச்சா போனது. ஒருவகையில் அவனுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகப் பட்டது. கண்ட இடத்தில் வீட்டை அசுத்தப்படுத்தி வைக்காமல், ஒழுங்காக ஒரே இடத்தில் போகிறதே என.. ஆனால் அந்த மகிழ்ச்சி 30 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. சீறுநீரை சரியாக பேப்பரில் அடிக்கக் கற்றுக் கொண்ட அந்த நாய்க்குட்டி, மலம் கழிப்பதை மட்டும் பேப்பரை விட்டு தனியாக வீட்டுத் தரையில் செய்து வைத்தது. அவனுக்கு இரண்டாவது முறை தலையில் அம்மிக்கல் இடி விழுந்தது.

சரி எல்லாமே நாம் பழகிக் கொடுப்பதில்தானே இருக்கிறது என்று அவனும் மறுநாள் முதலாக நாயை வீட்டில் இருக்கின்ற டாய்லெட்டை பயன்படுத்த சொல்லிக் கொடுக்க தொடங்கினான். அவன் கெட்ட நேரமா இல்லை நாயின் பிடிவாதமா என்று தெரியவில்லை.. நாயக்கு டாய்லெட்டை பயன்படுத்துவதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அதற்காக தினமும் வீட்டின் முன்புறமுள்ள திடலைச் சுற்றி 45 நிமிடங்கள் நாயோடு அவன் வாக்கிங் போக வேண்டியதிருந்தது.

அதிகாலை 1-2 மணிக்கு படுப்பவனை அவ்வளவு சீக்கிரம் எழுப்ப மனைவியே துணிந்ததில்லை. ஆனாலும் நாய் தனது சங்கீத குரலால் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவனை அதிகாலை 5 மணிக்கே அலறிக் கொண்டு எழ வைப்பதில் வெற்றி கண்டது. 5 மணியிலிருந்து 5.45 மணி வரை இருவரும் வாக்கிங் போவார்கள். பின்னர்  காலை 7 மணி அளவில் நாய்க்கு காலை உணவு வைக்க வேண்டும். வேலைக்கு கிளம்பும் சமயம் நாயை வீட்டிற்குள் கொண்டு வந்து கட்டினால் அதோடு இரவு சரியாக 8 மணியளவில் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போயே தீர வேண்டும். அப்படி  இல்லையென்றால் அதற்குரிய தண்டனையாக வீட்டை கழுவ வேண்டியதிருக்கும். 9 மணியளவில் இரவு உணவை வைக்க வைக்க வேண்டும்

இதுவே அவனது தினசரி வழக்கமானது.  விரும்பி ஏற்றுக் கொண்ட சுமை. இறக்கி வைக்க முடியாது. தவிர இதில் அவன் பின்வாங்கி விட்டால் இனி ஆயுளுக்கும் “நாய்” என்று எழுத்துக்கூட்டி படித்தாலும் முகவாய் கட்டையில் பூரிக்கட்டையால் அடி விழலாம். நாமே உருவாக்கிக் கொண்ட இந்த சுகமான சுமையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டியதுதான், கௌரவமாவது மிஞ்சும் என முடிவெடுத்தான். அதிலும் ஒரு பிரச்னை இருந்தது. மழைத்தூறும் சமயத்தில் நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது இயலாத காரியம். அப்போதெல்லாம் வீட்டைக் கழுவினான்.

அடுத்ததாக நாய்க்குத் தடுப்பூசி போட வேண்டும். இந்தக் குட்டிக்கு இன்னும் போடவில்லை என்று ஏற்கனவே நண்பன் சொல்லியிருந்தான். தடுப்பூசி போட நல்ல கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு முன்பாக அங்கே எல்லாம் எட்டிக் கூட பார்த்ததில்லை. தன் வட்டாரத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவர் பட்டியலை Yellow Pages புத்தகத்தில் தேடினான். காலாற நடந்து போகிற தூரத்தில் ஏதும் இல்லை. நாயை வாகனத்தில்தான் ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு விடுமுறை நாளன்று நாயை அங்கே கொண்டு சென்றான்.

‘1இல் 9 அடங்கிய ஊசியா? இல்லை 1இல் 41 அடங்கிய ஊசியா?’

முதல் கேள்வியே திக்குமுக்காட வைத்தது.

“உங்களுக்கு எதைப் போடணும்னு தோணுதோ அதைப் போடுங்க..” ஒருவழியாக தன்னை நோக்கி ஏவப்பட்ட அணுகுண்டை டாக்டர் பக்கமே திருப்பி விட்டான். தன் நாய்க்கு ஏதும் ஏடாகூடாமாகி விடக்கூடாது என்ற கவலையும் கூடவே சேர்ந்துக் கொண்டது. ஒருவழியாக.. பல கேள்விகளால் அவனை தொடர்ந்து வறுத்தெடுத்து.. நாய்க்கு 1இல் 9 அடங்கிய ஊசியே போதும் என டாக்டர் முடிவு செய்தார்.

ஊசி போட்ட பிறகு, இன்னும் 1 வாரத்திற்கு நாயைக் குளிப்பாட்டக் கூடாது என்று தொடங்கி தனியாக 5-6 கட்டளைகள் இட்டார். எல்லாவற்றையும் கர்ம சிரத்தையும் அவனும் கேட்டுக் கொண்டான். நாய்க்கு ஏதும் ஆகிவிடக் கூடாதல்லவா? நாளைய சரித்திரத்தில் நாய் வளர்க்கத் தெரியாதவன் என்ற அவப்பெயர் எக்காரணத்தைக் கொண்டும் தன்னோடு ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

ஊசி போட்டு விட்டு வந்த இரண்டு நாட்களும் நாயின் ஒவ்வொரு அசைவையும் உற்றுக் கவனித்தான். ஓகே! எல்லாம் சரியாக இருக்கிறது.  நமக்கு நாய் வளர்க்கத் தெரிந்து விட்டது. அவனுக்குள்ளேயே ஒரு பெருமித உணர்வு பொங்கி அடங்கியது.

இப்போது அவனுக்கு எல்லாம் பழகிப் போய் விட்டது. முன்கோபியான அவனுக்கு ஓர் இமாலய பொறுமையும் கைக்கூடி வந்திருக்கிறது. கூடவே “பரவாயில்லையே வீட்டு வேலையும் நல்லா செய்றீங்களே” என்ற மனைவியின் பாராட்டும் கிடைத்துள்ளது. (இந்தப் பாராட்டின் பின்னணியில் என்னவெல்லாம் இருக்கோ????)

இப்போது அவன் நாய்க்கு லைசன்ஸ் வாங்கும் முயற்சியில் இருக்கிறான். இப்போது இல்லையெனினும் என்றெனும் ஒருநாள், அவன் “நாய் வளர்க்கும் நுணுக்கங்கள்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாம். அப்படியொரு நிலை வரும் சமயத்தில் தமிழுக்கு புது வரவு என ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர இந்த மலையக தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை!

என்ன, அவன் யாரென்றா கேட்கிறீர்கள்?. ஹிஹிஹிஹிஹி…

மங்காத்தா – தியேட்டரில் நடந்த கலாட்டா!

மங்காத்தா “தல”யின் 50வது படம். வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்பந்தம். அதற்கு தல தேர்ந்தெடுத்த நபர்  வெங்கட் பிரபு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் அதிர்ச்சி அதுதான். மிகப் பெரிய சவால். இந்த இளைஞனால் முடியுமா என்றுதான் எங்கேயும் பேசிக் கொண்டார்கள். ஆனால் வெங்கட் பிரபுவின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் அஜீத். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஆமாம், சொல்லி அடித்த “கில்லி”யை விடவும் சொல்லாமல் அடித்த மங்காத்தாவுக்கு இப்போது மவுசு அதிகம். மீண்டும் விஜய்யுடனான அடுத்த சுற்று மங்காத்தா ஆட்டத்துக்கு “தல” ரெடி, வெல்டன் ‘தல’! படத்தைப் பற்றி கேட்டால் இவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றபடி பார்த்து ரசிக்க வேண்டிய படமிது.

இந்த பதிவு படத்தை பற்றி சொல்வதற்காக அல்ல. படத்தைப் பார்க்கப் போனபோது நடந்த டிக்கெட் கலாட்டா பற்றி சொல்வதற்காகவே… மங்காத்தா நம் நாட்டில் கடந்த 1ஆம் தேதி திரையிடப்பட்டது.  நான் 3ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9மணி ஷோவுக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். இடம்: ப்ரைம் மால், கெப்போங். லோட்டஸ் பிக் சினிமா தியேட்டர்.

பொதுவாக நான் தியேட்டருக்கு போய் டிக்கெட் எடுப்பதில்லை. நேரடியாக ஒன்லைன் வழியாக டிக்கெட் வாங்கி விடுவேன். இந்த முறையும் அப்படிதான் Couple சீட்டுக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினேன். விலை 13 வெள்ளி மட்டுமே. இந்த (குறைந்த) விலை எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் அதைப்பற்றி எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. நேராக தியேட்டருக்குப் போய்விட்டேன். கூடவே நிறைமாதமாக இருந்த என் மனைவி.

எங்கள் அரங்குக்கான சீட்டிங் விளக்கு எரியத் தொடங்கியவுடன் உள்ளே போனோம். வாசலில் டிக்கெட் பரிசோதகர்களாக நம் இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். டிக்கெட்டை காட்டியவுடன் உள்ளே போக அனுமதித்தவர்கள். பின்னர் என்னை மட்டும் அழைத்து இது ஒரு ஆள் அமர்வதற்கான டிக்கெட் மட்டுமே என்றார்கள்.

இது Couple சீட். எப்படி தனியாக ஒரு ஆளுக்கு மட்டும் கட்டணம் வசூலித்திருப்பீர்கள் என்று கேட்டேன். தவிர ஒன்லைனில் டிக்கெட் வாங்கும் போது Couple சீட் என்றால் (குறிப்பாக கிஎஸ்சி தியேட்டர்) இருவருக்கும் சேர்த்தே விலை போட்டிருப்பார்கள். மேலும் பிக் சினிமா தன்னுடைய டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தில் Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்று அறிவிப்பு ஏதும் போடவில்லை. பிறகெப்படி அது எனக்குத் தெரியும் என்றும் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஆங்கிலப் படமென்றால் நான் சொல்வது போல இரண்டு பேருக்கும் சேர்த்தே விலை காட்டப்படும் என்றும் தமிழ்ப்படத்திற்காக அந்த முறை மாற்றப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். இருந்தாலும் பரவாயில்லை. உள்ளே இடம் இருந்தால் நீங்கள் அங்கே அமர்ந்துக் கொள்ளலாம் என்றும் பச்சைக் கொடி காட்டினர்.

தியேட்டர் உள்ளே போனால், நான் பதிவு செய்த இடத்தில் இன்னொரு ஜோடி அமர்ந்திருந்தது.  அவர்களிடம் கேட்டபோது, தனித்தனியாக வேறு சீட்டுக்கு பதிவு செய்தவர்கள் ஒழுங்காக என் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

அதாவது நான் பதிவு செய்த  சீட் ஏ7-ஏ8 என்றால் என்னிடம் ஏ7 இருக்க அவரிடம் ஏ8 இருந்தது. அவருடைய காதலியோ சி7 சீட்டுக்கான டிக்கெட்டை வைத்திருந்தார். அவர்கள் பிக் சினிமா முறைப்படி Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்கி இருந்தாலும் வேறு வேறு சீட்டுக்கான டிக்கெட்டை வாங்கி இருந்தார்கள். எப்படியும் ஒருவர்தானே ஏ7 டிக்கெட் வாங்கி இருப்பார். அவரிடம் சொல்லி இடம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

டிக்கெட் குழப்பம் அங்கேயே தொடங்கி விட்டது. அதற்குள் படமும் ஆரம்பமாகி விட்டது. 3 திரையரங்கில் மங்காத்தா அன்று ஒரே காட்சியாக திரையிடப்பட்டிருந்தாலும் எல்லாமே House Full. நிறைய பேர் திரையரங்கின் உள்ளே வந்த வண்ணமிருந்ததால் மேலும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்காமல் வெளியே வந்து டிக்கெட் பரிசோதகர்களிடம் பிரச்னையை விளக்கினேன்.

“நீங்க மட்டும் இல்லண்ணே.. இந்த முறை நிறைய சீட்டிங்ல நிறைய குழப்பம். தமிழ்ப்படம் போட்டாலே இப்படிதான் 1000 குழப்பம் வரும்” என்று அவர்கள் தங்களுடைய சோக குமுறலை சொல்ல ஆரம்பித்தபோதே கிட்டத்தட்ட 20 பேர் அங்கே வந்து தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் உட்கார்ந்திருப்பதாக முறையிட்டனர். “நான் சொல்லலை?” என்றவாறு ஒருவர் சிரித்துக் கொண்டே அவர்களை சம்பந்தப்பட்ட 10ஆம் எண் கொண்ட அரங்கிற்குள் அழைத்துப் போனார்.

அங்கிருந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர் அன்றைய டூட்டி சூப்பர்வைசரை அழைத்து என் பிரச்னை குறித்து சொன்னார். நிலைமையைப் புரிந்துக் கொண்ட அவரோ, இன்றைய அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட் (நள்ளிரவு 12 மணி உட்பட) அனைத்தும் விற்று முடிந்து விட்டதென சொல்லி, நாளைக்கு முதல் ஷோவுக்கான (நண்பகல் 12மணி) மாற்று டிக்கெட் தரட்டுமா என்று கேட்டார். மேலும் நடந்துவிட்ட கேளாறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில்  26 வெள்ளி மதிப்புடைய சீட்டை நான் வாங்கிய விலைக்கே தருவதாக சொன்னார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சம்மதித்தேன். டிக்கெட் எடுத்து வர போய்விட்டார்.

அப்போது, 11ஆம் அரங்கிலிருந்து வெளிவந்த ஒரு ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆள் அமர்ந்திருப்பதாக மிகவும் கோபமாக முறையிட்டனர். நேற்றே தாங்கள் டிக்கெட்டை பதிவு செய்து வாங்கி விட்டதாகவும், எப்படி அந்த இடத்தில் வேறு ஆள் அமர முடியும் என்றும் கடும் டென்ஷனோடு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேள்வி கேட்ட தோரணையும் காட்டி முகபாவங்களும் கடுமையானவை. தங்களது அதிருப்தியை புலப்படுத்தும் வகையில் அடிக்கடி  தலையை வேறு ஆட்டிக் கொண்டார்கள். பரிதாபத்திற்குரிய டிக்கெட் பரிசோதகரோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

மௌன சாட்சியாக நானும் என் மனைவியும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாக இது போன்ற சமயங்களில் நான்தான் மிகுந்த டென்ஷன் ஆவேன். என்னை சமாளித்து சண்டை போடாமல் அழைத்து வருவதற்குள் என் மனைவி பெரும் போராட்டமே நடத்த வேண்டியதிருக்கும். ஆனால் அன்று ஏனோ கோபமே வரவில்லை. நடப்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே தோன்றியது.

அந்த ஜோடி கொடுத்த டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அந்த டிக்கெட் பரிசோதகர், பிரகாசமான முகத்துடன் “அண்ணே நீங்க போக வேண்டியது 12ஆம் அரங்கம். 11வது அரங்கத்துல போய் உங்க சீட்டைத் தேடுனா எப்படியண்ணே கிடைக்கும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார், ஒரு கணம் ஆடிப்போன அந்த ஜோடி, அசடு வழிய மன்னிப்பு கூட கேளாமல் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு 12ஆம் அரங்கினுள் ஓடியது. அதற்குள் பலரை இடம் மாற்றி அமர வைத்த களைப்பில் வெளியே வந்தார் 10ஆம் எண் அரங்கத்தில் நுழைந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர்.

அந்த சமயத்தில் 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த மேலும் 2 ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக முறையிட்டார்கள். அவர்களையும் உள்ளே அழைத்துக் கொண்டு போனார் வெளியே வந்த பரிசோதகர். எங்களுடன் இருந்தவரோ உள்ளே போனவரைப் பார்த்தவாறு, “தமிழப்படம் போட்டாலே இப்படிதான்ணா, ஒவ்வொரு ஷோவும் ஆரம்பிச்சு முடிகிற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணும்” என்று கவலையுடன் சொன்னார். உள்ளே போன பரிசோதகர் வெளியே வந்த சமயத்தில், எங்களுக்கான டிக்கெட்டை எடுத்துவர போன சூப்பர்வைசரும் டிக்கெட்டோடு வந்தார்.

அவரிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்புகிற சமயத்தில் மீண்டும் 12 அரங்கிலிருந்து மேலும் 5 பேர் வெளியே வந்தார்கள். தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த பரிசோதகர் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்தார். சிரித்தார். தன்னுடைய நண்பர்களிடமும் காட்டினார். அவர்களும் சிரித்தார்கள். அங்கேயே ரொம்ப நேரம் நின்று பேசிக் கொண்டிருந்த நானும் அவர்கள் நட்பு வளையத்தில் இணைந்து விட்ட காரணத்தினால் எனக்கும் டிக்கெட்டைக் காட்டினார்கள். அதிர்ந்தே போனேன். அவர்கள் காட்டிய 5 டிக்கெட்களிலும் 2ஆம் தேதி, இரவு 9மணி காட்சி என போட்டிருந்தது.

(அடப்பாவிங்களா… நேற்றைய ஷோவுக்கான டிக்கெட்டை இன்னைக்கு கொண்டு வர்றீங்க?? டிக்கெட் வாங்குனா என்ன தேதி எத்தனை மணி ஷோன்னு கூடவா பார்க்க மாட்டீங்க? இல்லை முதல் நாள் ஷோவைப் பார்த்திட்டு திரும்ப அதே டிக்கெட்டை கொண்டு வருவீங்களா? எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?)

பி.கு: காருக்குள் வந்து நானும் என் மனைவியும் டிக்கெட்டை சரியாகப் பார்க்காமல் விஸ்வாமித்திரர் லெவலுக்கு கோபப்பட்ட ஜோடியையும் நேற்றைய டிக்கெட்டை வைத்துக் கொண்டு மறுநாள் படம் பார்க்க வந்த நபர்களையும் நினைத்து  சிரித்த சிரிப்பை வேறு யாரேனும் பார்த்திருந்தால் எங்களை மனநோயாளிகள் என்று நினைத்திருக்கக் கூடும்.

தமிழக தேர்தல் 2011 – மீண்டும் முதல்வராக ஜெ!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் வென்று  மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தனித்தே ஆட்சியமைக்கும் வகையில் மொத்தம் 151 இடங்களில் அது வெற்றியை பதிவு செய்துள்ளது. திமுக கூட்டணி வெறும் 37  இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிலும் திமுக, விஜயகாந்தின் தேமுதிக (26) கட்சியை விட ஒரு எண்ணிக்கை அதிகமாக 27 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. விடாப்பிடியாக நிறைய இடங்களை திமுகவிடம் கேட்டு வாங்கிய காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதன் வழி ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று தமிழர் புத்தாண்டா?

காலையிலிருந்து கிட்டத்தட்ட 20 புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சல்கள் வந்துவிட்டன இதுவரை. நேரம் ஆக-ஆக இதன் எண்ணிக்கை கூடலாம். தவிர்க்க முடியாமல் இதற்கு நான் பதிலும் அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனாலும் மனசுக்குள் நெருடல். இன்று தமிழர் புத்தாண்டா?

இல்லவே இல்லை. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாள்தான் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவன் நான்.

 ஆனாலும் நம் மக்களின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. பல முறை இது குறித்து நான் விளக்கிய போதெல்லாம் கருத்து வேறுபாடுகள்தான் அதிகரிக்கிறதே தவிர, யாரும் இதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை.

கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பல சமயம் விட்டுக் கொடுத்து போக வேண்டியதிருக்கிறது. தவிர, என்னை விட வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்து சொல்லும்போது, முகத்தில் அடித்தாற்போல இன்று நீங்கள் சொல்வது போல் தமிழர் புத்தாண்டு இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை.

நான் செய்வது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால் தன்னை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கின்ற மூடர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் செய்ய வேண்டிய வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட வேண்டியதுதான்.

அதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு இப்போதெல்லாம் முன்பு போல விவாதம் செய்வதில்லை. புன்னகைத்து விட்டு நகரப் பழகிக் கொண்டிருக்கிறேன். இது, மூன்று வகையில் எனக்கு உதவுகிறது.

1) என் நேரம் மிச்சப்படுகிறது.

2)என் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

3)என்னைக் கண்டதும் ஏதோ விரோதியைப் பார்ப்பது போல் யாரும் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.

மற்றபடி என் பதிவைப் படித்து விட்டு “அதெப்படி நீ இப்படி சொல்லலாம்… ” என்று ஆரம்பிப்பவர்கள், தயவு செய்து கீழே படித்து விட்டு கேள்வியைத் தொடருங்கள்.

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரிய கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
– பாரதிதாசன்.